Saturday, May 23, 2015

வட போச்சே…

அன்று டேனியின் அப்பாவுடைய மேனேஜர் குடும்பத்துடன் எங்கள் வீட்டு விருந்துக்கு வந்திருந்தார்.

காலை பத்தரை மணிக்கு வந்தவுடனேயே அவர்களுக்கு வடையும் காப்பியும் கொடுத்து வரவேற்றாகி விட்டது.

அவரும் மேனேஜரும் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்தபடியே பேசிக் கொண்டிருக்க, டேனியும் மேனேஜர் குழந்தையும் விளையாட வாசலுக்கு ஓடியிருந்தனர்.

மேனேஜரின் மனைவியும் பழகுவதற்கு எளியவராய், என்னுடன் பேசிக் கொண்டே எனக்கு உதவுவதற்காய் கிச்சனுக்குள் வந்துவிட்டார்.

மதிய விருந்துக்கு எல்லாவற்றையும் தயார் செய்து முடித்து டைனிங் டேபிளில் உட்கார்ந்த நேரம்.

சமையல் நல்ல விதமாய் அமைந்திருக்கவே, எல்லோரும் திருப்தியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சாப்பாடு… சாம்பார், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, ரசம் எல்லாம் முடிந்து தயிருக்குப் போயிருந்தபோதுதான் திடீரென அந்த மேனேஜர் கேட்டார்.

”இந்த தயிர் சாதத்துக்கு ஒரு வடை இருந்தா நல்லாருந்திருக்குமே.!”

சொன்னதும் பக்கென்று ஆகி விட்டது எனக்கு.

வடை எல்லாம் காலையிலேயே முடிந்து போய், மிச்சம் இருந்த ஒன்றிரண்டையும் டேனியும் அவர் குழந்தையும் சாப்பிட்டு தீர்த்து விட்டிருந்த படியால், என்ன பதில் சொல்வது என்று நான் விழிக்க ஆரம்பிக்க டேனி, “இருங்க அங்கிள்...!” டைனிங் டேபிளை விட்டு இறங்கி ஓடினான்.

வரும்போது அவன் கையில் ஒரு வடையிருக்க, அதை நேராய் ஓடி வந்து, “இந்தாங்க அங்கிள்.!” என்று அவனே மேனேஜரிடம் கொடுத்ததும் அவர் மிகுந்த சந்தோஷமாகி விட்டார்.

”குட் பாய்..!” என்று அவன் கன்னத்தை தட்டியபடி தயிர் சாதத்துடன் வடையைக் கடித்து சாப்பிட ஆரம்பிக்க…

அவர் மனைவி ஆர்வத்துடன் கேட்டார்.

“வடை எல்லாம் அப்பவே தீர்ந்துடுச்சேடா டேனி... அப்புறம் எங்கருந்து அங்கிளுக்கு வடையைக் கொண்டு வந்த.?”

அவர் கேட்டதும் டேனி பெருமையுடன் சொன்னான்.


”காலைல அம்மா வடை செஞ்ச ஒடனேயே… அப்பா வீட்ல இருக்கற எலியப் புடிக்க ஒரு வடைய எலிப்பொறில மாட்டி வச்சிருந்தாங்க. அதை இதுவரைக்கும் எலி சாப்பிடல. அதான் அங்கிளாவது சாப்பிடட்டுமேனு கொண்டு வந்து கொடுத்தேன்.!”
.
.
.