Friday, January 25, 2013

தில்லுதுரயின் ட்ரீம் ஜாப்




ட்ரீம் ஜாப் கெடைச்ச பின்னாலும் ஒரு மனுஷனுக்கு வேலை பிடிக்காமப் போகுமா..?

தில்லுதுரக்கு பிடிக்கவில்லை.

என்ன கதைனு கேளுங்க...

அது தில்லுதுர படித்து முடித்து வேலை தேடித்தேடி அலுத்துப் போயிருந்த காலம்.

வேலை கிடைக்காமல் வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த போது, நண்பன் ராஜா சொன்னான்.

"சுந்தராபுரத்துல இருக்கற சொல்கேட்ட கணபதி கிட்ட வேண்டிக்கடா தில்லு. நம்ம சொன்னத கேக்கற  கணபதியாம்...கேட்டதெல்லாம் கொடுக்கறாராம்.!".

வேலை கிடைக்குமென்றால் எதை வேண்டுமென்றாலும் செய்யத் தயாராயிருந்த தில்லுதுர அன்று மாலையே அந்தக் கோவிலுக்குப் போனான்.

வேண்டுவதுதான் வேண்டுகிறோம்.... கொஞ்சம் நல்லாவே வேண்டிக்கலாம் என்று சொல்கேட்ட கணபதியிடம் கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே வேண்டிக் கொண்டான்.

"கடவுளே... என் பை எப்பவும் பணமா நெரஞ்சிருக்கற மாதிரி ஒரு வேலை; எனக்குனு ஒரு பெரிய வண்டி; அதுல எப்பவும் என்னைச் சுத்தி ஏகப்பட்ட பொண்ணுக... இது மட்டும் இந்த ஒரு மாசத்துக்குள்ள நடக்கற மாதிரி அருள்புரியப்பா ஆண்டவா...!".

தில்லுதுர வேண்டிய சமயத்தில் அந்தக் கோவில் மணியும் அடிக்க மஹா சந்தோஷத்தோடு வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த மாதம் அவன் கேட்ட மாதிரியே ஒரு வேலைகிடைத்து விட்டது.

ஆனாலும்... தில்லுதுர இப்போதும் கடுப்புடன் தான் வேலைக்குப் போகிறான்.

ஏனென்றால்..... தில்லுதுர இப்ப ஒரு லேடீஸ் பஸ் கண்டக்டர்.!
.
.
.







Monday, January 7, 2013

கிருஷ்ண சபாவில் டேனி


சனிக்கிழமை மாலை.

டேனி காலையிலிருந்து  சும்மா டிவி பார்த்துக் கொண்டேயிருக்கிறானே என்று யோசித்துக் கொண்டிருந்த போது எதிர் வீட்டில் அந்தத் தகவலைச் சொன்னார்கள்.

ரெண்டு தெரு தள்ளி கிருஷ்ண சபாவில் பாகவத வகுப்புகள் எடுப்பதாகவும் இன்று ஏதோ பாடகர் வந்திருப்பதால் இன்று பேச்சும் பாட்டுமாய் அட்டகாசமாய் இருக்கும் என்றும் சொல்ல....

வெட்டியாய் டிவி பார்ப்பதற்கு இது உபயோகமாய் இருக்குமே என்று டேனியை அழைத்துக் கொண்டு அங்கே கிளம்பினேன்.

டேனி இதுவரை மேடையில் பாட்டுகள் பாடி பார்த்ததில்லை என்பதால், வரும் வழி பூராவும் எப்படி டிவில வருவது போல் ஆடிக் கொண்டே பாடுவார்களா, யாரு டேன்ஸ் ஆடுவார்கள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டே வந்தான்.

வந்த இடத்தில் முதல் வரிசையிலேயே இடம் கிடைக்க ஆர்வத்துடன் அமர்ந்த டேனி, பிரசங்கர் பேசப் பேச டென்ஷனாகிப் போனான்.

பிரசங்கர் பாட்டுக்கு முன்னர் கண்ணன் பிறந்தது வளர்ந்தது லீலைகள் எல்லாம் பெரியவர்களுக்கு போல கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலும் சொல்லிக்கொண்டே போக... அசுவாரஸ்யத்துடன் நெளிந்து கொண்டிருந்த டேனி, அவர் பாட ஆரம்பித்ததும் உற்சாகமாகிப் போனான்.

கண்ணன் பாடல்கள் எப்போதும் போல தனி அழகுடன் ஜொலிக்க, பிரசங்கரும் அதை உற்சாகமாய் பாட....  வந்திருந்த குழந்தைகள் எல்லாம் சந்தோஷத்துடன் கூடவே சேர்ந்து பாட... டேனியும் அவர்களுடன் ஐக்கியமாகிப் போனான்.

கிடத்தட்ட ரெண்டு மணிநேரம்... போனதே தெரியவில்லை.

எல்லாம் முடிந்து வீடு திரும்பும் வழியிலும்கூட டேனி உற்சாகத்துடன், "ராதே ஷ்யாம்... ராதே ஷ்யாம்..." என்று பாடிக் கொண்டே வர, அவனை நல்ல இடத்திற்கு சந்தோஷத்துடன் கேட்டேன்.

"என்ன டேனி... அந்த அங்கிள் பாடின பாட்டெல்லாம் பிடிச்சிருந்ததா.?".

சந்தோஷமாய் பாடிக் கொண்டே வந்த டேனி...  இப்போது அதை நிறுத்திவிட்டு லேசான அலுப்புடன் சொன்னான்.

"பாட்டெல்லாம் நல்லாத்தாம்மா இருந்துச்சு... ஆனா, அட்வர்டைஸ்மென்ட்தான் ரொம்ப நீளம்.!".
.
.
.