Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, August 30, 2015

தில்லுதுரயின் கடைசி நிமிடங்கள்

மாலை 5 மணிக்கு தில்லுதுரயைப் பரிசோதித்த டாக்டர் வந்த மெடிக்கல் ரிப்போர்ட்களைப் பார்த்ததுமே சொல்லிவிட்டார்.

”இன்னிக்கு ராத்திரிவரை தான் உங்க ஆயுள். நாளைக்கு காலைல நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க. அதனால உங்களுக்கு புடிச்சது எல்லாத்தையும் இன்னைக்கு ராத்திரிக்குள்ள செஞ்சிக்கங்க.!”.

ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்த தில்லுதுர, விஷயத்தை அழுதபடியே மனைவியிடம் சொன்னார்.

மனைவியும் துடித்துப் போனாள்.

கண்களைத் துடைத்தபடி தில்லுதுர கேட்டார்.

“எனக்கு உன் கையால உருளைக்கிழங்கு போண்டாவும், வாழைக்கா பஜ்ஜியும் சாப்பிடணும் போலருக்குமா… கொஞ்சம் செஞ்சி தர்றியா.?”

“இதோங்க… “ என்று எழுந்து ஓடிய மனைவியிடம் சொன்னார், “அப்படியே அதுக்கு தொட்டுக்க கொஞ்சம் தேங்காச் சட்டினியும் செஞ்சிடும்மா.!”
இரவு ஏழு மணிக்கு கேட்டார்.

“ராத்திரி சாப்பாட்டுக்கு வஞ்சிரம் மீன் குழம்பு, மட்டன் கோலா அப்படியே ரத்தப் பொறியல் செஞ்சிடும்மா. இன்னும் ஒரு நாலு மணிநேரந்தான் இருப்பேன்.!”

இரவு பத்து மணிக்கு கேட்டார்.

“நல்ல பசும் பாலை வாங்கி… அதை நல்லா சுண்டக் காய்ச்சி, கொஞ்சமா சர்க்கரை போட்டு, ஸ்ட்ராங்கா ஒரு ஃபில்டர் காஃபி போட்டுக் கொடும்மா.! இன்னும் ஒரு ரெண்டு மணிநேரந்தான் இருக்கு.!”

இரவு 12 மணி.

எதோ நினைத்தபடி... தன்னருகே அயர்ந்து தூங்கும் மனைவியை எழுப்புகிறார் தில்லுதுர.

தூக்க கலக்கத்துடன் திரும்பிப் படுத்த மனைவி கோபத்துடன் சொன்னாள்.

“பேசாம படுங்ககாலைல எந்திரிச்சதும் ஆயிரம் வேல இருக்கு. சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும், எடுத்துட்டுப் போறதுக்கு வண்டி சொல்லணும்உங்களுக்கென்ன காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல..!!”.
.
.
.

Monday, August 10, 2015

அம்மான்னா சும்மாவா…

சேகர் கிராமத்திலிருந்து சென்னைக்கு கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்க்க வந்தவன்.

வந்தவன் அந்தக் கலாச்சாரத்தோடே ஒன்றிப் போனதால், நாகரீகம் ரொம்ப முற்றி ‘ஓகே கண்மணி’ போல தன்னுடன் வேலை செய்யும் பெண்ணுடன் லிவிங் டுகெதராய் ஒரே வீட்டில் வசித்து வந்தான்.

ஒருநாள் அவன் அம்மா திடீரென்று கிராமத்தில் இருந்து அவன் தங்கும் ஃப்ளாட்டிற்கு வந்து விட்டாள்.

வந்தவன் சேகரும் ஓர் அழகான இளம்பெண்ணும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

அம்மா கேட்டாள், “இது யாரு.?”

சேகர் சொன்னான், “இது என் ரூம் மேட்மா.!”.

அம்மா, “அப்படீன்னா.?”

“ரூம் மேட்னா இதே வீட்ல என் கூட தங்கியிருக்கற பொண்ணு. நீ சந்தேகப்படுகிற மாதிரி வேற ஒண்ணும் இல்லம்மா. வீட்டை மட்டுந்தான் ஷேர் பண்ணிக்கறோம். மத்தபடி அவ தனி பெட்ரூம்.. நான் தனி பெட்ரூம்.!”

அம்மா மறுநாள் கிளம்பி கிராமத்திற்குப் போய் விட்டாள்.

இரண்டு நாட்கள் கழித்து சேகருடைய ரூம்மேட் சொன்னாள்.

“உங்கம்மா வந்து போனதில் இருந்து சமையல் ரூமில் இருந்த தோசைக் கரண்டியைக் காணலை. ஒருவேளை, உங்கம்மா எடுத்துட்டுப் போயிருப்பாங்களோ.?”
சேகர் சொன்னான், “தெரியலை… எங்க கிராமத்து வீட்டுல வேற ஃபோன் இல்லை. இரு… நான் எதுக்கும் லெட்டர் போட்டுக் கேக்கிறேன்.!”

அவன் அம்மாவுக்கு கடிதம் எழுதினான்.

“அன்புள்ள அம்மா, நான் நீங்கள் தோசைக் கரண்டியை எடுத்தீங்கன்னு சொல்லலை. எடுக்கலைன்னும் சொல்லலை. ஆனா, ஒண்ணு மட்டும் உண்மை. என் வீட்டுல இருந்து நீங்க போனதுக்கு அப்புறம் தோசைக் கரண்டியைக் காணவில்லை.!”

சில நாட்கள் கழித்து அம்மாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது.
அதை சேகர் பிரித்துப் படித்தான்.

“அன்புள்ள மகனுக்கு, நான் உன் கூட வசிக்கற பொண்ணோடு நீ தப்பா இருக்கறேன்னு சொல்லலை. இல்லைன்னும் சொல்லலை. ஆனா, ஒண்ணு மட்டும் உண்மை-
-அவள் அவ பெட்டுல தூங்கி இருந்தா இந்நேரம் அந்த தோசைக் கரண்டியைக் கண்டுபிடிச்சு இருப்பா.!”.


#வாட்ஸப்பிலிருந்து
.
.
.

Tuesday, August 4, 2015

மதுமகிழ் ராஜ்ஜியத்தின் மாஸ்மாக் மதுக்கடைகள்…


த்துப் பதினஞ்சு வருசமாக் குடிச்சிட்டிருந்த ராஜ்ஜியம் தான் அது… இப்ப கொஞ்சம் பேரு மதுக்கடைகளை மூடுங்கனு வந்து நிக்கறாங்க.

தேசத்தின் பெயரே மதுமகிழ் தேசம்னா பாத்துக்கங்களேன்.

ராஜா மதுவாணன் -மக்களிடம் வேலை வாங்கிக் கொடுத்த சம்பளத்தை, மந்திரி பெயரில் ஊரெல்லாம் மாஸ்மாக் என்று மதுக்கடைகளைத் திறந்து வைத்து திரும்பக் கஜானாவுக்கே கொண்டு வந்துவிடும் மதியூகி.

இல்லாவிட்டால்… ராஜா சொகுசாய் வாழ்வது எப்படி.?

இந்தத் திட்டத்தின் முக்கிய மூளையே மதுமகிழ் தேசத்தின் மகா மந்திரிதான்.

அதிலும் கள்ளு, சாராயம் போன்றவற்றால் கிடைத்த வருமானம் போதாது என்று சமீபமாய் விஸ்கி, பிராந்தி, ஜின், ரம் என ஃபாரின் சரக்குகளும் கலந்து கட்டி வியாபாரம் படுஜோராய் போய்க் கொண்டிருந்த காலத்தில்... கடையை மூடச் சொல்லி வந்து இத்தனை பேர் நிற்கிறார்கள்.

ராஜா இதில் தன் பெயர் கெடக்கூடாது என்று, மகா மந்திரிதான் இப்போது இந்தப் பிரச்னையைக் கையாள வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

கடைகளை மூடிவிட்டால் நஷ்டம் ராஜாவுக்கு மட்டுமல்ல, தனக்கும்தான் என்பதை உணர்ந்த மகா மந்திரி… மாஸ்மாக் மதுக்கடைகளை மூடச் சொல்லி வந்திருப்பவர்களைப் பார்த்தார்.

சமூக சேவகர்கள், ஊர்ப் பெரியவர்கள், அகிம்சாவாதிகள், குருகுல மாணவர்கள் மற்றும் கூடவே கொஞ்சம் பெண்கள்.

தனக்கு சப்போர்ட்டாய் இருக்கும் குடிகாரர்கள் ஒருத்தரையும் கூட்டத்தில் காணோம்.

மகா மந்திரி இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தபடி சொன்னார்.

“எல்லோரும் அரசவைக்கு வந்துடுங்க. நாம இதை சபைல வச்சு முடிச்சிடுவோம்.!”.

அரைமணியில் அரசவை கூடியதும்… இதுதான் அன்றைய முதல் பிரச்னையாக ஆரம்பித்தது.

மகா மந்திரி மாஸ்மாக் எதிர்ப்பாளர்களை சபை நடுவே வரச் சொன்னார்.

அவர்கள் எல்லோரும் கூடியதும் மகாமந்திரி சபையை பார்த்து பேச ஆரம்பித்தார்.

“சபையோர்களே… ராஜ்ஜியத்தின் அநேக வளர்ச்சிப் பணிகள் இந்த மாஸ்மாக் வருமானத்தின் மூலமாகவே நடக்கிறது என்பது தெரியும். ஆனால், குடியால் ஏற்படும் பாதிப்பு குறித்து இங்கே வந்திருக்கும் நம் குடிமக்கள் சொல்வதையும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும். ஆகவே மிக எளிதான ஒரு போட்டி வைக்க முடிவு செய்திருக்கிறேன். அதில் இவர்கள் ஜெயித்தால் நாளையிலிருந்தே நாட்டில் மதுவிலக்கு. இதில் தோற்றாலோ இவர்கள் இனி எக்காலமும் மதுவிலக்கு பற்றியே பேசக்கூடாது. ஒப்புக் கொள்கிறீர்களா.?”.

வந்திருந்தவர்களோ, ”முதலில் போட்டியைச் சொல்லுங்க மந்திரியாரே. பிறகு முடிவு செய்யலாம்.!” என்று உஷாராய்ச் சொல்ல, மகாமந்திரி போட்டி விதிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

“எல்லோரும் தயாரா இருக்கணும். விதூஷகன் மூணு எண்ணுவான். மூணு முடிஞ்சதும் மணி அடிக்கும். மணி அடிச்சதும் நான் ஒரு பழத்தோட பேரையோ, இல்லைனா ஒரு கலரையோ சொல்லுவேன். நான் பழத்தோட  பேரை சொன்னா எல்லோரும் வலது பக்கம் இருக்கற ரூமுக்குள்ள போயிடணும். கலரோட பேரச் சொன்னா எல்லோரும் இடது பக்கம் இருக்கற ரூமுக்குள்ள போயிடணும். அதுக்கப்பறம் ரெண்டு ரூமுக்குள்ள போயிருக்கறவங்க எண்ணிக்கைய வச்சு மதுவிலக்கை முடிவு செய்வோம். எங்கயும் போகாம சபைலயே நிக்கறவங்கள நாம கணக்கில எடுத்துக்க வேண்டாம். சரிதானே.!!”.

வந்திருந்தவர்கள் யோசிக்கவே தேவையில்லாத அளவுக்கு போட்டி சுலபமாய் இருந்ததும், வந்தவர்கள் எல்லோருமே மதுவிலக்குக்கு ஆதரவானவர்கள் என்பதாலும் ’ஜெயிக்கப் போவது நாம்தானே...’ என உடனே போட்டிக்கு ஒப்புக் கொண்டார்கள்.

போட்டி அப்போதே ஆரம்பமானது.

சபையில் எல்லோரும் ஆவலுடன் போட்டியைக் காணத் தயாராக, சபை நடுவே இருந்தவர்கள் போட்டிக்குத் தயாராய் அலெர்ட்டாய் நிற்க, விதூஷகன் எண்ணத் துவங்கினான்.

“ஒன்.!”

“ட்டூ.!!”

“த்ரீ.!!!”

எண்ணி முடித்ததும், “டொய்ங்.!!!” என்று பெரிய சத்தத்துடன் மணி அடித்தது.

அடுத்து எல்லோரும் மகாமந்திரியின் வார்த்தைக்காக, எந்தப் பக்கம் பாய்வது என்ற ஆர்வத்துடன் அவர் வாயையே பார்த்துக் கொண்டிருக்க…

மதுமகிழ் தேசத்து மகா மந்திரியின் குரல் ஓங்கி ஒலித்தது.


“ஆரஞ்ச்.!!!!!!!”
.
.
.

Sunday, August 2, 2015

தில்லுதுரயும் ஒரு தில்லாலங்கிடியும்


தில்லுதுரதான் அந்த ஏரியாவின் பெரிய குடியிருப்பான வசந்தம் நகர் குடியிருப்பு சங்கத்தின் தலைவர்.

அன்று அவர் அந்தக் குடியிருப்பைச் சுற்றியும் குடியிருப்புக்கு உள்ளேயும் சாலை போடுவதற்கான காண்ட்ராக்டரைத் தேர்ந்தெடுப்பதற்காக பேப்பரில் கொடுத்த விளம்பரம் பார்த்து வந்தவர்களைத் பார்க்க அமர்ந்திருந்தார்.

யார் குறைந்த தொகையில் நிறைவாகச் செய்து தர ஒப்புக் கொள்கிறார்களோ அவர்களுக்கு வேலையைக் கொடுப்பதாய்த் திட்டம்.

மூன்று பேர் காத்திருந்ததில் முதல் நபரை தில்லுதுர முதல் நபரை அழைத்தார்.

“ஏரியாவைப் பாத்திருப்பீங்க. உங்க ரேட் என்னனு சொல்ல முடியுமா.?”

முதலாமவர் புன்னகைத்தபடி பதில் சொன்னார்.

“சார்… நான் ஏபிசி கம்பெனியோட மேனேஜர். இந்த நகரமெங்கும் ஏகப்பட்ட சாலைகள் போட்ட அனுபவம் உள்ள கம்பெனி எங்களுடையது. இந்த வேலைக்கு ரொம்பக் கொறஞ்சதா செஞ்சாலும் முப்பது லட்சம் மெட்டீரியலுக்கும் இருபது லட்சம் லேபருக்கும் ஆகும். மொத்தமா ஐம்பது லட்சம் கொடுக்கறதா இருந்தா வேலைய முடிச்சுக் கொடுத்திடலாம்.!”.

”கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்…” என்றபடி தில்லுதுர அடுத்தவரை அழைத்தார்.

”சார்… நான் அல்ட்ரா ரோட் கம்பெனியோட பார்ட்னர். இந்த வேலைக்கு நாப்பது லட்சம் மெட்டீரியல் ஆகும். லேபருக்கு ஒரு இருபது லட்சம். இதர செலவுகள் ஒரு பதினஞ்சு. ஆக மொத்தம் எழுபத்தஞ்சு லட்சம் கொடுத்தா நல்லவிதமா செஞ்சு கொடுத்திடலாம் சார்.!”.

லேசாய் ஏமாற்றத்துடன் திரும்பிய தில்லுதுர, வெள்ளை வேட்டி சட்டையில் இருந்த அந்த மூன்றாமவரை யோசனையுடன் பார்த்தவாரே அழைத்தார்.

“உங்கள எங்கயோ பாத்திருக்கேனே சார்…”

வந்தவர் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தபடியே சொன்னார்.

“சார் என்னை மறந்துட்டீங்க போல. நாந்தான் இந்த வட்டச் செயலாளர். பேப்பர் விளம்பரம் பாத்துட்டுத்தான் வர்றேன். இவங்க சொன்ன ரேட்டையும் கவனிச்சேன். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. சங்கத்துல சொல்லி ஒரு ஒன்னரைக் கோடிய எடுத்துக் கொடுத்தீங்கனா இந்த ரோடு போடற வேலைய நானே அமோகமா முடிச்சுக் கொடுத்திடறேன்.!”

அவர் சொன்னதும் தில்லுதுர சற்றே கோபத்துடன் கேட்டார்.

“என்னது… இந்த வேலைக்கு ஒன்னரைக் கோடியா.? எங்க உங்க ப்ரேக்கப்பைக் கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.!”

தில்லுதுரயின் கோபத்தை கொஞ்சம்கூட லட்சியம் செய்யாத அந்த வட்டச்செயலாளர் சிரித்தபடியே தில்லுதுர பக்கமாய் வந்து மெலிதான குரலில் சொன்னார்.

”எல்லாம் ப்ரொசீஜர்படித்தான் சார் சொல்றேன். ஐம்பது லட்சம் உங்களுக்கு. ஐம்பது லட்சம் எனக்கு. அப்பறம் மீதி இருக்கற ஐம்பதை அந்த மொதல்ல வந்த ஏபிசிக் கம்பெனிக்காரன்கிட்டக் கொடுத்த அவன் ரோட்டைப் போட்டுக் கொடுத்திட்டுப் போறான். என்ன நாஞ்சொல்றது.!!!!”.
.
.
.

Wednesday, July 29, 2015

தில்லுதுரயும் புள்ளிராஜாவும்

தில்லுதுரயும் அவர் நண்பர் புள்ளிராஜாவும் அன்று சனிக்கிழமை வீக்கெண்டை டாஸ்மாக்கில் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டில் மனைவி ஊருக்குப் போயிருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாய் நேரமும் சரக்கும் அதிகமாகிக் கொண்டே போனது இருவருக்குமே தெரியவில்லை.

காருக்குத் திரும்பும்போது இருவருமே நிதானத்தில் இல்லை என்பது கால்களால் எட்டு போட்டபடி நடந்தபோதே தெரிந்தது.

காரும் டாஸ்மாக் இவர்களுடன் பாரில் குடித்து விட்டு வந்தது போலவே, சாலையில் இடதும் வலதுமாய் வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது.

நகரத்தை விட்டு வெளியேறியதும்… ஆளில்லா சாலையில் கார் வேகமெடுக்கவும் ஆரம்பித்துவிட்டது.

பத்து நிமிடம் இருக்கும்.

திடீரென காரின் முன் தெரிந்த மரத்தைப் பார்த்ததும் பதறிப்போன தில்லுதுர புள்ளிராஜாவைப் பார்த்துக் கத்தினார்.

“டேய் புள்ளி… மரம்டா.! ப்ரேக்கைப் போடு… ப்ரேக்கைப் போடு.!”.

தில்லுதுர கத்தினாரே தவிர, காரின் வேகம் சற்றும் குறையவில்லை.

“டேய் புள்ளி… மரம்டா.!” என்று தில்லுதுர பயந்து போய் கண்களை மூடிக் கத்தியபடி, “வண்டிய நிறுத்துடா” என்று அலறிய அதே விநாடி கார் அந்த மரத்தின் மீது மோத... தில்லுதுர பயத்தில் மயக்கமடைந்தே விட்டார்.

தில்லுதுர மறுபடி கண்களை விழித்தபோதுதான் தெரிந்தது… தான் ஒரு ஹாஸ்பிடலில் இருப்பது.

அடி பலமாய் இல்லையென்றாலும், வலி பலமாய் இருக்க கண்களைத் திருப்பியவர் பக்கத்தில் பேந்தப் பேந்த விழித்தபடி இருந்த புள்ளிராஜாவைப் பார்த்ததும் கோபத்துடன் கேட்டார்.

“ஏண்டா… எத்தன வாட்டி காரை நிறுத்தச் சொல்லிக் கத்தினேன். ஏன் நீ காரை நிறுத்தவேயில்ல.?”.

கோபத்துடன் பேசிய தில்லுதுரயைப் பரிதாபமாய்ப் பார்த்த புள்ளிராஜா மெலிதான கடுப்போடு சொன்னார்.


“ஏன்னா… காரை நீ ஓட்டிட்டு இருந்த.!”
.
.
.

Saturday, May 23, 2015

வட போச்சே…

அன்று டேனியின் அப்பாவுடைய மேனேஜர் குடும்பத்துடன் எங்கள் வீட்டு விருந்துக்கு வந்திருந்தார்.

காலை பத்தரை மணிக்கு வந்தவுடனேயே அவர்களுக்கு வடையும் காப்பியும் கொடுத்து வரவேற்றாகி விட்டது.

அவரும் மேனேஜரும் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்தபடியே பேசிக் கொண்டிருக்க, டேனியும் மேனேஜர் குழந்தையும் விளையாட வாசலுக்கு ஓடியிருந்தனர்.

மேனேஜரின் மனைவியும் பழகுவதற்கு எளியவராய், என்னுடன் பேசிக் கொண்டே எனக்கு உதவுவதற்காய் கிச்சனுக்குள் வந்துவிட்டார்.

மதிய விருந்துக்கு எல்லாவற்றையும் தயார் செய்து முடித்து டைனிங் டேபிளில் உட்கார்ந்த நேரம்.

சமையல் நல்ல விதமாய் அமைந்திருக்கவே, எல்லோரும் திருப்தியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சாப்பாடு… சாம்பார், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, ரசம் எல்லாம் முடிந்து தயிருக்குப் போயிருந்தபோதுதான் திடீரென அந்த மேனேஜர் கேட்டார்.

”இந்த தயிர் சாதத்துக்கு ஒரு வடை இருந்தா நல்லாருந்திருக்குமே.!”

சொன்னதும் பக்கென்று ஆகி விட்டது எனக்கு.

வடை எல்லாம் காலையிலேயே முடிந்து போய், மிச்சம் இருந்த ஒன்றிரண்டையும் டேனியும் அவர் குழந்தையும் சாப்பிட்டு தீர்த்து விட்டிருந்த படியால், என்ன பதில் சொல்வது என்று நான் விழிக்க ஆரம்பிக்க டேனி, “இருங்க அங்கிள்...!” டைனிங் டேபிளை விட்டு இறங்கி ஓடினான்.

வரும்போது அவன் கையில் ஒரு வடையிருக்க, அதை நேராய் ஓடி வந்து, “இந்தாங்க அங்கிள்.!” என்று அவனே மேனேஜரிடம் கொடுத்ததும் அவர் மிகுந்த சந்தோஷமாகி விட்டார்.

”குட் பாய்..!” என்று அவன் கன்னத்தை தட்டியபடி தயிர் சாதத்துடன் வடையைக் கடித்து சாப்பிட ஆரம்பிக்க…

அவர் மனைவி ஆர்வத்துடன் கேட்டார்.

“வடை எல்லாம் அப்பவே தீர்ந்துடுச்சேடா டேனி... அப்புறம் எங்கருந்து அங்கிளுக்கு வடையைக் கொண்டு வந்த.?”

அவர் கேட்டதும் டேனி பெருமையுடன் சொன்னான்.


”காலைல அம்மா வடை செஞ்ச ஒடனேயே… அப்பா வீட்ல இருக்கற எலியப் புடிக்க ஒரு வடைய எலிப்பொறில மாட்டி வச்சிருந்தாங்க. அதை இதுவரைக்கும் எலி சாப்பிடல. அதான் அங்கிளாவது சாப்பிடட்டுமேனு கொண்டு வந்து கொடுத்தேன்.!”
.
.
.

Wednesday, May 14, 2014

தப்புத் தப்பாய் ஒரு தப்பு

டேனியின் பள்ளியில் விடுமுறை விட்டு பதினைந்து நாட்களாகிவிட்டது.

இந்த விடுமுறை நாட்களில் பாடம் மறந்துவிடாமல் இருக்க, சின்னச் சின்னக் கணக்குகளும்,  மூன்றெழுத்து நான்கெழுத்து தமிழ் வார்த்தைகளும் எழுதப் படிக்கப் பழக்கச் சொல்லியிருந்தார்கள்.

அந்த முறையில் இன்று தமிழைக் கையில் எடுத்திருந்தேன்.

’படம், பாடம், உப்பு, தப்பு’ என மூன்றெழுத்து தமிழ் வார்த்தைகளை எழுதப் பழக்குவது என்ற முடிவுடன் உட்கார்ந்தாகிவிட்டது.

விடுமுறையிலும் எழுதப் படிக்கச் சொல்கிறார்களே என்ற கடுப்புடன் அமர்ந்த டேனி, தமிழ் என்றதும் கடுப்பின் உச்சத்துக்கே போய்விட்டான்.

படிப்பது ஆங்கில மீடியம் என்பதால் தமிழ் சரியாய் வராது என்பதும், தமிழ் என்றால் ஹோம்வொர்க் முடிய நேரம் அதிகமாகி விளையாடச் செல்வது தாமதமாகும் என்பதும்தான் காரணம்.

முதலில் படம், அடுத்து பாடம் என்னும் வார்த்தைகளை தப்பும் தவறுமாய் எழுதி என்னைக் கொஞ்ச நேரம் வெறுப்பேற்றிய பிறகு சரியாய் எழுதியவன், பிறகு உப்பு என்னும் வார்த்தையை தவறின்றி எழுதிவிட்டான்.

அடுத்த வார்த்தை ”தப்பு”.

டேனியிடம் திரும்பி, “நாலாவதா எழுத வேண்டிய வார்த்தை ’தப்பு”. எங்க எழுது பார்க்கலாம்... தப்பு.!”.

சொன்னதும் டேனி கர்ம சிரத்தையாய் குனிந்து தனது ஹோம்வொர்க் நோட்டில் எழுதினான்.

“ட... ப்... பு..!”

எழுதிவிட்டு நிமிர்ந்து பார்த்தவன், “கரெக்ட்டானு பாரும்மா.!” என்று நோட்டை என்னிடம் நீட்டினான்.

பார்த்ததும் லேசான கோபத்துடன், அவனுக்குப் புரியட்டும் என்பதற்காக சற்று அழுத்தமாய்ச் சொன்னேன்.

“டேனி... நீ எழுதியிருக்கிறது தப்புடா.!”.

நான் சொன்னதும் தனது ஹோம்வொர்க் நோட்டைத் திருப்பி ஒருமுறை பார்த்த டேனி, எந்தச் சலனமும் இல்லாமல் என்னைப் பார்த்துச் சொன்னான்.

“ஆமா... அதைத்தான நீ எழுதச் சொன்ன.!”.
.
.
.



Tuesday, April 22, 2014

தில்லுதுரயும் டாஸ்மாக் லீவும்

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மூன்றுநாள் லீவ் என்றதும் தில்லுதுர அலர்ட் ஆகிவிட்டார்.

மூன்று நாளும் வீட்டில் சரக்கை வாங்கி வைத்துக் குடிக்க மனைவி விட மாட்டாள் என்பதால், வரும் போதே நன்றாக சுதி ஏத்திக் கொண்டுதான் வந்தார்.

வீட்டுக்கு வந்து மனைவியின் திட்டு எல்லாம் வாங்கி முடித்து விட்டு, சாப்பிட்டு படுக்கும் போதுதான் மனைவி சொன்னாள்...

“ஏங்க... புதுசா வந்ததால இங்க நமக்கு ஓட்டு இல்ல. என் ஓட்டு இன்னும் அம்மா வீட்டு அட்ரஸ்ல தான இருக்கு. நான் வேணும்னா நாளைக்கு காலைல போய்ட்டு எலெக்சன் முடிஞ்சு வெள்ளிக் கிழமை வரட்டுமா.!”.

கேட்டதுதான் தாமதம்.

மூன்று நாட்கள்...மனைவியும் இல்லாமல் டாஸ்மாக்கும் இல்லாமல்.

தில்லுதுர கண்கள் கலங்கி விட்டது.

குரல் போதையில் உளறலோடு சொன்னார்.

“மூணு நாள்... ஐயோ... நீ இல்லாம நான் எப்படி இருக்கப் போறேன்னு தெரியலையே தங்கம்...!”

தில்லுதுர புலம்ப ஆரம்பித்ததும் மனைவி சிரித்தபடி கேட்டாள்.

“இது யாரு பேசறது... நீங்க பேசறீங்களா இல்ல உள்ள போன சரக்கு பேசுதா.?”.

மனைவி கேட்டதும் அதே உளறலோடு பதில் சொன்னார்.

“ஏண்டி... நாந்தான் பேசறேன். ஆனா நான் பேசறது உங்கூட இல்ல... சரக்குகூட.!” என்றார்.
.
.
.



Wednesday, April 16, 2014

டேனியின் அழுகை

டேனி அன்று பள்ளியிலிருந்து வந்ததிலிருந்தே சோகமாகவே இருந்தான்.

சாயங்காலம் சாப்பிடுவதற்கான நொறுக்குத் தீனிகளைக் கொடுத்து விட்டு, மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.

”ஏன் டேனி... சோகமா இருக்க.?”

கேட்டதும் டேனி கவலையுடன் திரும்பி என்னைப் பார்த்தான்.

“நான் ரொம்பக் கருப்பா இருக்கனாம்மா.?”

நான் அவனைத் தேற்றும் விதமாய்ச் சொன்னேன்.

“இல்லியேடா... நீ நல்ல செகப்பு தான.!”

சொன்னதும் அவன் தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“என் கண்ணு ரெண்டும் முட்டை முட்டையா பெருசா இருக்காம்மா.?”

இதென்னடா வம்பாப் போச்சு - என்று எண்ணியவாறே அவனுக்கு ஆறுதலாய் பதில் சொன்னேன்.

“இல்லியேடா... உன் கண்ணு ரெண்டும் ரொம்ப அழகா, பட்டு மாதிரி இருக்க வேண்டிய சைஸ்லதான இருக்கு.!”

டேனி இன்னும் திருப்தியாகாமல் தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“நான்... குண்டா தொப்பையா சொட்டைத் தலையோட ஏதாவது இருக்கேன்னாம்மா.?”

என்னடா... புள்ள இன்னிக்கு தன் அழகு மேல இவ்வளவு வருத்தமா இருக்கானே என்று யோசித்த படியே சொன்னேன்.

“சேச்சே... யாருடா சொன்னா அப்படியெல்லாம். நீ சும்மா தங்கமாட்டம் அம்புட்டு அழகா இருக்க. உன்னை யாரு அப்பிடியெல்லாம் சொன்னா.?”

கேட்டதும் டேனி வருத்தத்துடன் சொன்னான்.

“அப்படியெல்லாம் யாரும் சொல்லலம்மா. ஆனா, எதிர் வீட்டு ஆன்ட்டி எப்பப் பாத்தாலும் என்னை ”டேனி... அவன் அப்பா மாதிரியே இருக்கான்”னு சொல்றாங்களே.!”.
.
.
.




Thursday, March 13, 2014

தில்லுதுரக்கு பொறந்த நாளு

இன்னும் ரெண்டு நாளில் தில்லுதுரக்கு பொறந்த நாளு.

அவர் மனைவிக்கோ அவருக்கு ஒரு சர்ப்பரைஸ் பரிசு கொடுக்கலாம்னு ஆசை.

புதுசா ஒரு சட்டை எடுக்கலாம்னு ரெடிமேட் கடைக்குள்ள நொழஞ்சவங்களுக்கு... அங்க போனதும் ஐடியா மாறிப்போச்சு.

தில்லுதுர கிட்ட ரவுண்ட் நெக் டீ-ஷர்ட்டே இல்லாததால, அதயே பொறந்த நாள் கிஃப்ட்டா வாங்கிக் கொடுக்கற ஆசை வந்துடுச்சு.

கடைக்குள்ள நேராப் போயி டீ-ஷர்ட்ட கேட்டவங்க கிட்ட, சைஸ் என்னன்னு சேல்ஸ்மேன் கேட்டதும் தான் தெரிஞ்சது அவருக்கு தில்லுதுரயோட டீ-ஷர்ட் சைஸ் தெரியாதுன்னு.

அவர்கிட்டயே கேக்கலாம்னா... கிஃப்ட்ட வேற சஸ்பென்ஸா கொடுக்கணுமாச்சு.

வேற வழியில்லாம, தில்லுதுர மனைவி நேரா சேல்ஸ் மேன் கிட்டயே கேட்டாங்க.

“சார்... டீ-ஷர்ட் சைஸ்னு நீங்க எதச் சொல்லுவீங்க.?”

சேல்ஸ்மேன் சிரிச்சுகிட்டே சொன்னாரு.

“அம்மா... ஆளாளுக்கு ஒரு சைஸ் இருக்கும். குண்டு, ஒல்லி, சின்னப்பையன், பெரிய பையன்னு எல்லாரும் அவங்க செஸ்ட் சைஸ் சொல்லித்தான் டீ-ஷர்ட் வாங்குவாங்க.! நீங்க அவர் சைஸ் என்னனு சொன்னாத்தான் நாங்க சரியான அளவுல கொடுக்க வசதியா இருக்கும்.!”.

சொல்லிவிட்டு அவர் அடுத்த கஸ்டமரைக் கவனிக்க,  தில்லுதுர மனைவி அவரிடம் திரும்பக் கேட்டார்.

“ஏன் சார்... அவரோட செஸ்ட் சைஸ் தெரியாது. ஆனா, அவரோட நெக் சைஸ் தெரியுமுங்க. அதவச்சு ஏதாவது செய்ய முடியுமானு சொல்லுங்க.!”

அடுத்த கஸ்டமரை கவனித்துக் கொண்டிருந்த சேல்ஸ் மேன், இவர் சொன்னதை முழுதும் கவனிக்காமல், “சைஸ சொல்லுங்க பாப்பம்” என்றதும்...

தில்லுதுர மனைவி,  தனது வலது கை கட்டை விரலோடு இடது கை கட்டை விரலோடு சேர்த்து, தனது வலது கை நடுவிரலோடு இடது கை நடுவிரலோடு சேர்த்து ஒரு வட்டத்தை செய்து காட்டியபடி சொன்னார்.

“கரெக்ட்டா இந்த சைஸ்ல ஃபிட் ஆகும் சார்.!”.
.
.
.

Wednesday, January 22, 2014

டேனியின் ஹேர்க்கட்


ஐந்து வயது டேனியை இன்று காலை ஸ்கூலுக்கு ஆயத்தப்படுத்தக் குளிப்பாட்டும் போது நடந்தது இது.

தலைக்கு ஷாம்பூவை அவசர அவசரமாய்ப் போடுகையில் கை விரல்கள் அவன் தலை முடியில் சிக்கிக் கொண்டு வர மறுக்க, கைகளை இழுக்கையில் அவனுக்கு வலியாகி அவன் கத்த... கோபத்துடன் சொன்னேன்.

"மொதல்ல இந்த ஞாயித்துக் கெழம உங்க அப்பாவக் கூட்டிட்டுப் போயி உனக்கு முடி வெட்டச் சொல்லணும்.!".

சொன்னதும் பார்பர் ஷாப்புக்கு போவதே பிடிக்காத டேனி, கோபத்துடன் சொன்னான்.

"போம்மா... சும்மா சும்மா நீ முடி வெட்டச் சொல்லிட்டே இருப்ப.!".

அவன் கோபத்துடன் அழுவதைப் பார்த்ததும், லேசாய் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அவனிடம் மேதுவாய்ச் சொன்னேன்.

"பாரு... உனக்குத்தான் சீக்கிரம் சீக்கிரம் முடி வளந்துடுதே.! அதனாலதான முடி வெட்டணும்னு சொல்லறேன்.!".

சொன்னதும் இன்னும் அதிக கோபத்துடன் டேனி சொன்னான்.

"எல்லாம் உன்னாலதாம்மா.. நீ செய்யற வேலைனாலதான முடி வேகவேகமா வளருது.!".

இதென்ன புதுசா சொல்றானே என்ற குழப்பத்துடன் கேட்டேன்.

"உன் தலைல முடி வளர்றதுக்கு நானென்னடா பண்ணா முடியும்.?".

சொன்னதும் இன்னும் கோபமாய் என்னைக் குற்றஞ்சாட்டும் முகத்துடன் டேனி சொன்னான்.

"ஆமா... நீதான் சொல்லச் சொல்லக் கேக்காம குளிக்கும்போது தலைக்கு அதிகமா தண்ணிய ஊத்தறியே. தண்ணிய அதிகமா ஊத்தினா முடி வேகமா வளரத்தான செய்யும்.!".
.
.
.

Monday, January 6, 2014

அசிங்கப்பட்டார் தில்லுதுர



லுவலகத்திலிருந்து தில்லுதுர திரும்பும் போதே, தன் மனைவி பதட்டத்துடன் வாசலில் காத்திருப்பதைப் பார்த்தார்.

தில்லுதுரயை நேரில் பார்த்ததும் தான், அவர் நிம்மதியுடன் நீண்ட ஒரு பெருமூச்சை விட்டபடி சொன்னார்.

"அப்பாடி... உங்களுக்கு ஒண்ணுமில்லியே.! நான்கூட பயந்தே போய்ட்டேன்.!"

மனைவி சொன்னதைக் கேட்டதும் ஆச்சர்யத்துடன் தில்லுதுர கேட்டார்.

"ஏன்... பயப்படற அளவுக்கு என்ன ஆச்சு.?".

தில்லுதுர கேட்டதும் அவர் மனைவி அதே பதைபதைப்பு மாறாமல் சொன்னார்.

"இல்ல... இப்ப கொஞ்சம் முன்ன இந்த வழிய போன ஒருத்தன் சொன்னான், 'தெரு முனைல கருப்பா, குண்டா, எரும மாடு மாதிரி ஒரு ஆளு அடிபட்டுக் கெடக்கான்னு..'  அதான் நீங்களோனு பயந்திட்டேன்.!" என்றாள்.
.
.
.

Saturday, November 30, 2013

சோமாலிய கடற்கொள்ளையன் சொறிமுத்து


ஸ்ரீராம் கப்பல் சம்பந்தமான வியாபாரம் செய்பவன்.

அன்று அவன் சோமாலியவிற்கு ஒரு விற்பனை குறித்துப் பேசுவதற்காக வந்திருந்தான்.

அந்தக் கம்பெனி கடற்கரை ஓரமாக இருந்ததால், தனது தங்கும் அறையையும் அங்கேயே பக்கத்தில் இருந்த ஹோட்டலில் போட்டிருந்தான் ஸ்ரீராம்.

அன்றிரவு போரடிக்கிறது என்று ஹோட்டல் பாருக்குப் போனபோதுதான், பாரில் அந்தக் கடற்கொள்ளையனை ஸ்ரீராம் சந்தித்தான்.

ஸ்ரீராம் ஒரு கடற்கொள்ளையனை சந்திப்பது அதுதான் முதல்முறை.

கட்டைக் காலும், கைகளில் ஹூக்கும், ஒரு கண்ணை மறைத்த பேட்சும் பார்க்கவே வித்தியாசமாயிருந்த, அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அவனிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் ஸ்ரீராம்.

கடற்கொள்ளையன் நல்ல போதையில் இருந்ததால், குஷியாய் தன் பெயர் சொறிமுத்து என்றும்... தான் ஒரு மிகப் பெரிய கடற்கொள்ளையன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

ஸ்ரீராம் கேட்டான்,"அண்ணே... உங்க ஒரு கால் ஏன் இப்படிக் கட்டைல செஞ்சதா இருக்கு..?".

கேட்க ஆள் கிடைத்ததும் சொறிமுத்து சந்தோஷமாய் தனது சாகஸங்களை அவிழ்த்துவிடத் துவங்கினான்.

"சுறா மிகுந்த கடல்களில் நீச்சல் அடிப்பது கடற்கொள்ளையர்களின் வீரத்துக்கு அடையாளம். அப்படி ஒரு சமயத்தில் ஒரு சுறா என் காலைக் கவ்விக் கொண்டது. நான் அந்தச் சுறாவை அந்த இடத்திலேயே கொன்று தள்ளிவிட்டுத்தான் கப்பல் ஏறினேன். ஆனால், அதற்குள் அந்தச் சுறா என் காலை சிதைத்திருந்தது. அப்படித்தான் என் கால் போனது..!".

தன் கால் போனதைக்கூட அவ்வளவு சந்தோசமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தான் சொறிமுத்து.

ஸ்ரீராம் அடுத்த சந்தேகத்தைக் கேட்டான்.

"அதுசரி.. உங்க கைக்கு என்ன ஆச்சு.? அதுல ஏன் இப்படி ஹூக் மாட்டிருக்கீங்க?".

சொறிமுத்து தனது அடுத்த சாகஸத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.

"கடற்கொள்ளையர் வாழ்க்கைங்கறது ஆஃபீஸ் போய்ட்டு வர்றது மாதிரி அவ்வளவு ஈசியான ஜாப் கிடையாது. அவங்க வாழ்க்கைல போர் தவிர்க்கவே முடியாதது. அதுபோல ஒருமுறை சண்டையின் போது வாள் பிடித்துச் சண்டை போட்ட என் வலது கையை மணிக்கட்டோடு வெட்டிவிட்டான் எதிரி. அதற்கப்புறம் அவன் தலையைக் கழற்றி விட்டுத்தான் ஓய்ந்தேன். அதன் பிறகு, என் தலைவன் என் வீரத்தைப் பாராட்டி இந்த ஹூக்கை என் கைகளில் மாட்டிவிட்டான்...!" சொல்லிவிட்டு இடி இடியெனச் சிரித்தான் சொறிமுத்து.

ஸ்ரீராம் அவனது தைரியத்தை வியந்தபடியே அடுத்த கேள்வியைக் கேட்டான்.

"உங்க வலது கண்ணுல பேட்ச் போட்டு இருக்கீங்களே... அதுக்கு என்ன ஆச்சு..?".

ஸ்ரீராம் கேட்டதும் சொறிமுத்து சொன்னான்.

"ஸீகல்னு கடல்ல காக்கா மாதிரி ஒரு பறவை இருக்கு. அது ஒருசமயம் என் கண்ணுல ஆய் போயிடுச்சு..!".

ஸ்ரீராம் அரண்டு போனான்.

"என்ன சொல்றீங்க... ஒரு பறவையோட ஆய் கண்ணைப் போக்கற அளவுக்கு பாய்ஷனா என்ன..?".

ஸ்ரீராம் கேட்டதும், அதற்கு சொறிமுத்து மிகச்சோகமாய் பதில் சொன்னான்.

"அது அவ்வளவு பாய்ஷன் இல்லை. அது என்ன ஆச்சுனா, அந்த சம்பவம் நான் கையில ஹுக் மாட்டின அடுத்தநாளே நடந்தது..!".
.
.
.

Thursday, October 3, 2013

டேனி எனும் தன்வந்திரி நாராயணன்


டேனி படிப்பது கான்வெண்ட் என்பதால் வகுப்பில் தமிழ் பாடம் அவனுக்கு ரெண்டு வருடம் கழித்துத்தான் வந்தது.

உயிரெழுத்து, மெய்யெழுத்து எல்லாம் சொல்லிக் கொடுத்த பிறகு, அன்று அவனது தமிழாசிரியை அவன் வகுப்பில் உள்ள எல்லோரையும் அவரவர் பெயரை தமிழில் எழுத பெற்றோரிடம் கற்றுவரச் சொல்லியிருந்தார் போல.

டேனியை நாங்கள் கூப்பிடும் பெயர்தான் அதுவே தவிர, ஸ்கூல் ரெக்கார்ட் படி அவன் பெயர் தன்வந்திரி நாராயணன் என்பதால் அதை தமிழில் எழுதப் பழக்கிக் கொண்டிருந்தார் அவன் அப்பா.

கொஞ்சம் பெரிய பெயர் என்பதால் டேனி தனது முழுப் பெயரையும் எழுதக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான்

மறுநாள் காலை வரை டேனி தனது முழுப் பெயரையும் அவ்வப்போது சரியாயும் தவறாயும் மாறி மாறி எழுதிக் கொண்டிருந்தான்.

அதேபோல் அன்று வகுப்பிலும் நிறையப்பேர் தப்பும் தவறுமாய் எழுதியதால், அவனது தமிழாசிரியை எல்லோரையும் அவரவர் பெயரை பத்து முறை எழுத வைத்து விட்டார்கள் போல.

மாலை வீடு திரும்பிய டேனி படு கோபத்துடன் வந்தான்.

என்ன விஷயம் என்று கேட்டதும் தமிழ் டீச்சர் எல்லோரையும் தங்களது பெயரை பத்து முறை எழுத வைத்ததை சொல்லி, தன்வந்திரிநாராயணன் என பத்து முறை எழுதிய பேப்பரை கோபத்துடன் காட்டினான்.

நான் அவனை தமிழில் இன்னும் கவனமாய் எழுத வைக்க ஊக்கப்படுத்தும் விதமாய்  அவனிடம் மெல்ல ஆறுதலாய்ச் சொன்னேன்.

“சரியா எழுதாட்டி பனிஷ்மெண்ட் கொடுக்கத்தான செய்வாங்க. அதுக்காக டீச்சர் மேல கோபப்படலாமா.?”

கேட்டதும் கோபத்துடன் திரும்பியவன் கடுப்புடன் சொன்னான்.

“எனக்கொன்னும் டீச்சர் மேல கோபம் இல்ல. உங்க மேலதான். எம்பக்கத்துல உக்காந்திருந்த தீபா எவ்வளவு சீக்கிரம் அவ பேரை எழுதிட்டா தெரியுமா.?”.
.
.
.


Wednesday, September 18, 2013

நாளைக்கு மழ வருமுங் ஸாமீயோவ்…


டைரக்டர் முனிரத்தினத்தின் புதிய பட ஷூட்டிங் அந்த அடர்ந்த கானகத்தின் உள்ளே நடந்து கொண்டிருந்தது.

படத்தின் ஒரு காட்சிக்காக குடிசைகள் போட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த ஒரு ஆதிவாசி,"குடிசை போடாதீங்க ஸாமீ... நாளைக்குப் புயல் வருமுங்க..!" என்று சொல்லிவிட்டுப் போனார்.

எதற்கும் பார்ப்போமே என்று முனிரத்னம் வேலையை நிறுத்திவிட்டுப் பார்க்க…

சொன்னது போலவே, மறுநாள்  கடும்புயல் அடித்து... அது போட்டிருந்த ஒன்றிரண்டு குடிசையையும் அடித்து துவம்சம் செய்துவிட்டுப் போனது.

இன்னும் சில நாட்கள் போயிருக்கும்.

ஆற்றங்கரையோரம் கோயில் ஒன்று செட் போட்டுக் கொண்டிருக்கும்போது அந்தப்பக்கமாய் வந்த அதே ஆதிவாசி,"நாளைக்கு பெருமழை இருக்கு ஸாமீயோவ்...! ஆத்துல வெள்ளம் வந்தாலும் வருமுங்க.." என்று சொல்லிவிட்டுப் போனார்.

சொன்னதுபோல், மறுநாள் மழை கொளுத்த ஆரம்பித்தது.

 மூன்று நாளும் விடாது பெய்து, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
'ஆதிவாசிகள் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள் என்பது தெரியும். அதற்காக இப்படியா..?' டைரக்டர் முனிரத்தினம் மிரண்டு விட்டார்.

அவர் தன்னுடைய உதவியாளர்களை கூப்பிட்டு "இந்த மனுசனை புடிச்சு வச்சிக்கங்கப்பா. நம்ம ஷூட்டிங் முடியற வரைக்கும் நமக்கு யூஸ்ஃபுல்லா இருப்பான்...!".

டைரக்டர் சொன்னபடி, அந்த ஆதிவாசியும் மிகச்சரியாக காலநிலைகளைக் கணித்துச் சொல்ல… இவர்கள் அந்த ஆதிவாசி சொன்னதற்கேற்ப ப்ளான் செய்து ஷூட்டிங்கை விறுவிறுவென நடந்து கொண்டிருந்தார்கள்.

அன்று மேக்சிமம் ஸ்டாரின் கால்ஷீட். காட்சியோ உச்சபட்ச வெயில் வேண்டிய காட்சி. நாளைய சீதோஷ்ணம் எப்படியிருக்கும் எனத் தெரிந்துகொள்ள, டைரக்டர் அந்த ஆதிவாசியை அழைத்துக் கேட்டார்.

"நாளைக்கு கிளைமேட் எப்படியிருக்கும்..?".

டைரக்டர் கேட்டதும் அந்த ஆதிவாசி தன் தோள்களைக் குலுக்கியவாறே சொன்னார்.

"தெரியாதுங் ஸாமீ..!".

ஆதிவாசியின் பதிலால் ஆச்சர்யமாகிப்போன டைரக்டர் முனிரத்தினம் கேட்டார்.

"தெரியாதா... ஏன் தெரியாது..?".

கேட்ட டைரக்டரின் முகத்தைப் பார்த்து அப்பிராணியாய் அந்த ஆதிவாசி சொன்னார்.

"நேத்து ரேடியோப் பொட்டி கீழவிழுந்து ஒடஞ்சுபோச்சுங் ஸாமீயோவ்..!".
.
.
.


Saturday, September 7, 2013

அமாவாசை பூஜை


பொதுவாய் அமாவாசை தினங்களில் சாமி கும்பிடுவதுடன் இறந்தவர்களுக்கும் படைப்பது எங்க வீட்டுப் பழக்கம்.

அன்றும் அப்படித்தான்.

சமையலை முடித்து பூஜைக்கான ஏற்பாடு செய்வதற்குள் அவரைப் பூக்கடைக்குப் போய் தேவையான பூ மற்றும் மாலைகளை வாங்கி வரச் சொல்லியிருந்தேன்.

வந்தவர் மாலைகளை சாமி படங்களுக்குப் போட ஆரம்பிக்க, டேனி - தனக்கும் மாலை வேண்டும்... நானும் படங்களுக்கு போடுவேன் -  என்று அவரிடம் வம்பு செய்ய ஆரம்பித்தான்.

தொந்தரவு தாங்காமல் டேனியிடமும் மலர்ச் சரங்களைக் கொடுத்து படங்களுக்கு வைக்கச் சொன்னேன்.

அளவாய் நான் வெட்டிக் கொடுக்க முதலில் அவன் கைக்கு எட்டிய சாமி படங்களில் அதை மாலை போல் மாட்டிவிட்டு வந்தான்.

அடுத்துக் கொடுத்த சரத்தை அவருடைய அப்பா படத்துக்கு மாலை போட்டுவிட்டு வந்தவன், அதற்கடுத்ததை அவர் அம்மா படத்துக்கு போடப் போக நான் தடுத்தேன்.

“டேனி… அப்பத்தா படத்துக்கு மாலை போடக்கூடாது.!”.

நான் சொன்னதும் குழப்பத்துடன் திரும்பியவன் கேட்டான்.

“ஏம்மா… அப்பத்தா படத்துக்கு போடக்கூடாது.? தாத்தா படத்துக்கு போட்டோமே.!”.

டேனி கேட்டதும் அவனுக்கு புரியும்படியாய் சொல்ல ஆரம்பித்தேன்.

“ஏன்னா… அப்பத்தா உயிரோட இருக்காங்கதான… அதனால அவங்க படத்துக்கு மாலை போடக்கூடாது. ஆனா… தாத்தா செத்துப் போயிட்டாங்கல்ல… அதனால அவங்க படத்துக்கு மாலை போடலாம்.!”.

சொன்னதும் ஓரளவு புரிந்த பார்வையோடு திரும்பிய டேனி, மறுபடி குழப்பத்தோடு தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“ஏம்மா… இப்ப சாமி படத்துக்கு மாலை போட்டமே… அப்ப சாமியும் செத்துப் போச்சாம்மா.?”.
 .
.
.


Wednesday, September 4, 2013

இறந்த பிறகு என்னவாய் ஆகிறோம்


ஜப்பானிய மன்னன் ஒருவனுக்கு திடீரென ஒரு தீவிர சந்தேகம் கிளம்பியது.

இந்த துறவிகள் ஏன் துறவறம் மேற்கொள்கிறார்கள்.? நாம் இறந்தால் என்ன ஆவோம் என சாஸ்திரங்கள் சொல்கிறது. ஆனால் இந்தத் துறவிகள் இறந்த பிறகு ஏதும் அதிசயங்கள் நடக்குமோ.? அதனால்தான் துறவறம் பூணுகிறார்களோ.?

தனது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள அவன் ஒரு சென் துறவி குடோ-வை அணுகினான்.

“தன்னை முழுவதும் உணரும் ஞானஒளி பெற்ற ஒரு ஞானகுரு தான் இறந்த பிறகு என்ன ஆகிறான்.?” என்று கேட்டான்.

துறவியோ எந்த உணர்ச்சியும் இன்றி மன்னனைப் பார்த்துக் கேட்டார்.

“அதை ஏன் மன்னா என்னிடம் கேட்கிறாய்.? அது எப்படி எனக்கு தெரியும்.?”.

மன்னன் இன்னும் அதிக குழப்பத்துடன் குருவிடம் கேட்டான்.

“உங்களுக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும். நீங்கள்தானே ஞானகுரு.?”.

மன்னன் கேட்டதும் குடோ அவனைப் பார்த்து புன்னகைத்தபடி பதில் சொன்னார்.

“ஆமாம்… நான் ஞானகுரு தான். ஆனால் நான் இன்னும் சாகவில்லையே.!”.
.
.
.


Monday, September 2, 2013

டேனி என்றொரு தமிழறிஞன்


டேனியின் வகுப்பில் தமிழ் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருந்த காலம்.

அன்று டேனி தன் வகுப்புத் தோழர்கள் பெயரை தமிழில் எழுதி விளையாடிக் கொண்டிருந்தான்.

விடுமுறை தினம் என்பதால் நான் சமையலறையில் மும்முரமாய் இருக்க இவன் முன்னறையில் இருந்தான்.

ஒரு பத்து நிமிடம் போயிருக்கும்.

“அம்மா… அம்மா…” என்று கூப்பிட்ட படியே வந்தவன்,”அம்மா… றிவுக்கரசு-க்கு ஸ்பெல்லிங் என்ன.? பெரிய றி-யா சின்ன ரி-யா… எப்படி எழுதணும்.?”.

எனக்கு அவன் வகுப்பில் அறிவுக்கரசு என்றொருவன் படிப்பது தெரியும் என்றாலும், முதலில் அவன் கேட்டதை சொல்லிவிடுவோம் என்று யோசித்தபடியே, “பெரிய றி-தான் போடணும். அப்பறம் வ போட்டு வு. அடுத்து க். அப்பறம் க. அடுத்து ஒரு சின்ன ர. அப்பறம் ச-போட்டு சு.!”.

கவனமாய்க் கேட்டுக் கொண்டே இருந்தவன், “ஓக்கேம்மா.!” என்றபடி நகர நான் குறுக்கிட்டு அவனுக்கு புரிவதற்காக மெதுவாய்ச் சொன்னேன்.

“டேனி… ஆனா உன் ஃப்ரண்ட் பேரு றிவுக்கரசு இல்ல… அது அறிவுக்கரசு.. சோ… அறிவுக்கரசுனு எழுத நீ கேட்ட றிவுக்கரசு ஸ்பெல்லிங்குக்கு முன்ன அ போடணும்.!”

சொன்னதும் டேனி முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் சொன்னான்.

“அவன் பேர்லயே எனக்கு அ மட்டுந்தாம்மா தெரியும். அத முன்னாடியே நான் பேப்பர்ல எழுதிட்டேன்.!”.

.
.
.

Saturday, August 24, 2013

நூறு தர்பூசணிப் பழங்கள்


டேனிக்கு ஒரு ஐந்து வயதிருக்கும்.

அவனும் நானும் அவன் அப்பாவுடன் ஒரு ஞாயிறு மதியத்தில் பர்ச்சேஸ் முடித்து வரும்போது நடந்தது இது.

காலையிலேயே கிளம்பியது.

மளிகை, கொஞ்சம் துணிகள், அவனுக்கு பொம்மை என எல்லாம் வாங்கி முடிக்கையில் கிட்டத்தட்ட மதியமாகிவிட்டது.

திரும்பும் வழியில் வெயில் தாங்காமல் ஒரு சாலையோர தர்பூசணிக் கடையில் நிறுத்தினார் அவர்.

ரெகுலராய் இளநீர்க் கடையும் வைத்திருப்பவர் என்பதால் அந்தக் கடைக்காரர் டேனி அப்பாவுக்கும் பழக்கம் போல.

போனதுமே ”வாங்க சார்… சவுக்கியமா.?” என்றபடி, சுவையான பழமாய்த் தேர்ந்தெடுத்து மூன்று ப்ளேட்டுகளில் சின்னச் சின்னத் துண்டுகளாய் வெட்டி கொடுத்துப் போனார்.

நாங்கள் சாப்பிட, டேனிக்கு அந்த தர்பூசணீயின் சிவப்புக் கலரும், முக்கோணம் முக்கோணமான அதன் துண்டுகளும் அதன் சுவையும் பிடித்துப் போக வெயிலின் கொடுமையும் சேர ஆர்வமுடன் சாப்பிட ஆரம்பித்தான்.

ஒரு பிளேட்டையும் அவனே சாப்பிட்டதைப் பார்த்த அந்த கடைக்காரர் அவனுக்கு இன்னும் கொஞ்சம் பழத் துண்டுகளை வைத்தபடியே டேனியிடம் விளையாட்டாய்க் கேட்டார்.

“குட்டிப் பையனுக்கு தர்பூசணிப்பழம் புடிச்சிருக்கா.?”.

டேனி உற்சாகமாய்த் தலையாட்டினான்.

“ரொம்ப புடிச்சிருக்கு அங்கிள். செம டேஸ்ட்டு..!”.

கடைக்காரர் சிரித்தபடியே அடுத்து அவனிடம் கேட்டார்.

“இப்ப நூறு தர்பூசணிப் பழம் உனக்குத் தர்றேன். உன் அப்பாவையும் அம்மாவையும் எங்கிட்ட விட்டுட்டுப் போயிடறயா.?”.

நாங்கள் இருவரும் ஆர்வத்துடன் டேனியின் பதிலுக்காக அவன் முகத்தைப் பார்த்தபடி இருக்க, அவனோ ஒரு நிமிசம் பலமாய் யோசித்து விட்டு, “முடியாது அங்கிள்… எனக்கு என் அப்பா அம்மாதான் வேணும்.!” என்றான்.

கடைக்காரர் சிரித்தபடியே அவன் கன்னத்தை தட்டிவிட்டு, என் கணவரிடம், “பாசக்கார பயதான் சார்.” என்றபடி பணத்தை வாங்கிக் கொண்டார்.

திரும்பும் வழியில் அவன் அப்பா டேனியிடம் கேட்டார்.

“ஏண்டா… அந்த அங்கிள் ’நூறு பழம் தர்றேன்… அப்பா அம்மாவக் கொடுத்திடறியா..”னு கேட்டப்ப உடனே பதில் சொல்லாம என்ன யோசிச்ச.?”.

அவர் கேட்டதும் டேனி சிரித்தபடியே சொன்னான்.


“என்னால எப்படி நூறு தர்பூசணிப் பழத்தை கொண்டுபோக முடியும்னுதான் யோசிச்சுப் பார்த்தேன்.!”.
.
.

Thursday, August 22, 2013

இருபதாயிரம் ரூபாய் பொம்மை


டேனியின் ஸ்கூலில் ட்ரேடிங் பற்றி ஏதோ சொல்லிக் கொடுத்த தினம் அன்று.

அவன் சாயங்காலம் வீட்டுக்கு வந்ததுமே அவனுடைய அப்பாவிடம் தனக்குப் பிடிக்காத தன்னுடைய டைனோசர் பொம்மையை விற்க முயன்று கொண்டிருந்தான்.

“எவ்வளவு ரூபாய்டா இந்த பொம்மை.?”.

அப்பா கேட்டதும் டேனி கண்களை விரித்துக் கொண்டு சொன்னான்.

“ட்வெண்ட்டி தவ்சண்ட் ரூபீஸ்.!”.

அப்பா சிரித்தபடியே சொன்னார்.

“இருபதாயிரம் ரூபாய் ரொம்ப அதிகம்டா. இந்த பொம்மையோட விலையே அறுநூறு ரூபாய்தான்.!”.

சொன்னதும் டேனி சிரித்தபடியே சொன்னான்.

“அது இந்த பொம்மை புதுசா வாங்கினப்ப. இப்பத்தான் நம்ம வீட்டுல எல்லோர்கிட்டயும் பழகிடுச்சில்ல.!”.

”அப்பக் கூட இது ரொம்ப அதிகம்டா.!”.

சொல்லிவிட்டு அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட, டேனி வெளியே விளையாட ஓடிவிட்டான்.

ரெண்டொரு நாள் போயிருக்கும்.

திடீரென ஞாபகம் வந்து அவர் டேனியிடம் கேட்டார்.

“டேய்… அந்த டைனோசர் பொம்மை என்னாச்சு.?”.

அவர் கேட்டதும் டேனி வெற்றிக் களிப்புடன் சொன்னான்.

“அதை அன்னிக்கே பக்கத்து வீட்டு அர்னேஷ் கிட்ட இருபதாயிரத்துக்கு வித்துட்டேனே.!”.

கேட்டதும் ஆச்சர்யத்துடன் அவர் டேனியிடம் கேட்டார்.

“எப்படினு சொல்லு… புரியலயே.!”.

கேட்டதும் டேனி புன்னகையுடன் சொன்னான்.


“என் இருபதாயிரம் ரூபாய் பெரிய டைனோசர் பொம்மைய கொடுத்திட்டு, அவன்கிட்ட இருந்த பத்தாயிரம் ரூபாய் சின்ன கார் பொம்மை ரெண்டை வாங்கிட்டேன். சரிதான.?” என்றான்.
.
.
.