Wednesday, December 19, 2012

தில்லுதுரயும் ஒரு தில்லாலங்கிடியும்

தில்லுதுர படித்து முடித்து வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்கள் அது.

அன்று... இரவு உணவுக்காக வழக்கமாய் சாப்பிடும் மெஸ்ஸுக்கு போய்க் கொண்டிருக்கையில் சாலையில் அந்தப் பெரியவர் வழி மறித்தார்.

"தம்பி... நானும் என் மனைவியும் ஒரு வேலையா ஒருத்தரை பார்க்க கோயமுத்தூர் வந்தோம். வந்த எடத்துல பணத்த தொலைச்சிட்டோம். பாக்க வந்தவர் வேற எதோ வேலையா வெளியூர் போயிட்டாரு. நாளைக்கு காலைலதான் தஞ்சாவூர் போக முடியும்...!"

பெரியவர் சொல்லிக் கொண்டே போக, தில்லுதுர சிரித்தார்.

"இப்ப என்ன ஊருக்குப் போக பணம் வேணும்னு கேக்கப் போறியா பெருசு.?".

தில்லுதுர கேள்வியில் தெரிந்த நையாண்டியை புரிந்து கொண்ட பெரியவர் வாடிய முகத்துடன் சொன்னார்.

"ஊருக்குப் போக பணம் இருக்கு தம்பி. சாப்பிடத்தான்... சாப்பாட்டுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா போதும் தம்பி. ரெண்டு பேரும் சுகர் பேஷண்ட் வேற. மதியத்துலருந்து சாப்பிடாததால அதோ அங்க என் மனைவி ரொம்ப டயர்டாகி படுத்துட்டா.!" என்று அந்தக் கடைப் பக்கமாய் இருட்டைக் காட்டினார்.

எத்தனை ஆட்களை இந்த மாதிரிப் பாத்து இரக்கப்பட்டு ஏமாந்தாச்சு. இதுபோல அழுது புலம்பி காசை வாங்கிக் கொண்டு போன நிறையப் ஆட்களை அடுத்த அரை மணியில் டாஸ்மாக்கில் பார்த்ததும் நடந்திருக்கிறது.

தில்லுதுர இந்தமுறை ஏமாறத் தயாராயில்லை.

அவர் அந்தப் பெரியவரை பார்த்து சொன்னார்.

"இங்க பாரு பெருசு... காசெல்லாம் தரமுடியாது. உனக்கு சாப்பாடுதான வேணும். நான் இப்ப சாப்பிடத்தான் போறேன். கூட வந்து வேணுங்கறதச் சாப்பிடு. மனைவிக்கும் வேண்டியதை வாங்கிக்க. ஓகேன்னா இப்பவே எங்கூட வா... என்ன.?".

தில்லுதுர கேட்டதும் பெரியவர் முகம் மலர்ந்து போனார்.

"ரொம்ப சந்தோஷம் தம்பி. இருங்க அவகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்.!" என்று அந்த இருட்டுக்குள் ஓடிவிட்டு வந்தவர் தில்லுதுர பின்னாலேயே மெஸ்ஸுக்கு வந்துவிட்டார்.

பெரியவருக்கு உண்மையிலேயே பசிதான் போல. பார்க்க நல்ல குடும்பக்காரர் போலத்தான் தெரிந்தார். தஞ்சாவூர், மழை, விவசாயம், கோயில் என ஏதேதோ பேசிக் கொண்டே சாப்பிட்டவர், மறக்காமல் மனைவிக்கும் பார்சல் வாங்கிக் கொண்டார்.

சாப்பிட்டு முடித்து கல்லாவில் இருந்த நோட்டை வாங்கி தில்லுதுர சாப்பாட்டு கணக்கை எழுதுவதற்குள், "நான் கிளம்பட்டா தம்பி.!" என்று கேட்டபடியே கடை முதலாளிக்கும் ஒரு வணக்கம் போட்டுவிட்டு இருளில் இறங்கி மறைந்தே போனார்.

தில்லுதுரக்கும் ஒருவருக்கு உதவியதை விட அடுத்தவரிடம் இந்தமுறை ஏமாறவில்லை என்ற கர்வம் தான் அதிகமாய் இருந்தது.

காலை டிஃபன் சாப்பிட மெஸ்ஸுக்கு வந்த தில்லுதுர, லேட்டாகிவிட்ட அவசரத்தில் வேகவேகமாய் சாப்பிட்டு முடித்து கணக்கை எழுத நோட்டை வாங்கிப் பார்த்தவர் கேட்டார்.

"என்ன முதலாளி... இப்பத்தான் சாப்பிடவே வர்றேன். அதுக்கு முன்னயே ரெண்டு டிஃபண் கணக்கு எழுதிருக்கே.!".

கேட்ட தில்லுதுரயைப் பார்த்து முதலாளி சொன்னார்.
"ஆமா தில்லு.. நீ இப்பத்தான் வர்ற. ஆனா, காலைல ஏழரைக்கே நேத்து உங்கூட வந்த உன் அப்பா வந்து அவருக்கும் அம்மாவுக்கும் டிஃபன் பார்சல் வாங்கிட்டுப் போனாரே.!".
.
.
.

Thursday, December 13, 2012

டேனியும் ஆதாமின்ட இடுப்பு எலும்பும்

டேனியின் யூகேஜி முடிந்து முதல் வகுப்புக்கு முந்தைய கோடை விடுமுறை.

எந்நேரமும் டிவியும் ரிமோட்டுமாக இருக்கிறானே என்ற கவலை லேசாய் எழ ஆரம்பித்த நேரம்.

பக்கத்து வீட்டு பொடியன் ஜான்சன் வாசலில் வந்து நின்றான்.

"ஆன்ட்டி... இன்னிக்கு அடுத்ததெரு சர்ச்ல பைபிள் க்ளாஸ் ஸ்டார்ட் பண்றாங்க. டெய்லி ஒன் அவர். அம்மா என்னை போகச் சொல்றாங்க.
நான் டேனியையும் கூட்டிட்டுப் போகட்டா.?".

'சும்மா டிவி பாக்கறதுக்கு இது நல்ல விஷயந்தானே.?' -என்று யோசித்தபடியே திரும்புவதற்குள் டேனி ஜான்சனுடன் கிளம்பிவிட்டான்.

பைபிள் க்ளாஸ் முடிந்து வந்தவன் நேராய் அவன் அப்பாவிடம் ஓடினான்.
"அப்பா... இன்னிக்கு பைபிள் க்ளாஸ்ல அந்த அங்கிள் சொன்னாரு. கடவுள் ஆதாமோட இடுப்புல இருந்து ஒரு எலும்ப எடுத்துத்தான் ஏவாளை படைச்சாராம். அவங்க ரெண்டு பேருக்கும்தான் கல்யாணம் ஆச்சாம். நெசம்மாப்பா.?".

அவன் கேட்ட ஆர்வத்தைப் பார்த்த படியே அவன் அப்பா அவனிடம் சொன்னார்.

"ஆமாம்... ஏன் கேக்கற.?".

டேனி இன்னும் அந்த ஆச்சர்யம் மாறாமல் கேட்டான்.

"டிவில பாக்கறனே.. யாருக்காவது காயம் பட்டாலே எத்தனை ரத்தம் வருது. இந்த கடவுள் அப்படி இடுப்பு எலும்ப எடுத்தப்ப ஆதாமுக்கு பயங்கரமா காயமாகி ரொம்ப ரத்தம் வந்திருக்கும் தானேப்பா.?".

அவன் அப்பா சிரித்தபடி அவனுக்கு புரிவதற்காக சொன்னார்.

"அதெல்லாம் மனுசங்க செஞ்சாத்தான் பயங்கர ரத்தமெல்லாம் வரும். கடவுள் ஆதாமோட எலும்ப எடுத்தப்ப அவனுக்கு லேசா ஒரு வலி மட்டும்தான் வந்துச்சாம். அப்புறம்தான் அதை ஏவாளா மாத்தி கடவுள் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாராம்.!".

அப்பா சொன்னதும் சந்தேகம் தெளிந்து ஜான்சனுடன் வெளியெஎ விளையாட ஓடியவன் கொஞ்ச நேரத்தில் எங்கோ விழுந்து எந்தரித்த அழுக்கோடு வந்தவன் அவன் அப்பாவிடம் ஓடினான்.

"அப்பா எனக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் நடக்கப் போகுதுனு நெனைக்கறேன்.!".

சொன்ன டேனியிடம்,"ஏன் அப்படி சொல்ற.?" என்று அவன் அப்பா கேட்க... டேனி சொன்னான்.

"ஏன்னா, எனக்கு இப்ப இடுப்பு வலிக்குதே.!".
.
.
.

Thursday, December 6, 2012

அரசியல்வாதி




ஊரில் ஒரு பெரிய மனுஷன்.

புத்திசாலித்தனம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள...தன் மகன்களுக்கிடையே ஒரு போட்டி வைத்தாராம்.

ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, அதில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி...  தன் வீட்டின் ஒரு அறையை பூராவும் நிறைக்க வேண்டும் என்பதே அந்தப் போட்டி.

ஒரு மகன் விவசாயி.

ஆயிரம் ரூபாய்க்கும் வைக்கோலாய் வாங்கிக் கொண்டு வந்து அறை நிரப்பினாராம்.

ஆனால் பாவம், அறை கால்வாசிகூட நிரம்பவில்லை.

அடுத்த மகன் வியாபாரி.

ஆயிரம் ரூபாய்க்கும் பஞ்சு வாங்கிக் கொண்டு வந்து அறை நிரப்பினாராம்.

ஆனால் பரிதாபம், அறை அரைவாசிகூட நிரம்பவில்லை.

கடைசி மகனோ அரசியல்வாதி.

அவன் ஒரு ரூபாய்க்கு ஒரு மெழுகுவர்த்தி அறையில் ஏற்றினானாம்.

அறை முழுவதும் ஒளியால் நிரம்பியது.

பெரியவர் மற்ற இரு மகன்களைப் பார்த்து பெருமையாய் சொன்னாராம்.

"புரிந்ததா புத்திசாலித்தனம் என்றால் என்னவென்று.?"

கேட்டதும் மகன்கள் இருவரும் தலையைக் குனிய, அரசியல்வாதி மகனின் பிஏ தனக்குள் முணுமுணுத்தானாம்.

"ஆமாமா... எந்த லூஸாவது 'மீதி தொள்ளாயிரத்து தொண்ணூதொம்பது ரூபா எங்கே'னு கேட்டுச்சா பாரு.!!!".
.
.
.

Tuesday, December 4, 2012

மனைவியின் காதலன்



தில்லுதுர எப்போதும் தன் மனைவியை மதித்ததே இல்லை.

என்னவோ திருமணமாகிஆறேழு வருடங்கள் ஆகிவிட்டதே தவிர, மனைவியின் அழகின் மேல் அவருக்கு வருத்தம் இருந்து கொண்டேதான் இருந்தது.

கருப்பு நிறம்.

குறைந்த படிப்பு.

குள்ளம்.

நல்ல ட்ரெஸ்ஸிங் சென்ஸ் கிடையாது.

தனக்கு மேட்சாயில்லை என ஆயிரம் குறைகள் அவருக்கு.

இது பற்றி சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் பேச்சில் மனைவியை குத்திக் கொண்டேதான் இருப்பார்.

தன்னைக் காதலித்த பெண்களை, இப்போதும் தன்னை ஆராதிக்கும் அழகிகள்  என்று அவர் தற்பெருமைகள் வேறு.

அவர் மனைவியும் அப்படியொன்றும் அழகு கம்மியில்லை என்றாலும், இல்லாத குறையை கணவர் குத்திக் காட்டும் போது அவருக்கு வருத்தமாய்த்தான் இருக்கும்.

அதற்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது சொல்லிக் கொள்ளலாம் என்று காத்திருந்த தில்லுதுர மனைவிக்கு, பையனின் காதுகுத்துக்காக மாமனார் வீட்டை அழைக்க தில்லுதுர வந்த போது அந்த சான்ஸ் கிடைத்தது.

தனது கல்லூரிக்காலத்தில் தன்னைக் காதலித்து தோற்று, இன்றும் தேவதாஸாய் சுற்றும் சுந்தரை தூரத்தில் பார்க்க நேர்ந்ததும், அவர் தில்லுதுரயிடம் அவனைக் காட்டினார்.

"ஏங்க... அதோ அந்த ஆளைப் பாத்தீங்களா.?".

தில்லுதுர அசுவாரஸ்யமாய் அவர் காட்டிய அந்த ஆளைப் பார்த்தபடி கேட்டார்.

"எது... அந்த அழுக்கு சட்டையும் தாடியுமாய் குடிச்சுத் தள்ளாடிட்டுப் போறானே... அந்த ஆளா.?"

தில்லுதுரயின் மனைவி இப்போது இன்னும் உற்சாகமாய்ச் சொன்னார்.

"அந்த ஆள் ஏன் அப்படி இருக்கார் தெரியுமா.?"

தில்லுதுர குழப்பத்துடன் தலையாட்டினார்... "ம்ஹூம்...தெரியலையே.!!".

தில்லுதுர மனைவி தன் கணவனிடம் தன் அழகையும் ஒருவன் ஆராதித்த கதையை மிகுந்த சந்தோஷத்துடன்  சொன்னார்.

"பத்து வருஷம் முன்னாடி இந்த சுந்தர் என்னைக் காதலிச்சாரு. ஒருதடவை எனக்கு லவ் லெட்டர் கூட கொடுத்தாரு. நான் அவர் காதலை ஏத்துக்க மறுத்துட்டேன். நான் அவர் காதலை ஏத்துக்க மறுத்த அந்த கணத்துலருந்து இன்னை வரைக்கும் அவர்  இப்படித்தான் இருக்காரு..!".

தில்லுதுர மிகவும் அதிர்ந்துபோய் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.

"என்னது அவன் உனக்கு லவ் லெட்டர் குடுத்து நீ மறுத்ததால தான், பத்து வருஷமா இந்த ஆளு இப்படி இருக்கானா.?".

தில்லுதுர மனைவி இப்போது மிகுந்த கர்வத்துடன் 'ஆமாம்...!' என்பதுபோல் தலையை ஆட்ட...

தில்லுதுர அதே ஆச்சர்யத்துடன் தொடர்ந்து சொன்னார்.

"ஆனாலும்...  அதை ஒரு மனுஷன் பத்து வருஷம் செலிபரேட் பண்ணறதெல்லாம் ஓவர் இல்லையா.?".
.
.
.


Thursday, November 29, 2012

வண்டி பஞ்சர்

நல்ல மதியத்தில் தில்லுதுர வண்டி பஞ்சராகி நின்ற தெருவில் கண்ணுக்கு எட்டிய வரையில் ஆள் நடமாட்டமே இல்லை.

தில்லுதுர தனியாய் வந்ததை விடக் கொடுமையான விஷயம், வண்டி பஞ்சரான இடத்துக்கு எதிரே இருந்த மனநலவிடுதிக் காப்பகம்.

உண்மையிலேயே தில்லுதுரக்கு அன்று கெட்ட நேரந்தான் போல.

பயத்துடனே ஸ்டெப்னியை மாட்ட கழட்டிய பஞ்சரான வீலின் நாலு நட்டு-களும் வைத்திருந்த பேப்பரோடு திரும்பி பக்கத்திலிருந்த மேன்ஹோலில் விழுந்து தொலைந்தது.

'என்ன செய்யலாம்.?' என பதட்டத்தோடு யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த மனநல விடுதி உள்ளிருந்து ஒரு ஆள் வெளியே வந்தவர் நேரே தில்லுதுரயைப் பார்த்து வந்தார்.

பக்கம் வந்தவரை பயத்துடன் கவனித்தார் தில்லுதுர.

யூனிஃபார்ம், ஐடி கார்டு, கலைந்த தலை எல்லாம் அவர் அந்த மனநலவிடுதியின் இன்-பேஷன்ட் என்பதை தெளிவாய் சொன்னது.

அவரோ அலட்சியமாய், "என்ன வண்டி பஞ்சரா.? என்ன யோசிச்சிட்டிருக்கீங்க.?" எனக் கேட்டதும் தில்லுதுர பிரச்னையை சொல்லி, "இப்ப என்ன செய்யறதுனு புரியல..!" என்று பயத்துடனேயே சொன்னார்.

வந்தவரோ தோளைக் குலுக்கிக் கொண்டு, "இதுல புரியாத அளவுக்கு என்ன இருக்கு.? தோ... ஒரு மைல் தூரத்துல ஒரு மெக்கானிக் ஷாப் இருக்கு. போய் நாலு நட்டு கடனா வாங்கிட்டு வரலாம். இல்ல மத்த மூணு வீல்லருந்தும் ஒவ்வொரு நட்டை கழட்டி இந்த நல்ல வீலை மாட்டி
மெல்ல ஓட்டிகிட்டு போயி அங்கயே கூட சரி பண்ணிக்கலாம். என்ன.?"

கேட்டுவிட்டு அவர் நகர ஆரம்பிக்க... தில்லுதுர ஆச்சர்யம் கலந்த சந்தேகத்துடன் அவரை கூப்பிட்டார்.

"சார்... அப்ப நீங்க.?"

அவர் புன்னகையுடன் திரும்பிக் கேட்டார்.

"என்ன நான் இவ்வளவு தெளிவா பேசறேனே... பைத்தியமா இல்லையானு தெரியனும். அதானே.?" என்றவர் தொடர்ந்து சொன்னார்.

"நான் சத்தியமா பைத்தியமே தான்.!".
அவர் அப்படிச் சொன்னதும் தில்லுதுர ஆச்சர்யத்துடன் கேட்டார்.

"அப்பறம் எப்படி சார்... இப்படி ஒரு சூப்பர் ஐடியாவை சொன்னீங்க.?".

தில்லுதுர கேட்டதும் அவர் சிரித்தபடியே தில்லுதுரயைப் பார்த்துச் சொன்னார்.

"எப்படின்னா, நான் வெறும் பைத்தியந்தான்... ஆனா, உன்ன மாதிரி மடையன் கிடையாது.!".
.
.
.

Wednesday, November 21, 2012

மனைவிக்கு பிறந்தநாள் பரிசு




அன்று தில்லுதுர மனைவிக்குப் பிறந்தநாள்.

நண்பர் ராஜாவுடன் கடைகடையாய் ஏறி இறங்கி அலைந்து திரிந்து தன் மனைவிக்கு பிறந்த நாள் பரிசாக, ஒரு அற்புதமான எலெக்ட்ரிக் பியானோ வாங்கிக் கொண்டு போனார் தில்லுதுர.

தில்லுதுர மனைவி ஓரளவு பியானோ வாசிப்பார் என்பது தெரியும் என்பதால், ஒருவாரம் கழித்து ராஜா ஆர்வத்துடன் தில்லுதுரயிடம் கேட்டார்.

"என்னப்பா தில்லு... எப்படி பியானோ வாசிக்கறா உன் மனைவி.?".

கேட்ட ராஜாவை கவலையுடன் பார்த்த தில்லுதுர சொன்னார்.

"பேசாம 'மவுத் ஆர்கன்' வாங்கிக் கொடுத்திருக்கலாம்பா அவளுக்கு..!".

சொன்ன தில்லுதுரயை குழப்பத்துடன் பார்த்த ராஜா கேட்டார்.

"ஏன்.. மவுத் ஆர்கனும் வாசிப்பாங்களா உன் வீட்டுல.?"

கேட்ட ராஜவைப் பார்த்து தில்லுதுர எந்த உணார்ச்சியும் இல்லாமல் சொன்னார்.

"இல்லப்பா... அட்லீஸ்ட் மவுத் ஆர்கன் வாசிச்சா பாட முடியாது பாரு..!".



Thursday, October 25, 2012

டேனியின் சினிமா

டேனி வந்தவுடன் அவனுடன் சினிமாவுக்குப் போவதற்காக காத்திருந்தான் அச்சுத்.

படம் போடுவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

தியேட்டர் வேறு இன்னும் கால் மணி தூரம் போகவேண்டும்.

வருவதாய்ச் சொன்ன டேனி வேறு இவ்வளவு லேட்டாக்குகிறான்.

அச்சுத் டென்ஷனில் நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருக்க, வேகவேகமாய் வாசலில் வந்து நின்றான் டேனி.

கடுப்போடு அச்சுத் கேட்டான்.

"ஏண்டா லேட்டு.?".

டேனி வியர்த்து வடியும் முகத்தை துடைத்தவாறே சொன்னான்.

"அதையேன்டா கேக்கற... கிளம்பற நேரத்துல அம்மா -பக்கத்து கோயில்ல பக்திப் பிரசங்கம் நடக்குது அதுக்குப் போ-ன்னு சொல்றாங்க. எனக்கோ சினிமாக்குப் போகலாம்னு ஆசை. என்ன பண்றதுன்னு யோசிச்சிகிட்டே, 'டாஸ் போட்டு பாத்து எது வருதோ...
அதுக்குத்தான் போவேன்'னு அம்மாகிட்ட சொல்லிட்டேன்..!" என்றான்.

அச்சுத் கேட்டான்.

"டாஸ் போட்டு பாத்தியாடா.? சினிமாக்கு போலாம்னு வந்துச்சா.?"

டேனி புன்னகைத்தபடி ஆம் என்று தலையசைத்தான்.

டேனி தலையாட்டியதும் அடுத்து அச்சுத் ஆச்சர்யத்துடன் கேட்டான்.

"ஒரு டாஸ் பாக்கறதுக்காடா இவ்வளவு நேரம்.?"

அச்சுத் கேட்டதும் அவன் முகத்தைப் பார்த்தபடி, டேனி முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொன்னான்.

"இல்லடா... பக்கத்துக் கோயில் சாமி சக்தியுள்ளது போல. சினிமாக்கு போகலாம்னு  டாஸ் விழுகறதுக்குள்ள ஐம்பது அறுபதுவாட்டி டாஸ் போட வேண்டியதாயிடுச்சு.!" என்றான்.
.
.
.

Tuesday, September 25, 2012

தில்லுதுரயும் திடுக் பாட்டியும்


நண்பர் நடத்தும் முதியோர் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த டூர்  பஸ்ஸுக்கான ட்ரைவருக்கு அன்று ஏனோ வரமுடியவில்லை.

'இல்லத்தின் முதியவர்கள் ஏமாந்துவிடக்கூடாதே..' என்று அந்த நண்பர் அன்று தில்லுதுரயின் உதவியைக் கேட்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் தில்லுதுரயும் சந்தோஷமாய் அந்த பஸ் டிரைவர் வேலையை ஒப்புக் கொண்டார்.

காலை ஆறுமணிக்கு பஸ் கிளம்பியதிலிருந்தே எல்லா முதியவர்களும் தங்கள் வயதை மறந்து ஆட்டம் பாட்டம், கேலி, கிண்டல், பாடல்கள் என அட்டாகசம் செய்தபடி குழந்தைகள் போல குதூகலமாய் வந்து கொண்டிருந்தார்கள்.

எவ்வளவு நேரம் முடியும்..?

எட்டு மணிக்கு எல்லாம் அடங்கி, ஆளாளுக்கு அவரவர் கொண்டு வந்திருந்த தின்பண்டங்களை பகிர்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்.
ஒரு பத்து பதினைந்து நிமிடம் இருக்கும்.

வயதான பாட்டி ஒன்று வந்து பஸ்ஸை ஓட்டிக் கொண்டிருந்த தில்லுதுர தோளைத் தட்டியது.

திரும்பிய தில்லுதுரயைப் பார்த்து தனது பொக்கை வாயை காட்டி சிரித்தபடி, "இந்தா தம்பி.... இதைக் கொஞ்சம் சாப்பிடு..!" என்று கொஞ்சம் உடைந்த முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவை இருந்த ஒரு காகிதப் பொட்டலத்தை நீட்டியது.

தில்லுதுரயும் சிரித்தபடியே வாங்கி சாப்பிட்டபடி வண்டியை தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருந்தார்.

எல்லாம் காலியாகி இன்னும் ஒரு பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும்.

அதே பாட்டி அதேபோல் தில்லுதுர தோளைத் தட்டியது.

"இன்னும் கொஞ்சம் சாப்பிடறயா தம்பி..?" என்று அதேபோல் மறுபடி ஒரு பொட்டலத்தை நீட்டியது.

அதே உடைந்த முந்திரி, பாதாம், பிஸ்தா வஸ்துக்கள்.

தில்லுதுர சிரித்தபடி மறுத்தார்.

"போதும் பாட்டி.. நீங்களே சாப்பிடுங்க..!".

பாட்டி புன்னகைத்தபடி பதில் சொன்னது.

"இல்ல தம்பி... எங்க யாருக்கும் பல்லு கிடையாது. அதனால இதை எங்களால சாப்பிட முடியாது.! நீ சாப்பிடலைனா இதை கீழதான் போடணும்..!".

பாட்டி சொன்னதும் ஆச்சர்யத்துடன் திரும்பிய தில்லுதுர கேட்டார்.

"சாப்பிட முடியாதுன்னா... அப்புறம் எதுக்கு இதையெல்லாம் வாங்கினீங்க..?".

தில்லுதுர கேட்டதும் அந்தப் பாட்டி அப்போதும் புன்னகை மாறாமல் பதில் சொன்னது.

"இதை யாரு வாங்கினா.? நாங்க வாங்கின சாக்லெட் பாருக்குள்ள இது இருந்தது. உண்மைல இதைச் சுத்தி இருக்கற சாக்லெட் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். அதை நாங்கெல்லாம் சப்பிச் சாப்பிட்டுட்டு இதை வேஸ்ட்டா எறிய வேண்டாமேன்னு உனக்கு குடுத்தேன்...!" என்றார்.
.
.
.

Monday, September 10, 2012

ரியாஷ் டென்டிஸ்ட்டும் டேனியும்

ரியாஷ் டென்டிஸ்ட் கோவையில் தனது டிஸ்பென்சரியின் கிளை புதிதாய் திறந்திருந்த நேரம்.

கோவை மக்களைக் கவர புதிதாய் ஒரு விளம்பரத்தை போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டினார்.

மறுநாள் கோவையில் அந்த "வலியில்லா வைத்தியர் ரியாஷ் டென்ட்டிஸ்ட் இப்போது கோவையிலும்.!" போஸ்டரை பார்த்தவர்கள் எல்லோரும் வியந்தே போனார்கள்.

ஒரு வாரத்துக்கு அப்புறம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அந்தப் போஸ்டரை பார்த்துவிட்டு, "அதெப்படி வலியில்லா வைத்தியர் .?" என்பதை வியந்து பேசிக் கொண்டிருக்கையில் டேனி சொன்னான்.

"அந்த டாக்டர் பொய் சொல்றாரு அங்கிள்.!".

டேனி சொன்னதும் ஆச்சர்யத்துடன் திரும்பிய பக்கத்து வீட்டுக்காரர் அவனிடம் கேட்டார்.

"அதெப்படி அவர் பொய் சொல்றாருனு சொல்ற.?"

அவர் கேட்டதும் டேனி ஆர்வத்துடன் தனது அனுபவத்தை சொல்ல ஆரம்பித்தான்.

"நேத்து எனக்கு பல்லு வலினு என்னை எங்கம்மா அந்த டாக்டர்கிட்டதான் கூட்டிட்டுப் போனாங்க அங்கிள்.!".

டேனி கேட்பதற்கு ஆள் கிடைத்ததும் தன் கண்களை விரித்த படி கதையை தொடர்ந்தான்.

"சேர்ல ஏத்தி உக்கார வச்சிட்டு வாயைத் திறக்கச் சொல்லி ஒரு விரல விட்டு கடவாய்ப் பல்லுகிட்ட செக் பண்ணாரா... நான் பயத்துல அவர் விரல நல்லா நறுக்குனு கடிச்சு வச்சிட்டேன்.!".

"ம்ம்ம்... அப்புறம்..!" பக்கத்து வீட்டுக்காரர் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

டேனி தொடர்ந்து சொன்னான்.

"நான் கடிச்ச உடன, அந்த வலியில்லா வைத்தியருனு சொன்னவரு நம்ம எல்லார் மாதிரியுந்தான் 'ஐயோ... அம்மா'னு கத்தினாரு அங்கிள். அப்ப அவருக்கு வலிக்குதுதான.!" என்றான்.
.
.
.

Wednesday, September 5, 2012

தில்லுதுர என்றொரு கடன்காரன்

தில்லுதுரயின் ரெடிமேட் துணிக்கடை பிசினஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த காலம் அது.

ஏரியாவே தில்லுதுரயின் கடையை நம்பியிருந்தாலும் தில்லுதுர சரக்கை சப்ளை செய்பவர்களுக்கு ஒரு சிம்மசொப்பனம் தான்.

தெரியாமல் எவனாவது சரக்கை கொடுத்து விட்டால், அதற்கு பணத்தை வசூல் செய்வதற்குள் அவனுக்கு குறைந்தது ஐந்தாறு பிறந்தநாளாவது வந்துவிடும்.

அன்றைக்கும் அப்படித்தான்.

தில்லுதுர திருப்பூரின் மிக பிரபலமான கம்பெனிக்கு ஒரு பத்தாயிரம் பனியன்கள் சப்ளை செய்யச் சொல்லி ஒரு மெயில் அனுப்பியிருந்தார்.

அந்தக் கம்பெனியில் தில்லுதுரயின் பழைய வராக்கடன்களை எல்லாம் பட்டியலிட்டு விட்டு கூடவே ஒரு மெயிலும் அனுப்பியிருந்தார்கள்.

"மன்னிக்கவும் மிஸ்டர். தில்லுதுர...
தங்களது பழைய பாக்கி இவ்வளவு இருப்பதால் தாங்கள் அதை நேர் செய்த பின்பே இந்த ஆர்டரை பிராசஸ் செய்து பொருட்களை அனுப்ப முடியும். தங்களின் மேலான பதிலை எதிர்பார்த்து...!" என எழுதி ஒப்பம் அட்டாச் செய்யப் பட்டிருந்தது.

மெயிலைப் பார்த்த தில்லுதுர உடனடியாய் அவர்களுக்கு இவ்வாறு ஒரு பதில் போட்டார்.

"ஐயா...
வியாபாரம் ஜரூராய் நடந்து கொண்டிருக்கும் சமயம். சரக்கு மிக அவசரத் தேவையாய் இருக்கிறது.
நீங்களோ பழைய கடனை பைசல் செய்தால்தான் சரக்கை சப்ளை செய்ய முடியுமென்று சொல்கிறீர்கள்.
ஆனால், என்னால் அவ்வளவு நீண்டகாலம் காத்திருக்க முடியாதென்பதால் நான் வேறு இடம் பார்த்துக் கொள்கிறேன்.
அந்த ஆர்டரை கேன்சல் செய்து விடுங்கள்.

அன்பன்,
தில்லுதுர."
.
.
.

Thursday, August 30, 2012

பச்சைக்கிளி முத்துச்சரம்

நம்ம சிங் முதன்முதலாய் தனது தேங்காய் பிசினஸ் விஷயமாய் பொள்ளாச்சி வந்திருந்தார்.

வந்தவர் சில தென்னந்தோப்பு முதலாளிகளைச் சந்திக்க பொள்ளாச்சியை அடுத்திருந்த ஆனைமலையில் சுற்றிக் கொண்டிருக்கும் போதுதான் தனது வாழ்க்கையிலேயே முதன்முதலாய் ஒரு கிளியைப் பார்த்தார்.

பார்ப்பதற்கு பச்சைப் பசேலென்று கொழுத்திருந்த அந்தக் கிளி ஒரு ஓட்டு வீட்டின் கூரை மேல் உட்கார்ந்திருந்தது.

இதற்கு முன் கிளியை படத்தில் கூட பார்த்தோ கேட்டோ இருக்காத நம்ம சிங் கிளியின் அழகில் கிட்டத்தட்ட மயங்கியே போனார்.

"ஆஹா எவ்வளவு அழகிய பேர்ட் இது.! பச்சைப் பசேலென்று உடல்; செக்கச் சிவந்த அந்த மூக்கு.! இந்த பேர்ட் மட்டும் கிடைத்தால் குழந்தைகள் சந்தோஷப் படுமே... கிராமமே நம்மைப் பார்த்து அதிசயிக்குமே... பஞ்சாபில் நமக்கு பெரிய மரியாதையே கிடைக்குமே.!"

யோசிக்க யோசிக்க நம்ம சிங் வந்த வேலையை மறந்தார்.

எப்படியாவது அந்தக் கிளியை பிடித்துவிடும் முடிவில் காரை நிறுத்தினார்.

மெல்ல கிளியின் பின்பக்கமாய் வந்து அந்த வீட்டின் கூரையில் சப்தமில்லாமல் ஏறி, கிளி ஏமாந்த ஒரு தருணத்தில் அதைப் பிடித்தே விட்டார்.

அந்தக் கிளியோ பேசும் கிளி.

தன்னைப் பிடித்த நம்ம சிங்கைப் பார்த்து கோபத்துடன் திரும்பிய கிளி சிக்கிய கடுப்புடன் கத்தியது.!

"டாய்... எவன்டா அவன் என்னைப் பிடிச்சது.! விடுடா என்னை.!".

கிளி பேசியதைக் கேட்டதும் பட்டென்று கையை விட்டுவிட்ட நம்ம சிங், அந்தக் கிளியைப் பார்த்து பயபக்தியுடன் சொன்னார்.

"மன்னிச்சுக்கங்க சார். நீங்க பச்சைக் கலர்ல ரெக்கையோட இருக்கறதப் பாத்து நீங்க ஒரு பேர்டுனு நெனச்சுட்டேன் சார்.!" என்றார்.
.
.
.

Wednesday, June 20, 2012

டேனியின் அனிதா மிஸ்

டேனிக்கு ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்தாகிவிட்டது.

மூன்று நாட்கள் அவனுடைய யுகேஜி வகுப்புகளுக்கும் போய் வந்துவிட்டான் அவன்.

மூன்றாம் இரவு தூங்கும் முன் அவன் அப்பாவிடம் வந்த டேனி கண்களை விரித்துக் கொண்டு சொன்னான்.

"தெரியுமாப்பா... எங்க அனிதா மிஸ் முந்தாநேத்து சொன்னாங்க... அவங்க
நம்ம வீட்ல ஒரு சீக்ரெட் கேமரா ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க.!".

ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட டேனியின் அப்பாவும்
அதே ஆச்சர்யத்துடன் அவனிடம் கேட்டார்.

"அப்படியா... எதுக்கு.?".

டேனி தன் அப்பாவுக்கு தெரியாத ஒரு விஷயத்தை விளக்கும் ஆர்வத்துடன் அவரிடம் தொடர்ந்து சொன்னான்.

"ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் டெய்லி நைட்டு பெட்டுக்கு போறதுக்கு முன்னாடி பிரஷ் பண்ணிட்டுத்தான் தூங்கணும். இல்லைனா, ஸ்டூடன்ட்ஸ் காலைல
வந்ததும் எங்க அனிதா மிஸ் அந்த சீக்ரெட் கேமராவை ஓப்பன் பண்ணிப் பாப்பாங்க. யாரெல்லாம் நைட் பிரஷ் பண்ணலையோ அவங்களுக்கெல்லாம் பனிஷ்மென்ட்... தெரியுமா.?".

டேனி சொன்னதும் அவன் அப்பா அதே தொனியில் அவனிடம் சொன்னார்.

"அய்யய்யோ... அப்ப நீ தூங்கப் போறதுக்கு முன்ன இன்னிக்கு பிரஷ் பண்ணனுமா.?".

அவர் கேட்டதும் டேனி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்.
"இல்லப்பா... வேணாம்.!".

டேனி அப்படிச் சொன்னதும் அரண்டு போன அவன் அப்பா அவனிடம் கேட்டார்.

"என்னது வேண்டாமா... அப்புறம் மிஸ் பனிஷ்மென்ட் கொடுப்பாங்களே.!".

அவர் அப்படிக் கேட்டதும் டேனி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னான்.

"நேத்துக் கூடத்தான் நான் பிரஷ் பண்ணல... ஆனா, மிஸ் ஒண்ணுமே சொல்லலியே.!"
.
.
.


Monday, April 9, 2012

தில்லுதுரயின் குடும்பக் கதை

அன்று தில்லுதுர தனது நிறுவனத்தை நடத்தும் ஏரியாவின், ஓனர்ஸ் அசோசியேஷன் மெம்பர்கள் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள்.

ஓனர்ஸ் அசோசியேஷனுக்கு இதுவரை ஒரு பைசா கூடத் தராத தில்லுதுரயிடமிருந்து, இந்த முறை ஒரு நல்ல தொகையைப் பெறாமல் போகக் கூடாது என்ற முடிவில் வந்திருந்தார்கள் அவர்கள்.

தில்லுதுரயின் டேபிளுக்கு வந்ததும் அவர்களில் ஒருவர் ஆரம்பித்தார்.

"தலைவரே... நம்மளோடது வருஷத்துக்கு 50கோடி டர்ன் - ஓவர் பண்ணற கம்பெனி. ஆனாலும், இதுவரை நீங்க ஓனர்ஸ் அசோசியேஷனுக்கு எதுவும் உதவி செய்யல.! அதனால, இந்தத் தடவை நீங்க எதாவது ஒரு பெரிய தொகைக்கு செக் கொடுத்தே ஆகணும்..!".

கறாராகச் சொன்னவரை, கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தார் தில்லுதுர.

"என் வருமானத்தைப் பத்திச் சொல்லறீங்களே... என் அம்மா பத்து வருஷமா படுத்த படுக்கையா இருந்து போன மாசம்தான் ஹாஸ்பிடலை விட்டு வந்தாங்க.! அவங்களுக்கு எத்தனை கோடி செலவாச்சுனு உங்க யாருக்காவது தெரியுமாப்பா..?".

வந்தவர்கள் தெரியாது என்று மெல்லத் தலையாட்டினார்கள்.

தில்லுதுர தொடர்ந்தார்.

"என் தம்பி.. கண்ணு தெரியாம, கால் நடக்க முடியாம இருந்து ஆறு மாசம் முன்னாடி அவனுக்கு ஆப்பரேஷன் செஞ்சு சரி செஞ்சோமே.... அதுக்கு எத்தனை பணம் செலவாச்சுனு தெரியுமா உங்களுக்கு..?".

வந்தவர்கள் இன்னும் சங்கடத்தோடு தெரியாது என்று மறுபடி தலையாட்டினார்கள்.

தில்லுதுர தனது கோபம் ஆறாமல் தொடர்ந்தார்.

"என் தங்கச்சியோட கணவர், ரெண்டு மாசம் முன்னாடி ஒரு ரோட் ஆக்ஸிடென்ட்ல இறந்து போனாரு. என் தங்கச்சி மூணு கைக்குழந்தையோட கையில காசு இல்லாம கஷ்டப்படறாளே... அவளுக்கு மாசம் என்ன செலவாகுது தெரியுமா உங்களுக்கு..?".

வந்தவர்கள் மன்னிப்புக் கோரும் வகையில்,"மன்னிச்சுக்கங்க தில்லுதுர... எங்களுக்கு இது எதுவுமே தெரியாது...!'" என்றதும், தில்லுதுர சற்றே கோபம் தணிந்த குரலில் சொன்னார்.

"இவ்வளவு கஷ்டப்படற அவங்களுக்கே நான் இதுவரை ஒரு பைசா தந்ததில்ல. நீங்க யாருன்னு உங்களுக்கு கொடுக்கறதுனு சொல்லுங்க...!"
.
.
.

Monday, April 2, 2012

இப்ப என்ன செய்வீங்க.?

(நகைச்சுவைதான் என்றாலும்... ஒரு மனிதனாக, ஒரு இக்கட்டான சமயத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள் எனத் தெரிந்து கொள்ள கேட்கப்படும் கற்பனைக் கதை இது. எனவே, வரிவரியாக கவனமாகப் படித்து பதில் சொல்லவும்)

நீங்கள் ஒரு தமிழர்.

அதிலும் 'மயக்கம் என்ன..?' தனுஷ் போல ஒரு அற்புதமான ஃபோட்டோகிராபர்.

நீங்கள் இப்போது ஒரு பத்திரிக்கை சார்பாக, கடலில் சூரியன் மறைவதைப் பார்க்க வந்திருக்கும் பிரதமரை ஃபோட்டோ எடுக்க வந்திருக்கிறீர்கள்.

கடற்கரையில் பிரதமருக்காக காத்து நிற்கும்போது ஒரு சூறாவளி அடிக்கிறது.

சூறாவளி என்றால் கடும் சூறாவளி.

நீங்கள் இப்போது அந்த சூறாவளியின் சரியான மையத்தில் நிற்கிறீர்கள்.

வீடும் மரமும் மரங்களும் கால்நடைகளும் கடல் நீரும் இப்போது உங்களைச் சுற்றி சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது.

உங்களால் இப்போது செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்றாலும், இயற்கையின் பெரும்பலத்தை உணர்த்தும் அந்த அற்புதமான தருணத்தை அழகழகான ஃபோட்டோக்களாய் கேமராவில் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள்.

அப்போதுதான், அந்தச் சூறாவளியின் நடுவே உயிருக்காக போராடும் அந்த மனிதனைப் பார்க்கிறீர்கள்.

காற்றும் நீரும் சகதியும் அந்த மனிதனை சுழற்றி எறிய எறிய பக்கத்தில் சென்ற நீங்கள் அந்த மனிதனை எங்கோ பார்த்திருப்பதாய் உணர்கிறீர்கள்.

ஓ... அது நமது பிரதமர்.!

இப்போது உங்களுக்கு ரெண்டு வாய்ப்பு இருக்கிறது.

ஒன்று உங்கள் தேசத்தின் பிரதமர் உயிரைக் காக்கும் அரிய வாய்ப்பு.

அல்லது ஒரு பவர்ஃபுல் மனிதரின் கடைசி நிமிடத்தை ஃபோட்டோவாய் பதிவு செய்ததற்காக, ஃபோட்டோவின் ஆஸ்கார் போன்ற புலிட்சர் விருது.

இப்போது தான் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய தருணம்.

தயவுசெய்து இந்தக் கேள்விக்கு நியாயமான பதிலைச் சொல்லுங்கள்.

"நீங்கள் இப்போது இந்தத் தருணத்தில் இதைப் பதிவு செய்ய கலர் ஃபிலிமைத் தேர்ந்தெடுப்பீர்களா... இல்லை, காலம் கடந்து நிற்க வேண்டும் என்பதற்காக கருப்பு வெள்ளை ஃபிலிமைத் தேர்ந்தெடுப்பீர்களா.?".
.
.
.

Thursday, March 29, 2012

தில்லுதுர வீட்டுக்கு வரல

அன்று தில்லுதுர மனைவிக்கு பிறந்த நாள்.

சாயங்காலம் வந்து வெளியே எங்கேயாவது கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லிச் சென்ற தில்லுதுர, இரவு பதினோரு மணியாகியும் வீடு வந்து சேரவில்லை.

காத்திருந்து காத்திருந்து வெறுத்துப் போன மனைவி கடுப்புடன் அவருக்கு ஃபோன் செய்தாள்.

மறுமுனையில் தில்லுதுர ஃபோனை எடுத்ததும், கடுப்பும் வெறுப்பும் உமிழ கோபமாய்க் கேட்டாள்.

"எங்க போய்த் தொலைஞ்சீங்க இந்நேரம் வரைக்கும்.?".

மறுமுனையில் அன்பும் காதலும் வழிய தில்லுதுரயின் குரல் கேட்டது.

"செல்லம்... உனக்கு ஞாபகம் இருக்கா.? அன்னிக்கு ஒருநாள் ஒரு நகைக் கடையில ஒரு வைர நெக்லஸை பாத்துட்டு ஆசையோட கேட்டியே... எங்கிட்ட கூட அன்னிக்கு பணம் இல்லாம இருந்தது. ஆனாலும் அப்ப உங்கிட்டச் சொன்னேனே.... இந்த வைர நெக்லஸ் கண்டிப்பா ஒருநாள் உன் கழுத்துல கிடக்கும்னு.... உனக்கு ஞாபகம் இருக்கா..?".

தில்லுதுரயின் மனைவியின் கோபம் இப்போது காணாமல் போயிருந்தது.

அதே காதலும் புன்னகையும் வழிய ஃபோனில் பதில் சொன்னாள்.

"அதெப்படிங்க மறப்பேன்... நல்லா ஞாபகம் இருக்கு.!".

மனைவி சொன்னதும் தில்லுதுர அதே அன்புடன் தொடர்ந்து சொன்னார்.

"அந்த நகைக்கடைக்கு பக்கத்து இருக்கற டீக்கடையிலதான் இப்ப என் ஃபிரண்ட் ராஜாகூட டீ சாப்டுட்டு இருக்கேன்...!".
.
.
.

Monday, March 26, 2012

மாருதிஜென் குரு கொஸாகிபஸபுகல்

100 வருடங்களைத் தாண்டியும் வாழ்ந்தவர் நம்ம மாருதிஜென்குரு கொஸாகிபஸபுகல்.

அவர் தனது இறக்கும் தருவாயில் இருந்தார்.

வாழும் ஒவ்வொரு கணமும், பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இந்த சமூகத்துக்கான செய்தியாய் விளங்கியவர் அவர்.

இறக்கும் தருணத்தில் அவர் சொல்லப்போகும் கடைசிச் செய்திக்காக, அந்த ஊரும் அவரது சிஷ்யர்களும் அவரது மரணப் படுக்கையைச் சுற்றிக் காத்திருந்தார்கள்.

போகும் தருணம் சுகமாய் இருப்பதற்காக, சிஷ்யர்கள் கொடுத்த கடைசி டம்ளர் பாலையும் அருந்த மறுத்துக் கொண்டிருந்தார் குரு கொஸாகி.

பார்த்துக் கொண்டே இருந்த பிரதம சிஷ்யன் தோத்தாங்கோலீஸ்-க்கு அந்த யோசனை வர, டக்கென்று அந்த பால் டம்ளரை எடுத்துக் கொண்டு தனது அந்தரங்க அறைக்கு ஓடினான்.

போன மாதம் தனது நண்பன் கொடுத்த ஃபாரின் விஸ்கியை கப்போர்டிலிருந்து எடுத்து, தேவைக்கு சற்று அதிகமாகவே அந்தப் பாலில் கலந்தான் சிஷ்யன் தோத்தாங்கோலீஸ்.

பிறகு அந்தப் பாலை மரணப் படுக்கையில் இருந்த குரு கொஸாகிபஸபுகலிடம் கொண்டு வந்த சிஷ்யன் தோத்தாங்கோலீஸ், அன்புடன் குருவின் தலையை ஆதுரத்துடன் தடவியவாறு அந்தப் பாலை அருந்தக் கொடுத்தான்.

பிரதம சிஷ்யன் கொடுத்ததால், மறுக்கமுடியாமல் ஒரு மிடறு பாலைக் குடித்த குரு கொஸாகி... அடுத்த மிடறு பாலையும் ஆர்வத்துடன் குடித்தார்.

கொஞ்ச நேரம், கொஞ்சமே கொஞ்ச நேரத்தில் டம்ளரின் கடைசிச் சொட்டுவரை ஆர்வத்துடன் பாலைக் குடித்து முடித்த குருவிடம் சிஷ்யர்கள் கேட்டார்கள்.

"குருவே... இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் இறக்கப் போகிறீர்கள். இந்த தருணத்தில் தாங்கள் எங்களுக்கு சொல்லப் போகும் கடைசிச் செய்தி என்ன.?".

குடித்த பாலின் சுவை தொண்டையில் இருக்க, ஒரு கணம் தான் சாப்பிட்ட பாலை சப்புக் கொட்டியவாறு குரு கொஸாகி தனது கடைசி செய்தியைச் சொன்னார்.

"அந்தப் பசுவை விற்றுவிடாதே.!"
.
.
.

Wednesday, March 21, 2012

3 (தனுஷுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல)

அந்த மருத்துவமனையில் அன்று மூன்று குழந்தைகள் பிறந்தன.

ஒன்று விருந்தினராய் வந்திருந்த சிங்களப் பெண்ணுக்கும், ஒன்று அகதியாய் வந்திருந்த ஈழத் தமிழ் பெண்ணுக்கும், மற்றொன்று தமிழகத்தை சார்ந்த மத்திய கட்சி அரசியல்வாதியின் மனைவிக்குமாய் மொத்தம் மூன்று குழந்தைகள்.

ஆச்சர்யமான ஆச்சர்யமாய்... ஒரே நாளில், ஒரே நேரத்தில், ஒரே அறையில், கிட்டத்தட்ட ஒரே எடையில் பிறந்தன அந்த மூன்று குழந்தைகளும்.

அந்த ஆச்சர்யமே ஒரு பெரிய குழப்பத்தையும் உண்டாக்கி விட்டது மருத்துவமனையில்.

குழந்தைகளை குளிப்பாட்ட அறைக்குள் எடுத்துச்சென்ற நர்ஸ், பதட்டத்தில் குழந்தைகளை இடம் மாற்றி வைத்துவிட, இப்போது யார் குழந்தை யாருடையது என்று அடையாளம் தெரியாமல் போய்விட்டது.

கவலையுடன் நர்ஸ் விஷயத்தை டாக்டரிடம் சொல்ல, டாக்டரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளின் தந்தையரை அழைத்து விஷயத்தைச் சொன்னார்.

விஷயத்தைக் கேட்ட மற்றவர்களும் குழப்பமடைய, ஈழத்தமிழ்க் குழந்தையின் தந்தை மட்டும் புன்னகைத்தவாறு சொன்னார்.

"அந்த மூணு குழந்தையையும் இந்த டேபிள்ல கொண்டு வந்து படுக்க வைங்க... கண்டுபிடிச்சிடலாம்..!".

சொன்னதுபோல், வரிசையாய் குழந்தைகளை கொண்டு வந்து டேபிளில் படுக்க வைத்ததும், அந்த ஈழத்தமிழர் சப்தமாய், "ஜெய் டைகர்...!" என்று குரல் கொடுத்தார்.

டைகர் என்ற சப்தம் கேட்டதுதான் மாயம்.

ஈழத்தமிழ்க் குழந்தை கையை உயர்த்தி சல்யூட் அடிக்க, சிங்களக் குழந்தை மூச்சா கக்காவே போய்விட்டது.

ஆனால், மத்திய அரசியல்வாதியின் குழந்தையோ எந்தக் கவலையும் இன்றி குஷியாய், அந்த மூச்சா கக்காவில் கையால் டப்டப்பென்று அடித்து, அது மூஞ்சியில் தெறிக்க விளையாட ஆரம்பித்திருந்தது.
.
.
.

Monday, March 19, 2012

டாக்டர் தண்டபாணி

டாக்டர் தண்டபாணி அந்த நகரத்திலேயே ஒரு புகழ் பெற்ற ஆங்கில மருத்துவர்.

அவரை அன்று லையன்ஸ் க்ளாப் சார்பாக, ஒரு சர்க்கரை நோய் விழிப்புணர்வுக் கூட்டத்தில் பேச சிறப்பு விருந்தினராய் அழைத்திருந்தார்கள்.

தண்டபாணியும் அந்த புத்தகம் இந்தப் புத்தகம் என்று எல்லாப் புத்தகமும் பார்த்து, அற்புதமாய் ஒரு ஆறு பக்க ஆங்கில உரையை ரெடி செய்து, அதை தன் கைப்பட எழுதி எடுத்து சென்றிருந்தார்.

கூட்டம் ஆரம்பித்து, எல்லோரும் சர்க்கரை நோய் குறித்து கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என எல்லாப் பக்கமும் அலசி ஆராய்ந்து உரையாற்றிவிட்டு அமர்ந்தார்கள்.

ஒரு அரை மணி இருக்கும்

நிகழ்ச்சி அமைப்பாளர், இப்போது டாக்டர் தண்டபாணியை பேச அழைத்தார்கள்.

தண்டபாணி புன்னகையுடன் எழுந்து சென்று, மைக்கைத் தட்டிப் பார்த்துவிட்டு, தான் கொண்டு வந்திருந்த பேசுவதற்காக உரையைப் பிரித்தார்.

கடவுளே... என்னவொரு சோதனை...?

தண்டபாணிக்கு தான் எழுதியதில் ஒரு எழுத்துகூட தனக்கே புரியவில்லை.

தொண்டையைக் கனைத்தபடி, மைக்கைத் தட்டியபடி ஒவ்வொரு பக்கமாக புரட்டுகிறார்.

ம்ஹூம்... ஒரு எழுத்து என்றால் ஒரு எழுத்து கூடப் புரியவில்லை.

வந்தவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லியபடியே, தான் எழுதியது யாருக்குப் புரியும் என்று யோசித்தவாறு பேசிய டாக்டர் தண்டபாணி... அடுத்துக் கேட்டார்.

"இந்தக் கூட்டத்துல யாராவது மெடிக்கல் ஷாப் வச்சிருக்கவங்க இருக்கீங்களா.?"
.
.
.

Tuesday, March 13, 2012

தில்லுதுர கிஸ் மீ

நான் அன்னிக்கு லீவுக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தேன்.

வீட்ல மதிய சாப்பாடு முடிந்து ஒரு சின்னத் தூக்கத்துக்கு அப்புறம், சாயங்காலம் காலாற ஒரு சின்ன வாக்கிங் போய்க் கொண்டிருந்த நேரம்.

"தில்லுதுர ஏழாம் நம்பர் மரத்தடில தோண்டு..!"னு ஒரு குரல் கேட்டது.

சுத்தியும் பார்த்தா யாரும் இல்ல."தில்லுதுர ஏழாம் நம்பர் மரத்தடில தோண்டு..!"னு மறுபடி அதே குரல் கேட்க, கவனிச்சுப் பார்த்தா அந்த மரத்தடியில பச்சைநிறத்தில் மின்னிக்கிட்டு ஒரு தவளை மட்டும் தெரிந்தது.

சந்தேகத்துடன் அந்தத் தவளையைப் பார்த்துக் கேட்டேன்.

"நீயா பேசின.?".

"ஆமா, பேசாத.... அந்த மரத்தடில தோண்டு..!".

சரி... என்னதான் நடக்குதுனு பக்கத்துல கிடந்த கம்பிய எடுத்து, அந்த தவளை சொன்ன எடத்துல தோண்டினேன்.

சொன்னா நம்ப மாட்டீங்க.... முழுசா ஒரு பெரிய தங்கக் காசு.

நம்பமுடியாம நான் அந்தத் தவளையப் பார்க்க... அது,"தில்லுதுர... இப்ப பத்தாவது மரத்தடியில தோண்டு...!" அப்டினுச்சு.

இப்ப சந்தேகமே இல்லாம அந்தக் கம்பியத் தூக்கிட்டுப் போயி, பத்தாம் நம்பர் மரத்தடில வேக வேகமாய்த் தோண்டினேன்.

இப்ப அப்படியே முள்ளங்கிப் பத்தையாட்டமா, அஞ்சு பெரிய பெரிய தங்கக் காசு.

மெரண்டு போயிட்டேன்.

இப்ப அந்தத் தவளையைத் தூக்கி கையில வச்சுக்கிட்டு கேட்டேன்.

"அடுத்தது என்ன..?"தவளை இப்ப சொல்லுச்சு,"தில்லுதுர... இப்ப கேரளா போ..!".

நானும் உடனே அதேபோல கேரளா வந்துட்டேன்.

தவளை சொல்லுச்சு,"தில்லுதுர... இப்ப கஞ்சன் ஜங்கா பத்துகோடி சூப்பர் பம்பர் லாட்டரி, இன்னிக்கு குலுக்கல்.!".

நானும் அதேபோல கஞ்சன் ஜங்கா பத்துக் கோடி லாட்டரி நேத்திக்கு குலுக்கல் லாட்டரி வாங்கினேன்.

அடிச்சதுடா... மொத ப்ரைஸு பத்துக் கோடி..!

எனக்கு என்ன பண்றதுனே தெரியல. மொதல்ல பாடாவதி ஹோட்டலை மாத்தி ஸ்டார் ஹோட்டலுக்கு வந்தேன்.

ஒரே நாள்ல நான் கோடீஸ்வரன். கையில பத்துக்கோடி... நம்பவே முடியல.!

சந்தோசத்தோட அந்த தவளையப் பாத்துக் கேட்டேன்.

"வாழ்க்கைலயே நான் பாக்க முடியாத பணத்த ஒரே நாள்ல சம்பாதிச்சுக் கொடுத்துட்ட. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியல...!"னு சொன்னதும் தவளை சொன்னது.

"தில்லுதுர கிஸ் மீ...!".

நான் கொஞ்சம் கூட யோசிக்கல. ஒருநாள்ல பத்து கோடி சம்பாதிச்சுக் கொடுத்த தவளை... அதை முத்தமிட்டால் என்ன தவறு.?

அந்த தவளையை கையிலெடுத்து ஆசையாய் ஒரு முத்தம் கொடுத்தேன்.

என்ன ஆச்சர்யம்... அந்தத் தவளை அப்படியே ஒரு அழகான மனதை மயக்கும் 20வயசுப் பொண்ணா மாறிடுச்சு.

சொல்லிக் கொண்டே வந்த தில்லுதுர, கொஞ்சம் நிறுத்தி கரகரவென்ற தொண்டையை சரி செய்து கொண்டு தொடர்ந்தார்.

"இப்படித்தான் யுவர் ஆனர் அந்தப் பொண்ணு என் ரூமுக்குள்ள வந்தா. அப்பப் பாத்து போலீஸ் வந்துடுச்சு.!"
.
.
.

Monday, March 12, 2012

சர்க்கரை இல்லாத தேநீர்












ஷிர்டியில் சாய்பாபா வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தது இது.

ஷிர்டியில் இருந்து தொலைவில் இருந்த தாணே-வில் சிவில் கோர்ட்டில் ஒரு தற்காலிக வேலை பார்த்து வந்தவர் சோல்கர்... பயங்கர ஏழை.
ஒரு சமயம் சாயியைப் பற்றிய கீர்த்தனைகளை கேட்க நேர்ந்த அவர், தான் எழுதும் பரிட்சையில் வென்று தனக்கு ஒரு நிரந்தர வேலை கிடைத்தால் ஷிர்டி வந்து சாயியை தரிசித்து, அங்கே கல்கண்டு விநியோகம் செய்வதாய் வேண்டிக் கொண்டார்.

சொன்னது போல் சோல்கரின் வேண்டுதல் நிறைவேறவும் செய்தது.

குடும்ப முன்னேற்றத்திற்க்காக இமயமலையைக் கூட தாண்டிவிடும் ஒரு குடும்பஸ்தனால், குடும்பத்தை மீறி தன் வீட்டு வாசற்படியை தாண்ட முடிவதில்லை என்பது நிதர்சனம்.

நல்ல வேலையும் சம்பளமும் இப்போது கிடைத்தாலும் குடும்பத் தேவைகள் அவரை தனது பிரார்த்தனையை நிறைவேற்ற விடாமல் வாட்டிக் கொண்டிருந்தன.

இதனால், தனது பிரார்த்தனையை முடிக்க ஒரு உபாயம் செய்தார்.

ஷிர்டி செல்லும் பயணத்துக்குத் தேவையான பணத்தை சேமிக்க உணவிலும் தேநீரிலும் சர்க்கரை இல்லாமல் சாப்பிட்டு அந்த பணத்தை சேமிக்க முடிவு செய்து, அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தார்.

கொஞ்சகாலம், கற்கண்டை விநியோகிக்க சர்க்கரை அற்ற கசப்பான தேநீர் குடித்ததன் மூலம் மிச்சம் பிடித்த பணத்தை சேமித்த சோல்கர், தேவையான பணம் சேர்ந்ததும் ஷிர்டி வந்து பாபாவின் பாதத்தில் வீழ்ந்தார்.

தான் பட்ட கஷ்டத்தை மறைத்து, தனது ஆசை பூர்த்தியான மனமகிழ்ச்சியுடன் பாபாவுக்கு தான் கொண்டு வந்த தேங்காயை அர்ப்பணித்துவிட்டு தனது வேண்டுதலான கற்கண்டையும் விநியோகித்தார் சோல்கர்.

நீண்டதூரம் பயணித்து தம்மை தரிசிக்க வந்த பக்தருக்கு உணவளிக்க உதவியாளரை அழைத்த பாபா புன்னகையுடன் சொன்னார்.

"விருந்தினர் சோல்கருக்கு மனம் நிறைய உணவளியுங்கள். அதற்கு முன்னர் அவருக்கு சர்க்கரை நிறைமுழுதுமாய் கரைக்கப்பட்ட தேநீரைக் கொடுங்கள்.!".

பாபா இவ்வாறு சொல்ல, கண்களில் கரகரவென நீர்வழிய, மெய்சிலிர்த்து... சோல்கர் மறுபடி பாபாவின் காலில் விழுவதை அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

.

.

.

Monday, March 5, 2012

தலைமுடி ஏன் நரைக்கிறது.?

ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலத்தில், டேனியும் அவன் அப்பாவும் ஏதோ விளையாடிக் கொண்டிருந்த சமயம் நடந்தது இது.

அவன் அப்பா நெருங்கிய நாற்பதுகளில் இருப்பதால், காதோரங்களில் நரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழத் துவங்கியிருந்ததைக் கவனித்த டேனி அப்பாவிடம் கேட்டான்.

"ஏம்பா... உனக்கு முடியெல்லாம் வெள்ளையாயிட்டு இருக்கு.?"

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவனை நல்வழிப்படுத்த தவறமாட்டார் அவர் என்பதால் யோசித்தபடியே சொன்னார்.

"அதுவா... டேனி அவன் அப்பா சொல்றது கேக்காம குறும்பு பண்ணற ஒவ்வொரு தடவையும் அவனோட அப்பாவுக்கு ஒரு தலைமுடி வெள்ளையாகணும்னு கடவுள் சொல்லிருக்காரு... அதனாலதான்.! நீ மட்டும் குறும்பு பண்ணாம, அப்பா சொல்படி கேட்டு நல்ல பையனா நடந்தா... அப்பா தலைமுடி வெள்ளையாகாது சரியா..?".

அப்பா சொல்வதை அப்படியே நம்பிக்கையுடன் கேட்ட டேனி, "சரிப்பா..!" என்றவன் தொடர்ந்து கேட்டான்.

"ஏம்பா... அப்ப தாத்தா தலைமுடி எல்லாம் ஏன் ஃபுல்லா வெள்ளையா இருக்கு..?".
.
.
.

Saturday, March 3, 2012

பரிணாம வளர்ச்சி

ஐந்து வயது டேனி, அன்று வகுப்பிலிருந்து வந்ததும் என்னிடம் ஓடி வந்தான்.

"அம்மா மனிதர்கள் இந்த உலகத்தில் எப்படி வந்தார்கள்னு வீட்டுல கேட்டுட்டு வரணும்னு டீச்சர் சொல்லிருக்காங்க. சொல்லுங்கம்மா... எப்படி வந்தாங்க..?"

ஏதாவது அறிவியல் வகுப்பாய் இருக்கும் என்று யோசித்தபடியே, "ரொம்ப காலத்துக்கு முன்னாடி இருந்த குரங்குகள்லருந்து மனுசங்க வந்தாங்க..!" என்று சொன்ன நான் அது எப்படி என்றும் தொடர்ந்து சொன்னேன்.

ஓரளவு புரிந்துகொண்ட பின் விளையாட ஒட்டிய டேனி, அவன் அப்பா ஆஃபிஸிலிருந்து வருவதைப் பார்த்ததும் ஓடி வந்தான்.

வந்தவன் அலுப்புடன் ஷூ கழற்றிக் கொண்டிருந்தவரிடம் நேராய்க் கேட்டான்.

"அப்பா... அப்பா... மனுசங்க எப்படிப்பா இந்த பூமிக்கு வந்தாங்க..?".

பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று தெரியாததால் அவர் லேசான கடுப்புடன், " அதுவா... முதல்ல கடவுள் ஆதாம் ஏவாளை பூமியில படைச்சாரு. அப்பறம் அவங்க குழந்தைங்க... அதுக்கப்புறம் அவங்க குழந்தைங்கனு நெறய மனுசங்க பூமிக்கு வந்தாங்க...!".

என் கணவர் சொன்னதும், குழப்பமாகிப் போன டேனி அப்பாவிடம் மறுபடி கேட்டான்.

"என்னப்பா நீ இப்படி சொல்ற.? அம்மா குரங்குகள்லருந்துதான் மனுசங்க வந்ததா சொல்றாங்க...!".

டேனி கேட்டதும், தன் அலுப்பெல்லாம் தீர்ந்ததுபோல் சிரித்தபடி அவர் சொன்னார்.

"ஓ அதுவா... அது அப்படித்தான்..! ஏன்னா, அம்மா அவங்க சைடு மனுசங்களைப் பத்தி உனக்கு சொன்னாங்க... நான் என் சைடு மனுசங்களைப் பத்தி சொன்னேன்..!" என்றார்.

அதற்கப்புறம் அவர் காஃபி கிடைக்காமல் கடைக்கு போனது தனிக்கதை.
.
.
.

Thursday, March 1, 2012

தில்லுதுர இன் கிரிக்கெட்

தில்லுதுர கல்லூரியில் கிரிக்கெட்டில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த காலம் அது.

அன்று ஸ்டேட் லெவல் மேட்ச்சில் அவர் காலேஜ் வெற்றி, பெற்றதற்கு அவர் கேப்டனாக இருந்ததும் முக்கிய காரணம்.

கப் அடித்ததோடு, அன்று மைதானத்தில் நடந்தது அவரை பறக்கவே வைத்துவிட்டது.

லீடிங் ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையான ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிக்கையின் ஆசாமி ஒருவர் வந்து தில்லுதுரயிடம் சந்தோஷமாய் கைகொடுத்துப் பேசினார்.

"கலக்கலா வெளயாண்டீங்க. ஞாயித்துக் கிழமை வீட்டுல இருப்பீங்களா.? பார்க்கலாமா..?".

தில்லுதுர சந்தோஷமாய், "வாங்க சார்... எப்ப வேணா பாக்கலாம்..!" என்று அங்கேயே சொல்லி விட்டார்.

காலேஜிலும் இந்த நியூஸ் பரவி ஒரு ஹீரோவே ஆகிவிட்டார் தில்லுதுர.

ஐந்து நாட்கள்... ஞாயிற்றுக் கிழமை எப்படா வரும் என்று ஐந்து யுகமாகவே கழிந்தது தில்லுதுரக்கு.

சரியாய் ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்கு, தில்லுதுர வீட்டு வாசலில் வந்து நின்றது அந்த பைக்.

பைக்கிலிருந்து இறங்கிய இருவரது டி-ஷர்ட்டிலும் 'ஸ்போர்ட்ஸ்டார்' என்று சிவப்பில் எழுதியிருக்க, மிகுந்த குஷியாகிப் போனார் தில்லுதுர.

வந்தவர்களை அழைத்து ஹாலில் உட்கார வைத்து காஃபி, ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்த பின் கேட்டார் தில்லுதுர.

"அப்புறம்.... சொல்லுங்க சார்..!".

வந்தவர்களில் சிவப்பாய் குண்டாய் இருந்தவர் ஆரம்பித்தார்.

"சார்... நாங்க ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிக்கைலருந்து வர்றோம். ஆக்சுவலா ஒரு இஷ்யூ பன்னிரண்டு ரூபா. ஒரு வருஷம் 52 இஷ்யூக்கு நீங்க 624 ரூபா கொடுக்கணும். ஆனா, எங்ககிட்ட சப்ஸ்கிருப்ஷன்னா 350ரூபா கட்டினாப் போதும். நாப்பத்திநாலு பர்சன்ட் லாபம்.!".

சொல்லிக் கொண்டே வந்தவருக்கு தில்லுதுர ஏன் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தார் என்று புரியவில்லை.
.
.
.

Friday, February 24, 2012

தில்லுதுர இன் டாஸ்மாக் பார்

ஒரு வெள்ளிக்கிழமையின் சாயங்காலம் முடிந்த நேரத்தில் டாஸ்மாக் பாருக்குள் நுழைந்த தில்லுதுர, மங்கலான வெளிச்சத்தில் ஒரு ஆளில்லாத டேபிளைத் தேடி அமர்ந்தார்.

அமர்ந்ததும் அவசர அவசரமாய் அங்கும் இங்கும் பரபரப்புடன் பார்த்த அவர், அட்டென்டரை வேகமாய்க் கையை ஆட்டி அழைத்தார்.

பக்கம் வந்த அட்டென்டர் ஆர்டரைக் கேட்பதற்குள், "சீக்கிரம் சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள... ரெண்டு எம்சி லார்ஜ் வித் ச்சில் சோடாவோட எடுத்துட்டு வாப்பா..!" என்றார்.

குழப்பத்துடன் அவரைப் பார்த்த அட்டென்டர், தில்லுதுர கேட்டதை கொண்டு வந்து கொடுத்தார்.

சரக்கு வந்ததும் கொஞ்சம் அவசரமாகவே அதைக் குடித்த தில்லுதுர, திருமபவும் பரபரப்புடன் அந்த அட்டென்டரை அழைத்தார்.

பக்கம் வந்த அட்டென்டரிடம் மறுபடி, "சீக்கிரம் சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள இன்னும் ரெண்டு எம்சி லார்ஜ் வித் ச்சில் சோடாவோட எடுத்துட்டு வாப்பா..!" என்றார்.

இன்னும் குழப்பமான அந்த அட்டென்டர், ஒன்றும் பேசாமல் திரும்பவும் தில்லுதுர கேட்டதையெல்லாம் கொண்டு வந்து டேபிளில் வைத்தார்.

அதையும் குடித்து முடித்துவிட்டு அந்த அட்டென்டரை அழைத்த தில்லுதுர, "சீக்கிரம் சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள இன்னும் ரெண்டு எம்சி லார்ஜ் வித் ச்சில் சோடாவோட எடுத்துட்டு வாப்பா..!" என்றார்.

கடுப்பாகிப் போன அட்டென்டர் ஆரடரைக் கொண்டு வந்து வைத்துவிட்டு, தில்லுதுரயைப் பார்த்து எரிச்சலுடன் கேட்டார்.

"சும்மா 'சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள'னு சொல்லறியே... சண்டை எப்பய்யா ஆரம்பிக்கப் போகுது.?".

அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருந்த தில்லுதுர, இப்போ அந்த அட்டென்டரைப் பார்த்து போதையாய் சிரித்தபடி சொன்னார்.

"இப்ப... நான் குடிச்சதுக்கெல்லாம் நீ பணம் கேட்ட உடனே...!" என்றார்.
.
.
.

Wednesday, February 22, 2012

வயதைக் கண்டுபிடிப்பது எப்படி.?


அன்று மாலை அலுவலகம் விட்டு வந்ததும் என் நான்கு வயது மகன் டேனியுடன் விளையாடாமல், ஏதோ ஒரு அப்ளிகேசனை நிரப்பும் பணியை கவனமாய் செய்து கொண்டிருந்தார் என் கணவர்.

அந்த வேலை முடிந்ததும் அவர் எப்படியும் விளையாட வருவார் என்ற நம்பிக்கையோடு, கையில் பேட்டும் பந்துமாய் அவர் எழுதும் டேபிளுக்கு அருகிலேயே விளையாடிக் கொண்டிருந்தான் டேனி.

அப்ளிகேஷனை நிரப்பிக் கொண்டே வந்தவர் திடீரென்று என்னை அழைத்தார்.

"கொஞ்சம் கால்குலேட்டரை எடுத்துட்டு வர்றியா..?"

அடுக்களையில் வேலையாய் இருந்த நான், "அப்ளிகேஷன் ஃபில் பண்ண கால்குலேட்டர் எதுக்குங்க..?" என்று கேட்க கடுப்புடன் பதில் சொன்னார் அவர்.

"இந்த மாசம் மொதத் தேதி அன்னிக்கு என் வயசு என்னனு கேட்டிருக்கான். அதை கழிச்சுப் பாக்கணும், அதுக்குத்தான்...!".

அவர் பேசுவதை கவனித்தபடியே விளையாடிக் கொண்டிருந்த டேனி சட்டென்று கேட்டான்.

"அப்பா... உன் வயசு தெரியணும்னா ஒரு ஈஸியான வழி இருக்கு, சொல்லட்டா.?"

ஆவலுடன் நிமிர்ந்த அவர் கேட்டார்.

"என்னது... சொல்லு சொல்லு..!".

அவர் கேட்டதும் டேனி சொன்னான்.

"உன்னோட பனியன், பின்னால உள்பக்கமா பாத்தா கண்டுபுடிச்சுடலாம்..!".

அவன் சொன்னதும் குழப்பமாகிப் போன என் கணவர் புரியாமல் அவனிடமே கேட்டார்.

"அதெப்படிடா... பனியன் உள்பக்கம் பாத்தா வயசு தெரியும்..?".

அவர் கேட்டதும் டேனி இன்னும் அழகாய் விளக்கும் விதமாய் சொன்னான்.

"ஆமாப்பா... வேணும்னா என் பனியனைப் பாரேன். உள்ளே ஃபோர் இயர்ஸ், ஃபைவ் இயர்ஸ்னு போட்டிருக்கு...!" என்றான்.
.
.
.