தில்லுதுரயின் உயிருக்குயிரான நண்பரும் தனது அந்தரங்க காரியதரிசியுமான டேவிட், அன்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே இறந்து போனார்.
தில்லுதுர தனது கம்பெனி சம்பந்தமான முடிவுகளாகட்டும் தொடங்கி அடுத்த நாள் மீட்டிங்கிற்கு என்ன உடை உடுத்துவது வரை டேவிட்டின் அட்வைஸ் இல்லாமல் செய்ய மாட்டார்.
எனவே, டேவிட்டின் இடத்துக்கு வருவதற்கு, அலுவலகத்தில் அடுத்த தகுதியுள்ளவர்களிடையே ஒரு பெரும் போட்டி சத்தமில்லாமல் நடந்து கொண்டிருந்தது.
இந்தப் போட்டி பற்றித் தெரிந்தபோது, தில்லுதுர மனது உடைந்து போனார்.
நண்பன் இறந்த சோகத்தைவிட இது பெரியதாய் இருந்தது தில்லுதுரக்கு.
"ஒரு மனிதனைப் புதைக்கும் வரை காத்திருக்கும் நாகரீகம் கூடவா இல்லை நம் மனிதரிடம்..!" என்று தில்லுதுர மனம் வெதும்பிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
மாலையில் கல்லறையில் புதைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.
நண்பனைப் புதைப்பதற்காக, தோண்டிக் கொண்டிருக்கும் குழியை சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தில்லுதுரயிடம், ஆர்வமாய் வந்த ஒரு வேலையாள் கூப்பிட்டார்,"சார்...!".
ஒன்றுமே பேசாமல் வெறுமையாய் திரும்பிய தில்லுதுரயிடம் அவர் கேட்டார்.
"சா.. சார்..! எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தீங்கன்னா நான் டேவிட்டோட இடத்துல சர்வ் பண்ண ஆசைப்படறேன் சார்..!".
லேசான கடுப்புடன் திரும்பிய தில்லுதுர அவரிடம் சொன்னார்.
"கண்டிப்பா தர்றேன்..!" என்றவர் தொடர்ந்து சொன்னார்.
"ஆனா நீங்க கொஞ்சம் அவசரப் படறீங்கனு நெனைக்கிறேன். இவரு இந்தக் குழியைத் தோண்ட இன்னும் அரை மணி ஆகும். அதுவரை நீங்க வெயிட் பண்ணியே தீரணும்..!". என்றார்.