Thursday, April 29, 2010

துறவி நித்தியும் சாஃப்ட்வேர் பெண்ணும்





நித்தி என்னும் துறவியிடம் வந்த அந்த இளம் பெண் ஒரு சாஃப்ட்வேரில் பணிபுரிபவர்.

அவர் துறவியிடம் கேட்டார்.

"ஸ்வாமி... நான் பாவப்பட்டுவிட்டேன். எனக்கு விமோசனம் தாருங்கள்...!"

துறவி கேட்டர்.

"என்ன பாவம் அம்மா செய்தாய் நீ...?"

"எனக்கு தலைக்கனம் ஏறிவிட்டது. நான் தினமும் இருபது முறை கண்ணாடி பார்க்கிறேன். நான் எவ்வளவு அழகாயிருக்கிறேன் என்று நானே பெருமைப் பட்டுக்கொள்கிறேன். இது பாவம்தானே...?"

துறவி நித்தி அந்தப் பெண்ணை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஒரு சலிப்பான குரலில்  சொன்னார்.

"நீ அழகாய் இருப்பதாய் நினைப்பது... பாவம் இல்லையம்மா, அது  தவறு...!".
.
.
.

Tuesday, April 27, 2010

ரறா ரறா...




நான்காம் வகுப்பு படிக்கும் என் மகன் டேனிக்கு அன்று பள்ளியில் விடுமுறை விண்ணப்பம் எழுதுவதை வீட்டுப் பாடமாகக் கொடுத்திருந்தார்கள்.

அதுவும் பத்து நாள் விடுப்பு கேட்டு விண்ணப்பம் எழுத வேண்டும்.

அவனும் அவன் அப்பாவும்தான் மிக அக்கறையாய் அந்த விடுப்புக் கடிதத்தை தயார் செய்ய முயன்று கொண்டிருந்தார்கள்.

அவனுடைய அப்பா அவனுக்கு மிக உதவுவதாய் நம்ப வைத்து அவனையே எழுத வைத்து விடுவார்.

கேட்டால் அப்போதுதான் அவன் கற்பனைத் திறன் வளரும் என்பார்.

நிறைய நேரம் விவாதித்த பிறகு மகனையே விண்ணப்பக் கடிதத்தை எழுதிவைக்கச் சொல்லிவிட்டு என்னிடம் கண்ணைக் காட்டிவிட்டு வெளியே கிளம்பிவிட்டார் அவர்.

அதற்கப்புறம் கொஞ்ச நேரம் போராடிய பிறகு விடுமுறை விண்ணப்பத்தை ஒரு மாதிரி எழுதி என்னிடம் கொண்டு வந்தான் என் மகன்.

அதை படித்துப் பார்த்தால் ஓரளவு குறைகளற்று ஒரு நல்ல விண்ணப்பக்  கடிதத்தையே எழுதியிருந்தான்.

அதுவும் விடுப்புக்குக் காரணம் தலைவலியாம்.

சிரித்துக் கொண்டே படித்துக் கொண்டு வந்த நான் ஒரு எழுத்துப் பிழையைக் கண்டதால் அதைச் சரி செய்ய எண்ணி அவனிடம் கூறினேன்.

"எல்லாம் சரி டேனி... இந்த லீவ் லெட்டர்ல விடுமுறைக்கான காரணம் என்கிற இடத்துல சின்ன 'ர' போடணும்... நீ போட்டிருக்கிற பெரிய 'ற' தப்பு...!" என்றேன்.

அதற்கு அவன், "போம்மா... உனக்கு ஒண்ணுமே தெரியல.... அங்க பெரிய 'ற' தான் போடணும். அப்பாதான் பத்து நாள் லீவ் கேக்கணும்ங்கறதால காரணம் பெருசா இருக்கணும்னு சொன்னாங்க...!" என்றான்.
.
.
.

Friday, April 23, 2010

ஒரு மனோதத்துவ டாக்டர்...



பாபு அன்று ஒரு மனோதத்துவ டாக்டரைச் சந்திக்க வந்திருந்தான்.


"டாக்டர்... எனக்கு ஒரு பிரச்சினை...." என்றவன் தொடர்ந்தான்.

"நான் கட்டிலில் படுக்கும் போதெல்லாம் யாரோ கட்டிலின் கீழே  படுத்திருப்பது போலவே தோன்றுகிறது. தண்டுவடத்தில் பிரச்சினை இருப்பதால் என்னால் கீழே படுக்கவும் முடியாது. இதற்கு நீங்கள்தான் ஏதாவது செய்தாக வேண்டும்...?"

டாக்டர் யோசித்தார்.

"இதைத்தான் கட்டிலோஃபோபியானு சொல்லுவாங்க. ஒரு ரெண்டு வருசம் வாரம் மூணு தடவைனு ட்ரீட்மென்டுக்கு வாங்க.... சரி பண்ணிடலாம்...!"

"ஃபீஸ் டாக்டர்..."

"அது கம்மிதான்... விஸிட்டுக்கு ஐநூறு ரூபாய்...!".

"சரி டாக்டர்..."

போன பாபு வரவேயில்லை.

ஆறு மாதத்துக்கு பிறகு டாக்டர் பாபுவைச் சாலையில் சந்திக்க நேர்ந்த போது கேட்டார்.

"என்ன... அப்புறம் வரவேயில்ல...?"

பாபு கேட்டான்.

"எது... அந்த ஐநூறு ரூபாய் விசிட்டா...? எங்க வீட்டு ஆசாரி வெறும்

ஐம்பது ரூபாயில என் வியாதிய சரி பண்ணிட்டார்..."

டாக்டர் ஆச்சர்யப்பட்டுக் கேட்டார்.

"எப்படி...?"

"ஐம்பது ரூபாயக் கொடுத்ததும் கட்டிலோட நாலு காலையும் வெட்டிட்டார்...!" என்றான்.
.
.
.

Thursday, April 22, 2010

கில்லி



எனக்கு ஏன் தான் இந்த வயதில் இந்த ஆசை வந்தது என்று தெரியவில்லை.

சிவராத்திரிக்கு சிவராத்திரி குலதெய்வம் கும்பிட ஊருக்குப் போவது எங்கள் வழக்கம்.

அந்த வருஷமும் அப்படித்தான் போயிருந்தேன்.

சாமி கும்பிட இன்னும் நேரம் இருக்கும் போது அந்த ஊரைச் சுற்றிப் பார்க்கப் போனேன்.

ஒரு தெருவில் சிறுவர்கள் கில்லி தாண்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

எவ்வளவு காலம் ஆச்சு இதை விளையாடி...?

இன்று மறுபடி ஒருமுறை விளையாடிப் பார்ப்போமா...?

மனதிற்குள் ஒரு உற்சாகம் துள்ளியது.

சிறுவர்களிடம் வெட்கத்தைவிட்டுக் கேட்டுமாச்சு.

"அங்கிள்... யாராவது பாத்தா சிரிப்பாங்க...!".

"பரவாயில்லடா...!".

கொஞ்ச நேரத்தில் வித்தை பிடிபட விளையாட்டு சூடுபிடிக்க ஆரம்பித்தது.

விளையாடிக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த ஒரு பெரியவர், "நானும் வருகிறேன்...!" என்று இணைந்து கொண்டார்.

அவரும் நானும் எதிரெதிர் டீமில் விளையாட, விளையாட்டு அனல் பறந்தது.

ஒவ்வொரு சாட்டும் அருமையாய் அடித்துவிட்டு அவர், "நானெல்லாம் சின்ன வயசுல..." என்று பெருமை வேறு.

அது எனக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் அந்தப் பெரியவர் என்னை உசுப்பேற்ற அதை அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்.

உண்மையில், அவர் மிக அருமையாய் வேறு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது என்னுடைய டர்ன்.

நான் அடிக்கும் பாதையில் வேப்பமரம் ஒன்று பூதாகரமாய் நின்றுகொண்டிருந்தது.

கில்லியை அடிக்க கையை ஓங்கியிருப்பேன்.

உடனே அந்தப் பெரியவர், "நான்... என் சின்ன வயசுல அந்த வேப்ப மரத்தோட உயரத்தைத் தாண்டி எல்லாம் கில்லியை அடிச்சிருக்கேன்...!'.

உடனே சிறுவர்கள் எல்லோரும்,"அங்கிள் விடாதீங்க...நீங்களும் மரத்தைத் தாண்டி அடிங்க...அடிங்க...!" என்று என்னை உசுப்பேற்றத் தொடங்கினர்.

எனக்கு ரத்தம் கொதித்தது.

 சவாலில் ஜெயித்தே ஆகவேண்டும்.

குறி பார்த்து நேராய் வேப்பமரத்தின் உயரத்திற்குத் தூக்கி அடித்தேன்.

கில்லி பறந்தது.

மரத்தின் உயரம் நோக்கி மேலே மேலே போய்... தாண்ட வேண்டிய நேரத்தில் கில்லி டக்கென்று ஒரு கிளையில் மாட்டிக் கொண்டது.

"என்ன அங்கிள் நீங்க...!' சிறுவர்கள் எல்லோரும் சலித்துக் கொண்டு கில்லியை எடுக்க மரத்தடியை நோக்கி ஓடினார்கள்.

சிறுவர்கள் இல்லாத அப்போதுதான்...  என்னைக் கடுப்பேற்றுகிற மாதிரி அந்தப் பெரியவர் மெதுவாய்ச் சொன்னார்.

"என்னோட சின்ன வயசுல, இந்த வேப்ப மரம் சும்மா ஒரு மூணு அடி உயரம்தான் இருக்கும் பாத்துக்க...!".
.
.
.

Wednesday, April 21, 2010

சிறுகச் சிறுகச் சேர்த்து...


என் மகன் டேனிக்கு இது பத்தாவது பிறந்தநாள்.

டேனியின் இந்தப் பிறந்தநாளுக்கு உபயோகமாய் ஏதாவது கற்றுக் கொடுப்பது என்று முடிவு செய்தேன்.

"டேனி... இந்த வருஷம் உன் பிறந்த நாளுக்கு உன் பெயரில் ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணலாமா...?".

டேனியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

"என் பெயரிலா... எனக்கே எனக்கான அக்கவுண்டா...?".

"ஆமாம்...!" என்ற நான் அவனை அழைத்துக் கொண்டு பேங்கிற்குப் போனேன்.

உள்ளே சென்று புது அக்கவுண்டிற்கான அப்ளிகேஷனை வாங்கி அவன் கையில் கொடுத்து, "இந்தா... இந்த அப்ளிகேஷனை நீயே ஃபில் பண்ணு..." என்றேன்.

மெல்ல ஒவ்வொன்றாய்ப் படித்துப் படித்து மிகச் சரியாய் எழுதிக் கொண்டே வந்தவன் - 'நீங்கள் முன்பு சேமிப்புக் கணக்கு வைத்திருந்த இடத்தின் பெயர்...' என்று பேங்கின் பெயர் கேட்டிருந்தது.

அந்த இடத்தில் கொஞ்ச நேரம் யோசித்த என் மகன் டேனி...

...பின்பு கீழ்க் கண்டவாறு எழுதினான்.

"உண்டியல்"
.
.
.

Tuesday, April 20, 2010

நீங்க ரொம்ப சப்ப ஃபிகரு



அமுதா தினமும் போகும் அந்த வழியில்தான் அன்றும் வேலைக்குப் போனாள்.

ஆனால், அன்று கதிரேசன் வீட்டின் வாசலில் கட்டியிருந்த கூண்டிலிருந்த அந்தக் கிளி அவளைக் கூப்பிட்டது.

"ஏய் பெண்ணே... இந்தா பச்சப் புடவை...!".

அமுதாவுக்கு அந்தக் கிளி தன்னைத்தான் கூப்பிடுகிறது என்றவுடன் விபரீதம் புரியாமல் உற்சாகமாய்,"என்ன...?" என்று கேட்டாள்.

சாலையில் சென்று கொண்டிருக்கும் அனைவரும் இவர்கள் இருவரும் பேசுவதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கிளி ஒன்றும் பேசாமல் இருக்கவே அமுதா மீண்டும்,"என்ன...?" என்றாள்.

கிளி உடனே வடிவேலு பாணியில்,"நீங்க.. நீங்க... ரொம்ப சப்ப ஃபிகரு...!" என்று மிக மரியாதையாய்ச் சொன்னதும் சாலையில் நின்று கொண்டிருந்த அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

அமுதாவுக்கு அசிங்கமாய்ப் போய்விட்டது.

இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் போய்விட்டாள்.

அன்று மாலை வேலை விட்டு வரும்போது அந்தக் கிளி மறுபடி கூப்பிட்டதும் இல்லாமல், "ஏய் பெண்ணே... நீ உண்மையிலேயே ரொம்ப சப்ப ஃபிகரு...!" என்றது.

அமுதாவுக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை.

மறுநாள் காலையிலும் கிளி அவளை அழைத்து, "நீ ரொம்ப சப்ப ஃபிகரு...!" என்று சொல்லி... மாலையிலும் இதுவே தொடர அமுதா கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள்.

நேராய் கதிரேசன் வீட்டுக்குள் போய் கோபமாய், "இதாப் பாரு கதிரேசு... உங்கிளி போகைல வாரைல எல்லாம் ரொம்பக் கேலி பேசுது. இன்னொரு தடவ இப்பிடிப் பேசுச்சுன்னு வச்சிக்கோ... அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ஆமா...!" என்று காச்சுமூச்சுன்னு கத்த...

... கதிரேசன் "நாளைலருந்து இது நடக்காமப் பாத்துக்கறேன்..."னு அவளை சமாதனப்படுத்தி அனுப்பினான்.

மறுநாள்...

அமுதா என்னதான் நடக்கிறது என்று பார்க்கும் முடிவோடு அந்தத் தெருவில் மெதுவாய் நடந்து போனாள்.

கிளி அவள் வருவதையே பார்த்துக் கொண்டிருந்தது.

ஒன்றும் சொல்லவில்லை.

அவள் நேருக்கு நேராய் வரும் போதும் பார்த்துக் கொண்டிருந்தது.

ஒன்றும் சொல்லவில்லை.

அவள் கடந்து போகையில் மறுபடி கூப்பிட்டது, "ஏய் பெண்ணே...?".

அமுதா நின்று கோபமாய்த் திரும்பினாள்."என்ன...?"

அந்தக் கிளி மெல்லச் சொன்னது.
 
"நான் என்ன சொல்லுவேன் என்று உனக்கே தெரியுமே...!".
.
.
.

துறவியும் வாழ்க்கையும்



மணியின் திருமண வாழ்க்கை அவ்வளவு இன்பமானதாய் இல்லை.

எந்நேரமும் மனைவியுடன் சண்டையும் சச்சரவும்.

வாழ்க்கையே வெறுத்துப் போய் ஒரு துறவியிடம் வந்தான்.

துறவி சொன்னார்.

"நீ உனது மனைவி சொல்வதைக் கவனிக்கக் கற்றுக்கொள்...!".

மணி துறவி சொன்னதை மனதில் ஏற்றுக் கொண்டு அப்படியே செய்ய ஆரம்பித்தான்.

வாழ்க்கை முன்னிலும் இனிதாய் மாறிப் போனாலும் மணிக்கு இன்னும் ஏதோ குறை.

ஒரு மாதம் கழித்து துறவியிடம் சென்றான்.

"அய்யா...  நீங்கள் சொன்னபடி இப்போதெல்லாம் என் மனைவியின் ஒவ்வொரு வார்த்தையையும் இதயபூர்வமாக கவனிக்கிறேன். அதற்குப் பின் என்ன தேவையோ அதையும் செய்கிறேன். என் வாழ்க்கை மாறிவிட்டது. இப்போது மிக இன்பமாய்ப் போகிறது...!".

துறவி சிரித்தபடியே சொன்னார்.

" நீ இனி வீட்டுக்குப் போனதும் மனைவியின் வார்த்தைகளை மட்டுமல்ல... அவளுடைய மௌனத்தையும் கவனிக்கக் கற்றுக் கொள். வாழ்க்கை இன்னும் இன்பமாய் மாறிவிடும்...!".
.
.
.

Monday, April 19, 2010

ஒரு ஸிக் ஜோக்



தேவராஜுக்கு ஹாஸ்பிடலில் இருந்து போன் வந்தது.

"ஹலோ... தேவராஜ் இருக்காரா...?".

தேவராஜ் பதிலளித்தார். "நான் தேவராஜ்தான் பேசறேன்...!'.

மறுமுனை தொடர்ந்தது.
 
"நான் எமர்ஜென்ஸி ரூம் டாக்டர் பேசறேன். உங்க மனைவி ஒரு சீரியஸ் கார் ஆக்ஸிடென்ட்ல மாட்டி ஆபத்தான கட்டத்துல இருக்காங்க.அதுல உங்களுக்கு ஒரு கெட்ட செய்தியும் ஒரு நல்ல செய்தியும் இருக்கு. கெட்ட செய்தி என்னன்னா உங்க மனைவி இந்த விபத்துல கை கால்களை இழந்துவிட்டார். இனி வாழ்நாள் முழுவதும் அவரால் அடுத்தவர் உதவி இல்லாமல் உண்ணவோ மற்ற செய்கைகளோ செய்ய முடியாது...!".
 
"கடவுளே...!" கேட்ட தேவராஜ் அரண்டு போய்," நல்ல செய்தி என்றீர்களே... அது என்ன...?" என்று கேட்டார்.
 
மறுமுனையில் அந்த டாக்டர் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.
 
"நான் சும்மா ஜோக்குக்குச் சொன்னேன். உண்மையில் உன் மனைவி இறந்துவிட்டாள்...!".
.
.
.

Saturday, April 17, 2010

கஞ்சனின் ஸில்வர் ஜூப்ளி




சங்கருக்கு கல்யாணம் முடிந்து இருபத்தைந்து வருடங்கள் முடிந்துவிட்டது.

அதை கொண்டாட தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு ஒரு ரெஸ்டாரென்டுக்குள் நுழைந்தார்.

ஒரு நல்ல டேபிளைப் பார்த்து அமர்ந்ததும் தன் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.

"அப்புறம்... இன்னொரு ஸ்வீட் சாப்பிடறியா...?".

மனைவி ஆச்சர்யத்துடன் கேட்டாள். "என்னங்க... இப்பத்தானே உள்ளேயே நுழையறோம். அதுக்குள்ளே இன்னொரு ஸ்வீட் சாப்பிடறியானு கேக்கறீங்க..."என்றாள்.

அதற்கு சங்கர், "கல்யாணம் ஆன புதுசுல ஒண்ணு வாங்கிக் கொடுத்தனே...!"
.
.
.

Friday, April 16, 2010

ஜில்லுனு ஒரு சாப்பாடு...



நாராயணன் ஒரு மேடைப் பேச்சாளர்.

அவர் இறந்ததும் சொர்க்கத்துக்குப் போனார்.

சித்திரகுப்தன் அவரை அழைத்து, "தம்பி... நீ ரொம்ப நல்லவன்.அதனால உனக்கு சொர்ர்க்கம் கிடச்சிருக்கு. ஆனாலும் உனக்கு இங்கே ஒரு தண்டனை இருக்கு. அதுக்கு ஒத்துக்கிட்டீனா இங்கேயே எவ்வளவு வருசம் வேணும்னாலும் இருக்கலாம். என்ன சொல்லற..?".

நாராயணன் கேட்டார்.

"சொர்க்கத்துல இருக்கறதுன்னா என்ன தண்டனைனாலும் சரி. என்ன தண்டனைனு மட்டும் சொல்லுங்க போதும்..!".

சித்திரகுப்தன் பதில் சொன்னார்.

" நீ பூலோகத்துலயே வேண்டிய அளவு பேசிட்டதால இங்கே இருக்கற வரைக்கும் என் அனுமதி இல்லாம ஒரு வார்த்தைகூட பேசக் கூடாது. நான் எப்ப எவ்வளவு பேசலாம்னு சொல்றனோ... அப்ப அவ்வளவு பேசலாம். இது பிடிக்கலைனா எப்ப வேணும்னாலும் கிளம்பலாம். என்ன சொல்ற...?"

பேச்சாளனை பேசக்கூடாது என்பது எவ்வளவு பெரிய கொடுமை.
 
ஆனாலும் நாராயணன் அதை சொர்க்கம் என்பதற்காக ஒத்துக் கொண்டார்.
 
அதன் பிறகு ஐந்து வருடங்கள்... நாராயணன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் சொர்க்கத்தில் வாழ்ந்தார்.
 
ஐந்தாவது வருட முடிவில் சித்திரகுப்தன் அவர் முன் தோன்றி, "தம்பி... நீ சொர்க்கத்திற்கு வந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. நீ இப்போது நாலு வார்த்தைகள் பேசலாம்...!".
 
நாராயணன் ரொம்ப யோசித்து, "மெத்தை கல்லைப் போல் இருக்கிறது...!" என்றார்.
 
அதற்கு சித்திரகுப்தன்,"உடனே, இதைச் சரி செய்யச் சொல்கிறேன்...!" என்று மறைந்தார்.
 
அதற்கு அப்புறம்  மீண்டும் ஐந்து வருடங்கள் ஓடி விட்டது.
 
திரும்ப சித்திரகுப்தன் வந்தார்.
 
"தம்பி... நீ சொர்க்கத்திற்கு வந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. நீ இப்போது மறுபடி நாலு வார்த்தைகள் பேசலாம்...!".
 
நாராயணன் முன்பைவிட ரொம்ப யோசித்து, "சாப்பாடு ரொம்ப ஜில்லுனு இருக்கு...!" என்றார்.
 
அதற்கு சித்திரகுப்தன்,"உடனே, இதைச் சரி செய்யச் சொல்கிறேன்...!' என்று மறைந்தார்.
 
இப்படியே நாராயணன் சொர்க்கத்திற்கு வந்து பதினைந்தாவது வருடமும் முடிந்துவிட்டது.

இதுவரை எட்டு வார்த்தைகள்தான் பேசியிருக்கிறார். என்ன கொடுமை இது..? இதற்கு நரகமே மேலாய் இருக்கும் போலிருக்கிறதே...!
 
நாராயணன் மிகவும் வெறுத்துப் போயிருந்தார்.
 
இந்தமுறை சித்திரகுப்தன் வந்து திரும்பவும் வந்து, "தம்பி... நீ சொர்க்கத்திற்கு வந்து பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டன. நீ இப்போது மீண்டும் நாலு வார்த்தைகள் பேசலாம்...!".
 
வெறுத்துப் போயிருந்த நாராயணனோ கோபமாய், "நான் சொர்க்கத்தை விட்டுக் கிளம்புகிறேன்...!" என்றார்.
 
அதற்கு சித்திரகுப்தன், "ஆமாம்...ஆமாம்...  அதுதான் நல்லது. நானும் வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்.. நீ  விடாமல் சொர்க்கத்தை பற்றிக் குறை கூறிக் கொண்டே இருக்கிறாய்... கிளம்பு கிளம்பு...!" என்றார்.
.
.
.

Thursday, April 15, 2010

டேனியும் ஞானும் பின்னே என்டெ ஹஸ்பென்டும்...


அது ஒரு சாயங்கால டீ வேளை.
என் மகன் டேனியும் கணவரும் விளையாண்டு கொண்டிருக்கும்போது டீயும் கேக்கும் கொண்டு போனேன்.
அசந்தர்ப்பமாக அன்று இரண்டு துண்டுக் கேக்குகள்தான் இருந்தது.
நாங்களோ மூன்றுபேர்.
டேனிதான் கேட்டான்.
"அம்மா... ரெண்டு கேக்குதான் இருக்கு... நம்ம மூணு பேரு இருக்கமே...!".
நான் பதில் சொல்வதற்குள் என் கணவர் உள்ளே நுழைந்தார்.
"டேனி...அப்பா இப்ப ஒரு மேஜிக் பண்ணி கேக் ரெண்டையும் மூணா மாத்தட்டுமா..?".
மேஜிக் என்றதும் என் மகனின் கண்கள் விரிந்தன.
"ஹை...மேஜிக்... எங்கே பண்ணுங்க பாக்கலாம்...?".
என் கணவர் மேஜிக் எதுவும் பண்ணுவதாய் தெரியவில்லை.
மாறாக கணக்கில் தனது புலமையைக் காட்டினார்.
"டேனி... இது எத்தனை..?" என்றார் முதல் துண்டைக் காட்டி.
என் மகன்,"ஒண்ணு...!' என்றான்.
அவர் அடுத்ததைக் காட்டி, "இது எத்தனை..?" என்றார்.
"இரண்டு...!" என்றான் டேனி.
என் கணவர்,"ஒண்ணும் ரெண்டும் எத்தனை...?" என்றார்.
"மூணு..."என்ற என் மகன் டக்கென்று இரண்டு துண்டு கேக்கையும் எடுத்துக் கொண்டு சொன்னான்.
"அம்மா... இந்தா முதல் பீஸை நீ எடுத்துக்க... ரெண்டாவதை நான் எடுத்துக்கறேன். அப்பா... மேஜிக் பண்ணி வந்த அந்த மூணாவது பீஸை எடுத்துக்கட்டும்...!".
.
.
.

Wednesday, April 14, 2010

கன்னத்தில் முத்தமிட்டால்...








அது ஒரு அடர்ந்த காடு.

அதில் உள்ள ஒரு மரத்தில் ஏற ஒரு குட்டி ஆமை விடாமல் முயன்று கொண்டிருந்தது.

கொஞ்சம் முயற்சிக்கு அப்புறம் அது மரத்தில் ஏறியும் விட்டது.

ஏறி ஏறி மரத்தின் உச்சிக்குச் சென்ற அந்த ஆமை பறக்க முயற்சித்து... தன் முன்னிரு கால்களையும் ஆட்டியபடி கீழே குதித்தது. 

குதித்த ஆமை பறக்க முடியாமல் கீழே விழுந்தது.

சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும்
அதே போல ஏறி,
அதே போல பறக்க முயற்சித்து,
அதே போல கீழே விழுந்தது அந்த ஆமை.

மேலும் மேலும் இதுவே தொடர்வதையும் அந்த ஆமை மறுபடி மறுபடி தோற்றுப் போவதையும் மரத்தில் இருந்த இரு பறவைகள் கவலையுடன் கவனித்துக் கொண்டே இருந்தன.

கடைசியாய் அந்த பெண் பறவை தன் அருகில் அமர்ந்திருந்த ஆண் பறவை பக்கம் திரும்பி கவலையுடன் சொன்னது.


"என்னங்க... அவன் நம்ம கொழந்தை இல்லைங்கறதையும்... நாம அவனத் தத்து எடுத்திருக்கிறோம்ங்கற உண்மையையும் சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சிண்ணு நினைக்கிறேன்...!".
.
.
.



Tuesday, April 13, 2010

அது ஒரு கார்காலம்



சந்தோஷுக்கு அன்று அளவுக்கதிக சந்தோசம்.

அலுவலகத்தில் அவனது பதவி உயர்வுக்கு பார்ட்டி கொடுத்ததில் அவனுக்கே கொஞ்சம் ஓவராய்ப் போய்விட்டது.

மெல்லிய தள்ளாட்டத்துடன் காரை எடுத்தவன் காரை மெதுவாய் ஓட்ட ஆரம்பித்தான்.

அந்தப் பின்னிரவில் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாதது கொஞ்சம் வசதியாய் இருந்தது.

ஆனால், வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே போதை மெல்ல ஏறி மெல்லப் பறப்பது போலத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

எல்லாம் கொஞ்ச நேரம்தான். வண்டி அலைபாய்வது தெரிந்து 'ஹைவே பேட்ரோல் போலிஸ்' காரில் விளக்குகள் எரிய வந்து அவனைச் சாலையில் நிறுத்திவிட்டது.

"இறங்கு...!".

போலிஸ் சொன்னதும் சந்தோஷ் இறங்கினான்.

"ஊது...!".

 ஸ்வாசத்தைச் செக் செய்யும் மெஷினை ஒரு போலிஸ்காரர் நீட்டினார்.

சந்தோஷ் ஊதுவதற்கு முன்... அந்தப் பக்கமாய் ஒரு திருடன் சாலையைத் தொட்ட ஒற்றையடிப் பாதியில் இறங்கி ஓட, ஊர் மக்கள் அவனைத் துரத்துவதைப் பார்த்த அந்தப் போலிஸ்காரர்கள்...

சந்தோஷிடம் "நாங்கள் வரும் வரை எக்காரணம் கொண்டும் இந்த இடத்தை விட்டு அசையக் கூடாது...!" என்று சொல்லி விட்டுத் திருடனைத் துரத்திக் கொண்டு ஒடினர்.

சந்தோஷ் ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் என்று வெயிட் பண்ணிப் பார்த்து விட்டு, அவர்கள் வராமல் போகவே டக்கென்று காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி வந்துவிட்டான்.

காரை செட்டில் விட்டுவிட்டு கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்த மனைவியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, "போலிஸ் வந்தால்... நான் தூங்குகிறேன், எனக்கு சிக்குன்குனியா என்றும் ஒரு வாரமாய் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறேன் என்றும் சொல்லி அனுப்பிவிடு... நாளை பார்த்துக் கொள்ளலாம்...!" என்று சொல்லிவிட்டுப் போய்ப் படுத்துக் கொண்டான்.

சரியாய் ஒரு மணி நேரம் கழித்து போலிஸ் வந்து கதவைத் தட்டியது.

அது சந்தோஷின் வீடுதானா என்பதை அவர்கள் விசாரித்துக் கொண்டார்கள்.

சந்தோஷின் மனைவியும் அவன் சொல்லியபடி 'அவருக்கு ஒரு வாரமாய் சிக்குன்குனியா... நடக்க முடியாமல் படுத்திருக்கிறார்...!' என்று கூறி அவர்களை அனுப்பப் பார்த்தாள்.

அதற்கு சந்தோஷின் 'டிரைவிங் லைசன்ஸை'க் காட்டிய போலிஸ் ஆபிஸர்கள்... அவனது காரைப் பார்க்க முடியுமா என்று கேட்டார்கள்.

அவள்,"அவர் காரை நீங்கள் ஏன் பார்க்கவேண்டும்..?" என்று கேட்டபடியே அவர்களை அழைத்துக் கொண்டு போய் கார் செட்டின் கதவைத் திறந்தாள்.

செட்டின் உள்ளே...

 அந்த போலிஸ் கார் இன்னும் மேலே விளக்குகள் ஒளிர நின்று கொண்டிருந்தது.
.
.
.

தில்லுதுர அட் ரெசார்ட்




தில்லுதுர தன்னுடைய விடுமுறையைக் கழிக்க ஒரு மலை வாசஸ்தலத்தில் இருந்த நேரம்.

ஒரு நள்ளிரவு தாண்டிய பின்னிரவு. யாரோ கதவைத் தட்டிய சத்தம் கேட்டுத் திறந்தால் கதவுக்கு வெளியே யாரையும் காணோம். ஆனால் சத்தம் மட்டும் கேட்டது.

"ஐயா... எம் பேரு ஜான்... வெளியே ரொம்பக் குளிரா இருக்கு. இன்னைக்கு ஒரு நைட் இங்கே தங்கிக்கட்டுமா..?".

'யாராய் இருக்கும்...?'... என்ற குழப்பத்துடன் உற்றுப் பார்த்தபோது இருட்டில் காலடியில் ஒரு நத்தை நிற்பது தெரிந்தது.

தில்லுதுர ராத்தூக்கம் கெட்ட கோபத்தில்,"ஒழிஞ்சு போ..!" என்று எட்டி உதைக்க... அதைச் சற்றும் எதிர்பாராத அந்த நத்தை சற்று தூரம் பறந்து மலையின் கீழே  இருட்டில் விழுந்துபோனது.

இது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் இருக்கும்.

தில்லுதுர அடுத்த விடுமுறைக்கு அவனுடைய ஃபேவரைட் இடமான அதே இடத்தில் அதே அறையில் தங்க...

அதே இரவு நேரத்தில்...

அதே போல் கதவு தட்டப்பட்டது.

மிகுந்த கோபத்துடன் கதவைத் திறந்தான் தில்லுதுர.

வெளியே பார்த்தால் அதே நத்தை.

அது கடும் கோபத்துடன் நின்று கொண்டிருந்தது.

தில்லுதுர எரிச்சலுடன்,"என்ன...?" என்று கேட்டதும் நத்தை அவனைப் பார்த்துக் கேட்டது.

"ஏன் அப்படி செஞ்ச...?".
.
.
.

Monday, April 12, 2010

எங்கள் ஊரு எம்.எல்.ஏ...



எங்க ஊரு எம்.எல்.ஏ-வைப் பார்க்கப் போயிருந்த சமயத்தில் ஒரு பெரிய க்யூ அவரைப் பார்க்கக் காத்திருந்தது.

தொகுதியிலிருந்து வந்து... நீண்ட க்யூவில் நின்று.... மனுக் கொடுத்த ஒரு எதிர்க் கட்சித் தொண்டரை அவர் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார்.

 வந்தவரோ பாவம். குனிந்த தலை நிமிராமல் அத்தனை திட்டுகளையும் வாங்கிக் கொண்டிருந்தார்.

எல்லாத் திட்டுகளையும் முடித்தபின் எம்.எல்.ஏ அந்த தொண்டரிடம் கேட்டார்.

"இருக்கற கோபத்துல... என்னயக் கொல்லலாம்னுகூடத் தோணுமே... அப்படியே நான் செத்துப் போயிட்டாக்கூட... என் சமாதியில வந்தாவது காறித் துப்பணும்னு தோணுமே...!"


அந்த தொண்டர் எம்.எல்.ஏ கோபப்பட்டுவிடுவாரோ என்று பயந்தபடி... மெல்லிய குரலில் பதில் சொன்னார்.

"இல்லைங்க ஐயா... இங்கருந்து போனபின்னால நான் எந்தக் க்யூவிலயும் போய் நிக்கறதா இல்லீங்க...!".
.
.
.

எண்பது வயது துரோகம்



நாராயணனும் அவரது மனைவியும் தங்களுடைய அறுபதாவது திருமண நாளைக் கொண்டாடிய உற்சாகத்தோடு தங்களது இளம் வயது நினைவுகளில் மூழ்கிப் போனார்கள்.

பள்ளிப் பருவத்தில் இந்த ஊரிலேயே ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் அவர்கள்.

இன்று அந்த நினைவு வர நாராயணன் தன் மனைவியைக் கேட்டார்.

"சுந்தரி... இன்னிக்கு நாம படிச்ச பள்ளிக்கூடம் வரை ஒரு வாக் போயிட்டு வரலாமா...?".

மனைவியும் ஆமோதிக்க மெல்ல ஒரு நடை போனார்கள்.

இருவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு மெல்ல நடந்து பள்ளியை அடைந்த போது பள்ளிக்கூடம் இன்னும் பூட்டாமல் இருந்தது.

எனவே இருவரும் உள்ளே தங்களது வகுப்பறையைத் தேடி தாஙகள் அமர்ந்திருந்த டெஸ்க்கைத் தேடி அதில் "ஐ லவ் யூ சுந்தரி" செதுக்கினார் நாராயணன்.

அவர்கள் வீடு திரும்பும் போது.... அந்த அரை இருட்டில் ஒரு போலிஸ் காரில் இருந்து ஒரு பை விழுவதை இருவரும் பார்த்தார்கள்.

காரோ நிற்காமல் செம ஸ்பீடில் போய்விட்டது.

சுந்தரி அம்மாள் என்ன செய்வதென்று தெரியாமல் டக்கென்று அந்த பையை எடுத்துக் கொண்டாள்.

வீட்டில் சென்று திறந்து... அதை பார்த்தால்  அத்தனையும் பணம்.  அதுவும் ஐம்பது லட்சம்.

நாராயணன் "திருப்பிக் கொடுத்துவிடலாம்..." என்று சொன்னாலும், சுந்தரி அம்மாள் "பணம் எடுத்தவருக்கே சொந்தம்..." என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

நாராயணன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்தப் பணத்தை அதே பையிலிட்டு ஒளித்து வைத்துவிட்டாள்.

மறுநாள் காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தால் இரண்டு போலிஸ்காரர்கள்.

உள்ளே வந்து அமர்ந்த அவர்களில் ஒருவர் கேட்டார்.

"அம்மா... நேற்று இந்த வழியாய்ச் சென்ற போலிஸ் வண்டியிலிருந்து ஒரு பணப்பை விழுந்துவிட்டது. அதைத் தேடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எதுவும் பார்த்தீர்களா...?".

சுந்தரி அம்மாள் ,"இல்லை..."என்று சொல்ல....

நாராயணன், "இல்லை ஆபிஸர்... இவள் பொய் சொல்கிறாள்... அந்தப் பணத்தை இவள் எடுத்து ஒளித்து வைத்ததை என் கண்ணால் பார்த்தேன்...".
போலிஸ்காரர்கள் சந்தேகத்தோடு பார்க்க, சுந்தரி அம்மாள், "அவரை நம்பாதீர்கள்... அவருக்கு மிக வயதாகிவிட்டது. இப்படித்தான் எப்போதும் சம்பந்தமில்லாமல் உளறிக் கொண்டிருக்கிறார்...!" என்றாள்.

போலிஸ்காரரில் முதலாமவர் நாரயணனிடம் திரும்பி, "அய்யா... நாங்கள் உங்களை நம்புகிறோம்... நேற்று என்ன நடந்தது... முதலில் இருந்து சொல்லுங்கள்...!".

நாராயணன் தமது நேர்மைக்கு கிடைத்த வெற்றியை பற்றிய சந்தோஷத்தோடு...

"ஆபிஸர்... நேற்று நானும் இவளும் ஸ்கூலுக்குப் போய்ட்டு வரும்போது..." என்று ஆரம்பிக்க...

...அந்த முதல் ஆபிஸர் சட்டென்று எழுந்து தனது சகாவிடம் திரும்பிச் சொன்னார்.

"சீக்கிரம் கிளம்பு....!"
.
.
.

Friday, April 9, 2010

கோயம்புத்தூர் 2 சொர்க்கம்

கோவையில் ஒரு பள்ளியில் ஆசிரியையாய் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது நடந்தது இது.


என் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்னெறிக் கதைகள் சொல்லும் வகுப்பு அது.

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க, ஒரு கேள்வி பதில் விளையாட்டைத் தொடங்கினேன்.

முதலில் அமர்ந்திருந்த மாணவனை அழைத்தேன்

"முத்து... நீ சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறாயா..?"

அவன் பதில் சொன்னான், "ஆமாம் டீச்சர்...!"

"சரி... போய் சுவற்றைப் பார்த்து நில்லு...!"

அவன் அதே போல் போய் நின்றான்.

அடுத்தவனை அழைத்தேன்,"சங்கர்... நீ சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறாயா..?"

அவன் பதில் சொன்னான், "ஆமாம் டீச்சர்...!"

"சரி... போய் சுவற்றைப் பார்த்து நில்லு...!"

அவனும் அதே போல் போய் நின்றான்.

மூன்றாவது சிறுவனை அழைத்தேன், "ரமேஷ்...நீ சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறாயா..?"

"இல்லை டீச்சர்...!"

எனக்கோ ஆச்சர்யமாய் ஆகிவிட்டது.

"என்னது... நீ இறந்தால் சொர்க்கத்திற்குப் போக விரும்பவில்லையா...?".

அவன் என்னைவிட வியப்புடன் பதில் சொன்னான்.

"இறந்த பிறகா...? இறந்த பிறகென்றால் சரி... நான் சொர்க்கத்திற்குப் போவேன். நான்கூட இப்பவே சொர்க்கத்திற்கு போக க்ரூப்பாய் நிற்கச் சொல்லுகிறீர்களோ என்று பயந்து விட்டேன்...!" என்றான்.
.
.
.

சர்வர் சுந்தரம்

 
அந்த மனிதனும் அவன் நண்பனும் சர்வர் சுந்தரம் வேலை பார்க்கும் ஹோட்டலில்தான் தினசரி காலையில் சாப்பிட வருவார்கள்.
அபூர்வ நண்பர்கள் அவர்கள்.


வந்தவுடன் சர்வர் சுந்தரம் எப்போதும் கேட்கும் முதல் கேள்வி,"என்ன சாப்பிடறீங்க சார்..?" என்பதுதான்.

அவர்களில் அந்த மனிதன் மறக்காமல் எப்போதும், "ஒரு ஆனியன் ஊத்தப்பம் அது சாப்பிட்டு முடியும் போது ஒரு காஃபி..." என்பான்.

கூட வந்தவன் உடனே, "எனக்கும் அதேதான்..." என்பான்.

சாப்பிட்டு முடித்ததும், "பில் நாற்பத்தைந்து ரூபாய்..." என்று சர்வர் சுந்தரம் சொன்னதும், "சரி..." என்று அவன் பேன்ட் பாக்கட்டுக்குள் கையை விட்டு மிகச் சரியான சில்லறையை எடுத்துக் கொடுப்பான்.

வாரம் பூராவும் இதுவே தொடரும்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவன் மெனு மாறும்.

சுந்தரம்,"என்ன சாப்பிடறீங்க சார்..?" என்று கேட்டதும், "ஒரு பொங்கல், ஒரு மசால் தோசை... அப்புறம் அது சாப்பிட்டு முடியும் போது ஒரு காஃபி..." என்பான்.

கூட வந்தவன் உடனே, "எனக்கும் அதேதான்..." என்பான்.

சாப்பிட்டு முடித்ததும், "பில் நூற்றிப் பன்னிரண்டு ரூபாய்..." என்று சர்வர் சுந்தரம் சொன்னதும், "சரி..." என்று அவன் பேன்ட் பாக்கட்டுக்குள் கையை விட்டு மிகச் சரியான சில்லறையை எடுத்துக் கொடுப்பான்.

சர்வர் சுந்தரத்துக்கோ ஒரே ஆச்சர்யம்.

'எப்படி இவனால் மட்டும் மிகச் சரியான சில்லறையை ஒவ்வொரு முறையும் கொடுக்க முடிகிறது...!'.

 இதுவே ஒரு மாதத்திற்கும் மேலே தொடர ஆளில்லாத ஒரு நாளில் அவனிடம் சர்வர் சுந்தரம் அதைக் கேட்டே விட்டான்.

அந்த மனிதன் ரொம்ப நேரம் யோசித்து விட்டுச் சொன்னான்.

"தம்பி... நீயும் ரொம்ப நாளாய் எங்களுக்கு சர்வ் செய்துட்டு இருக்க... உங்கிட்ட சொல்றதுக்கு என்ன..? நீயும் ரொம்பக் கஷ்டப்பட்ற... உனக்கும் ஏதாவது செய்யணும்னு நெனச்சுக்கிட்டுத்தான் இருந்தோம். அதுக்குள்ள நீயே கேட்டுட்ட...!" என்றவன் தொடர்ந்து...

"என்னோட பேன்ட் பாக்கட்ல அலாவுதீன் விளக்கு ஒண்ணு இருக்கு. அதை நான் தேய்ச்சதும் அதுல இருக்கற அந்த பூதம் நான் என்ன கேட்டாலும் கொடுக்கும். இப்ப நான் அதிக் கூப்பிடப் போறேன். உனக்கும் ஏதாவது வேணும்னா அதைக் கேட்டுக்க...!" என்றவன் பேன்ட் பாக்கட்ல இருக்கற அலாவுதீன் விளக்கை எடுத்து தேய்த்தான்.

சட்டென்று அந்த இடத்தில் ஒரு வெளிச்சம் பரவ... அந்த அலாவுதீன் பூதம் அங்கே தோன்றியது.

என்ன கேட்கப் போகிறானோ என்று அவர்கள் இருவரும் சுந்தரத்தையே பார்த்துக் கொண்டிருக்க....

...மிகுந்த பிரமிப்புடன் அலாவுதீன் பூதத்தை மேலும் கீழுமாய்ப்  பார்த்துக் கொண்டிருந்த நம்ம சர்வர் சுந்தரம் கேட்டான்....


 "என்ன சாப்பிடறீங்க சார்..?" .
.
.
.

Thursday, April 8, 2010

குட்டி இளவரசர்கள் உலகில்...


சென்னையில் ஒரு பஸ்ஸில் போய்க் கொண்டிருந்த போது...

இரண்டு நான்காம் வகுப்பு கான்வென்ட் சிறுவர்கள் அவர்கள் படித்த காமிக்ஸ் பற்றி ஆங்கிலத்தில் பேசிக் கொண்டது.


"சந்த்ரு... எனக்கென்னவோ சூப்பர்மேன் ரொம்ப மடையனா இருப்பான்னு தோணுது...?'.

"எப்படிச் சொல்ற..?".

"அவன் தான் பேன்ட் போட்டு அதுக்கு மேல ஜட்டி போட்டிருக்கானே...!".

"அப்படிப் பார்த்தா பேட்மேன் அதைவிட மடையன் தெரியுமா... அவன் பேன்ட் மேல ஜட்டி போட்டு அதுமேல பெல்ட்டும் கட்டிருக்கானே...!".

"அப்ப... ராபின் பேட்மேனை ஃபாலோ பண்றானே... அவன் எவ்வளவு மடையனா இருப்பான்...?".

"ஆனா... எல்லோரையும்விட மகா மடையன் ஸ்பைடர்மேன் தான்...!".

"எப்படிச் சொல்ற..?".

"அவன் தான ஜட்டிய எங்க போடறதுனே தெரியாம... தலைல போட்டுகிட்டு சுத்தறான்...!".

.

.

.

முட்டாள்தனத்தின் உச்சம் எது..?



நம்ம

மதுரை கருப்புசாமி

வெள்ளை பனியன் போட்டுக் கொண்டு

கலர் போட்டோ

எடுத்து கொள்வது.

.
.
.

காயின் கலெக்சன்


அன்றைய தினம் விடியும்போதே மிகுந்த சோதனையுடன் விடிந்தது.

என் நான்கு வயது மகள் ஒரு 'ஒரு ரூபாய்' காயினை விழுங்கிவிட்டாள்.
எங்கேயோ கீழே கிடந்திருக்கும் போலிருக்கிறது.

காலை விடிந்ததிலிருந்து போனில் ஒவ்வொரு டாக்டராய்த் தேடி அலைகிறேன்... ஒருவரும் மாட்டவில்லை.

பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் அவரவருக்குத் தெரிந்த வைத்தியங்களை ட்ரை செய்து கொண்டிருந்தார்கள்.

ஹாஸ்பிட்டலில் முதலுதவிக்கு போகலாம் என்றால் குழந்தைக்கோ எதுவும் பேசவராமல், எதையும் விழுங்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

கடைசியில் ஹாஸ்பிட்டலுக்கே கொண்டு போகலாம் என்று ஆட்டோ தேடி ரோட்டிற்கு ஓடி வந்த வேகத்தைப் பார்த்து ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒருவர் விஷயத்தைக் கேட்க நான் சொன்னேன்.

"கொஞ்சம் இருங்கள்... பார்க்கலாம்..." என்று உடனே உள்ளே வந்த அவர், குழந்தையைத் தூக்கி தலைகீழாய்ப் பிடித்து கழுத்தின் பின்புறம் தட்ட அந்த காயின் டொக்கென்று வெளியே வந்து விழுந்தது.

மிகுந்த ஆச்சர்யத்துடன் "நீங்கள் டாக்டரா... எந்த ஹாஸ்பிட்டலில் வேலை செய்கிறீர்கள்..?" என்று நான் கேட்டதும் அவர் பதில் சொன்னார்.

"இல்லை... நான் இன்கம் டாக்ஸ் அலுவலகத்தில் வேலை செய்கிறேன்...!".
.
.
.

Wednesday, April 7, 2010

தீபாவளி சரவெடி


கண்ணாயிரம் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் கணேஷை போனில் அழைத்துச் சொன்னார்.

"கணேஷா... நான் இதைச் சொல்லறதுக்கு ரொம்ப வருத்தப்படறேன். ஆனா... சொல்லாம இருக்க முடியாது. நானும் உன் அம்மாவும் டைவர்ஸ் பண்ணிக்கப் போறோம். நாப்பத்தஞ்சு வருசத் துக்கம் முடியப்போகுது...!".

கணேஷ் ஒரு கணம் அரண்டு போனான்.

"என்னது டைவர்ஸா... என்ன பேசறீங்க...? நாளைக்கு நாங்க யாரும் வெளிய தலைகாட்ட வேண்டாமா..?".

அப்பா நிதானமாய் பதிலளித்தார்.

"எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வரல. அவளப் பாத்தாலே எரிச்சலா இருக்கு... இதப் பத்திப் பேசக்கூட எரிச்சலாத்தான் இருக்கு. என்ன பண்ணறது..? லண்டன்ல இருக்கற உன் தங்கச்சிக்கிட்டயும் சொல்லிடு. அவளும் தெரிஞ்சுக்கட்டும். வச்சிடட்டா..?"என்று போனை வைத்தார்.

மகன் கணேஷ் உடனே தங்கை துளசிக்குப் போன் செய்து விஷயத்தை சொல்ல அவள் போன் தன் அப்பாவிடம் அலறினாள்.

"அப்பா... நீ எந்தக் காரணம் அம்மாவை டைவர்ஸ் செய்யக் கூடாது. எதுவும் அம்மாகிட்ட பேசக்கூடக் கூடாது. நான் கணேஷை அமெரிக்காவிலிருந்து உடனே கிளம்பிவரச் சொல்றேன். எங்க வீட்லருந்து அவர் வந்ததும் சொல்லி நானும் அவரும் கிளம்பி வர்றோம்... புரிஞ்சுதா..?" என்று சொல்லி போனை வைத்தாள்.

கண்ணாயிரமும் போனை வைத்துவிட்டு உள்ளே திரும்பி,"அடியே இவளே...!" என்று அழைத்தவர் சொன்னார்.

" வருஷா வருஷம் தனியாவே தீபாவளி கொண்டாட வேண்டியிருக்குனு புலம்பிக்கிடே இருப்பியே... இந்த வருஷம் தீபாவளிக்கு உன் மகனும் மகளும்  நம்ம வீட்டுக்கு குடும்பத்தோட வர்றாங்க.அதுவும் அவங்க செலவுலயே...!".
.
.
.

Tuesday, April 6, 2010

சென்னையில் ஐ பி எல் மேட்ச் பாக்கணுமா


ஐ பி எல் மேட்ச் பார்க்கலாம் என்று நானும் எனது நண்பனும் போன போது நடந்தது இது.

என் நண்பனோ தீவிர தோனி ரசிகன். கிரிக்கெட் வெறியன்.

ஆறு மணி நேரம் காத்திருந்து, கூட்டத்தையெல்லாம் சமாளித்து ஒருவாறு டிக்கட் கவுண்டர் அருகே போயுமாச்சு.

அடுத்தது... அவன் கையை உள்ளே விட்ட நேரம் டிக்கட் சேல்ஸ்மேன் 'க்லோஸ்ட்' போர்டை மாட்டியபடி "டிக்கட் இல்ல..." என்றான்.

இவ்வளவு நேரம் காத்திருந்த ஆத்திரத்தில் என் நண்பன் எரிச்சலுடன் கேட்டான். "டிக்கட் இல்லியா... டிக்கட் இல்லைனா என்ன அர்த்தம்...?"

ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த என் நண்பனை மேலும் சூடேற்றும்படி அந்த டிக்கட் சேல்ஸ்மேன் மிகுந்த அன்புடன் கேட்டான்.

"சாரி சார்... அதுல எந்த வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் புரியல..?".
.
.
.

Friday, April 2, 2010

குடிகாரக் குப்பன்


சியர்ஸ் பார் பொள்ளாச்சியின் குடிகாரர்களின் பாரடைஸ்.

மங்கிய அரை இருட்டில் தட்டு நிறைய தீவனங்களை வைத்துக் கொண்டு மேல சிகரெட் பிடித்தவாறு தண்ணி அடிப்பது ஒரு சுகம்.

அன்று அந்த டேபிளில் குடித்துக் கொண்டிருந்தவர் அடிக்கடி டேபிள் மேல் கவிழ்வதும் , சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து விட்ட இடத்தில் இருந்து குடிப்பதுமாக தொடர்ந்து கொண்டே இருந்தவர்... கடைசியில் கவிழ்ந்தே விட்டார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பார் அட்டெண்டர் அங்கே வேலை செய்யும் மற்றொருவனைப் பார்த்துச் சொன்னான்.

"இங்க பாரு... அந்த எட்டாம் நம்பர் டேபிள் ஆள் ஒண்ணும் வீடு போய் சேர முடியாது. ஆள் வேற புதுசாத் தெரியுது. கொஞ்சம் எழுப்பித் தெளிய வச்சு... வீடு எங்கனு கேட்டு கொண்டுபோய் விட்டுட்டு வந்துடு...!".

அவனும் அந்த நபரைத் தூக்கி தோளில் தாங்கியபடி நடத்திக் கொண்டு போனான்.

டேபிளிலிருந்து கதவுக்குப் போவதற்குள்ளேயே பத்துப் பன்னிரெண்டு தடவை தடுமாறி விழத் தெரிந்தார்.

மெல்ல கதவைத் திறந்து அவருடைய காரைக் கண்டுபிடித்து கூடவே ஓட்டிக்கொண்டும் வந்தாயிற்று.

அந்த குடிகாரர் வீட்டைக் காட்டியதும் காரை நிறுத்தி மெல்ல இறக்கி வீட்டின் கதவருகே கொண்டு சென்றான்.

கதவைத் திறந்த அந்தக் குடிகாரனின் மனைவி அந்த ஆளைப் பார்த்துக் கேட்டாள்.

"இந்த மனுஷன்கூட டெய்லி இதே வேலையாப் போச்சு. ஆமா... இவரோட வீல் சேர் எங்கே...?".

.
.
.

எல்லாவற்றுக்கும் உண்டு எல்லை...


சாலையில் சிவப்பு விளக்கு விழுந்த பின்பும் கவனிக்காமல் ஜீப்ரா லைனை ஒரு அடி தாண்டி நிறுத்திவிட்டான் அவன்.

இதை எங்கிருந்தோ கவனித்த அந்த ட்ராபிக் போலிஸ்காரர் உடனே ஃபைன் எழுதும் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்துவிட்டார்.

காரை ஓட்டிகொண்டு வந்தவனோ ஆந்திராக்காரன்.

அவன் தெலுங்கில் அவன் 'மனைவி, ஹாஸ்பிடல்,அர்ஜன்ட்' என்று என்னென்னவோ சொல்கிறான்.

நமது 'ஹானஸ்ட் ராஜ்' ட்ராபிக் கான்ஸ்டபிள் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.

"அதெல்லாம் தெரியாது... பெனால்டி கட்டியே ஆகவேண்டும்... பேரச் சொல்லு...பேரச் சொல்லு..." என்கிறார்.

அந்த ஆந்திராக்காரன் பேரைச் சொல்ல ஆரம்பித்தான்.

"சார், மை நேம் ஈஸ்... பாதம் கேதாரண்ய பொம்மிராஜு சீதாராமனாஜனேயலு ராஜசேகர ஸ்ரீனிவாசல லக்ஷ்மிநாரயண சிவ வெங்கட சாய்...!".

அவன் சொல்லி முடித்ததும்... நோட்டையும் பேனாவையும் பார்த்துக் கொண்டே ஒரு கணம் யோசித்த நமது ட்ராபிக் கான்ஸ்டபிள் சொன்னார்.

"ஓகே...அவசரம்னு சொல்ற... இந்த தடவை உன்னை விட்டுடறேன்... இனிமே கரெக்டா வண்டிய ஒட்டணும் என்ன...?".
.
.
.

Thursday, April 1, 2010

மேல் மேலா


ஸ்ரீ குமரன் தங்க மாளிகை என்றொரு நகைக் கடை உண்டு கோவையில்.

அங்கே நகை வாங்க வந்த இருவர் வெளியே வரும் போது நான் உள்ளே நுழைந்தேன்.

அவர்கள் பேசிக் கொண்டே இறங்குகிறார்கள்.

"தங்கம் விக்கிற வெலைல நகை போடாம இருக்கறதே மேல்ப்பா..."

அதற்கு அப்பாவியாய் அடுத்தவர் சொன்ன பதில்...

"ஆமாமா...நகை போடறதெல்லாம் ஃபீமேல் ஆச்சே...!".
.
.
.

ஜோசியம் பாக்கலியோ ஜோசியம்


நல்ல உச்சி வெயிலில்

சென்னை மவுண்ட் ரோட்டில்

மரங்களற்ற ஒரு இடைவெளியில்

சந்தித்துக் கொண்ட

இரண்டு ஜோசியர்கள் பேசிக் கொண்டார்கள்.

" கொடூரமான வெயிலப்பா இந்த வருஷம்... பாரேன், என்ன கொளுத்து கொளுத்துது...!".


"ஆமாமா..." பதில் சொன்ன மற்ற ஜோசியர் தொடர்ந்தார்...

"இது அப்படியே எனக்கு 2067 வெயிலை ஞாபகப்படுத்துது....!".
.
.
.

ஏழ்மை என்பது என்ன..?


ஒரு அப்பா நகரத்தில் வாழும் தனது மகன் ஏழ்மையைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஊரைச் சுற்றிக் காட்டிய பின்பு கேட்டார்.

"மகனே.. ஏழ்மை என்றால் என்ன என்பது தெரிந்ததா...?"

மகன் பதில் சொன்னான்.

"நன்றாகத் தெரிந்தது அப்பா...

நம்மிடம் ஒரு நாய்தான் இருக்கிறது. அவர்களோ நான்கு வைத்திருக்கிறார்கள்.

நமது வீட்டில் ஒரு சின்ன நீச்சல் குளம்தான் உள்ளது. இவர்களுக்கோ ஒரு ஆறே இருக்கிறது.

நமக்கு இரவில் வைக்க ஓரிரு விளக்குகள்தான் இருக்கிறது. அவர்களுக்கோ நட்சத்திரங்கள் இருக்கின்றன.

நம்மிடம் கொஞ்சம் நிலம் இருக்கிறது. இவர்களோ வயல்களின் சொந்தக்காரர்களாய் இருக்கிறார்கள்.

நமக்கு வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். இவர்களோ அடுத்தவருக்கு உதவுபவர்களாய் இருக்கிறார்கள்.

நாம் உணவை வாங்குகிறோம். அவர்களோ விளைவிக்கிறார்கள்.

நம்மைப் பாதுகாக்க வீடு இருக்கிறது. அவர்களுக்கோ நண்பர்கள் இருக்கிறார்கள்."

மகன் பேசிக் கொண்டே போக தந்தை வாயடைத்து நின்றுகொண்டிருந்தார்.

மகன் தொடர்ந்தான்.

"நன்றி அப்பா... நாம் எவ்வளவு ஏழையாய் இருக்கிறோம் என்று காண்பித்ததற்கு...!".
.
.
.

அழகிய திருடா


அந்த உயர்ரக வாட்ச்சுகள் விற்கும் கடையில் கஸ்டமர் போல் போய்த் திருடும் போது கையும் களவுமாய் கபாலி மாட்டிக்கொண்டான்.

திருடியதோ வைரங்கள் பதித்த தங்க வாட்ச்.

விலை ரெண்டு லட்சத்தைத் தாண்டும்.

கபாலியைப் பிடித்த கடை மேனேஜர் போலிசுக்குப் போன் செய்யத் தொடங்கினார்.

அப்போது கபாலி அந்த மேனேஜரைப் பார்த்துக் கேட்டான்.

"இதப் பாருங்க... இப்ப நீங்க போலிசுக்குப் போறதுனால எந்த பிரயோஜனமும் இல்ல. வீணா உங்களுக்கும் தொந்தரவு, எனக்கும் தொந்தரவு. ஒண்ணு பண்ணலாம். இந்த வாட்சை நானே வாங்கிக்கறேன். பிரச்சினையை இதோட முடிச்சுக்கலாம். என்ன சொல்லறீங்க..?".

'அதுவும் சரிதான்... இயர் என்டிங்கும் அதுவுமாய் நமக்கும் ஒரு பிஸினஸ் ஆச்சு...' யோசித்த மேனேஜர் ,"ஓகே..!" என்று பில் புக்கை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

மேனேஜர் எழுதுவதை எட்டிப் பார்த்த கபாலி மெல்லக் கேட்டான்.

"இரண்டு லட்சமா...? பட்ஜெட் கொஞ்சம் இடிக்குது.... ஒரு நூத்தைம்பது இருநூறுல எந்த வாட்சும் இல்லியா....?".
.
.
.