Tuesday, April 20, 2010

நீங்க ரொம்ப சப்ப ஃபிகரு



அமுதா தினமும் போகும் அந்த வழியில்தான் அன்றும் வேலைக்குப் போனாள்.

ஆனால், அன்று கதிரேசன் வீட்டின் வாசலில் கட்டியிருந்த கூண்டிலிருந்த அந்தக் கிளி அவளைக் கூப்பிட்டது.

"ஏய் பெண்ணே... இந்தா பச்சப் புடவை...!".

அமுதாவுக்கு அந்தக் கிளி தன்னைத்தான் கூப்பிடுகிறது என்றவுடன் விபரீதம் புரியாமல் உற்சாகமாய்,"என்ன...?" என்று கேட்டாள்.

சாலையில் சென்று கொண்டிருக்கும் அனைவரும் இவர்கள் இருவரும் பேசுவதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கிளி ஒன்றும் பேசாமல் இருக்கவே அமுதா மீண்டும்,"என்ன...?" என்றாள்.

கிளி உடனே வடிவேலு பாணியில்,"நீங்க.. நீங்க... ரொம்ப சப்ப ஃபிகரு...!" என்று மிக மரியாதையாய்ச் சொன்னதும் சாலையில் நின்று கொண்டிருந்த அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

அமுதாவுக்கு அசிங்கமாய்ப் போய்விட்டது.

இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் போய்விட்டாள்.

அன்று மாலை வேலை விட்டு வரும்போது அந்தக் கிளி மறுபடி கூப்பிட்டதும் இல்லாமல், "ஏய் பெண்ணே... நீ உண்மையிலேயே ரொம்ப சப்ப ஃபிகரு...!" என்றது.

அமுதாவுக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை.

மறுநாள் காலையிலும் கிளி அவளை அழைத்து, "நீ ரொம்ப சப்ப ஃபிகரு...!" என்று சொல்லி... மாலையிலும் இதுவே தொடர அமுதா கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள்.

நேராய் கதிரேசன் வீட்டுக்குள் போய் கோபமாய், "இதாப் பாரு கதிரேசு... உங்கிளி போகைல வாரைல எல்லாம் ரொம்பக் கேலி பேசுது. இன்னொரு தடவ இப்பிடிப் பேசுச்சுன்னு வச்சிக்கோ... அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ஆமா...!" என்று காச்சுமூச்சுன்னு கத்த...

... கதிரேசன் "நாளைலருந்து இது நடக்காமப் பாத்துக்கறேன்..."னு அவளை சமாதனப்படுத்தி அனுப்பினான்.

மறுநாள்...

அமுதா என்னதான் நடக்கிறது என்று பார்க்கும் முடிவோடு அந்தத் தெருவில் மெதுவாய் நடந்து போனாள்.

கிளி அவள் வருவதையே பார்த்துக் கொண்டிருந்தது.

ஒன்றும் சொல்லவில்லை.

அவள் நேருக்கு நேராய் வரும் போதும் பார்த்துக் கொண்டிருந்தது.

ஒன்றும் சொல்லவில்லை.

அவள் கடந்து போகையில் மறுபடி கூப்பிட்டது, "ஏய் பெண்ணே...?".

அமுதா நின்று கோபமாய்த் திரும்பினாள்."என்ன...?"

அந்தக் கிளி மெல்லச் சொன்னது.
 
"நான் என்ன சொல்லுவேன் என்று உனக்கே தெரியுமே...!".
.
.
.

No comments:

Post a Comment