Showing posts with label புயல். Show all posts
Showing posts with label புயல். Show all posts

Wednesday, September 18, 2013

நாளைக்கு மழ வருமுங் ஸாமீயோவ்…


டைரக்டர் முனிரத்தினத்தின் புதிய பட ஷூட்டிங் அந்த அடர்ந்த கானகத்தின் உள்ளே நடந்து கொண்டிருந்தது.

படத்தின் ஒரு காட்சிக்காக குடிசைகள் போட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த ஒரு ஆதிவாசி,"குடிசை போடாதீங்க ஸாமீ... நாளைக்குப் புயல் வருமுங்க..!" என்று சொல்லிவிட்டுப் போனார்.

எதற்கும் பார்ப்போமே என்று முனிரத்னம் வேலையை நிறுத்திவிட்டுப் பார்க்க…

சொன்னது போலவே, மறுநாள்  கடும்புயல் அடித்து... அது போட்டிருந்த ஒன்றிரண்டு குடிசையையும் அடித்து துவம்சம் செய்துவிட்டுப் போனது.

இன்னும் சில நாட்கள் போயிருக்கும்.

ஆற்றங்கரையோரம் கோயில் ஒன்று செட் போட்டுக் கொண்டிருக்கும்போது அந்தப்பக்கமாய் வந்த அதே ஆதிவாசி,"நாளைக்கு பெருமழை இருக்கு ஸாமீயோவ்...! ஆத்துல வெள்ளம் வந்தாலும் வருமுங்க.." என்று சொல்லிவிட்டுப் போனார்.

சொன்னதுபோல், மறுநாள் மழை கொளுத்த ஆரம்பித்தது.

 மூன்று நாளும் விடாது பெய்து, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
'ஆதிவாசிகள் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள் என்பது தெரியும். அதற்காக இப்படியா..?' டைரக்டர் முனிரத்தினம் மிரண்டு விட்டார்.

அவர் தன்னுடைய உதவியாளர்களை கூப்பிட்டு "இந்த மனுசனை புடிச்சு வச்சிக்கங்கப்பா. நம்ம ஷூட்டிங் முடியற வரைக்கும் நமக்கு யூஸ்ஃபுல்லா இருப்பான்...!".

டைரக்டர் சொன்னபடி, அந்த ஆதிவாசியும் மிகச்சரியாக காலநிலைகளைக் கணித்துச் சொல்ல… இவர்கள் அந்த ஆதிவாசி சொன்னதற்கேற்ப ப்ளான் செய்து ஷூட்டிங்கை விறுவிறுவென நடந்து கொண்டிருந்தார்கள்.

அன்று மேக்சிமம் ஸ்டாரின் கால்ஷீட். காட்சியோ உச்சபட்ச வெயில் வேண்டிய காட்சி. நாளைய சீதோஷ்ணம் எப்படியிருக்கும் எனத் தெரிந்துகொள்ள, டைரக்டர் அந்த ஆதிவாசியை அழைத்துக் கேட்டார்.

"நாளைக்கு கிளைமேட் எப்படியிருக்கும்..?".

டைரக்டர் கேட்டதும் அந்த ஆதிவாசி தன் தோள்களைக் குலுக்கியவாறே சொன்னார்.

"தெரியாதுங் ஸாமீ..!".

ஆதிவாசியின் பதிலால் ஆச்சர்யமாகிப்போன டைரக்டர் முனிரத்தினம் கேட்டார்.

"தெரியாதா... ஏன் தெரியாது..?".

கேட்ட டைரக்டரின் முகத்தைப் பார்த்து அப்பிராணியாய் அந்த ஆதிவாசி சொன்னார்.

"நேத்து ரேடியோப் பொட்டி கீழவிழுந்து ஒடஞ்சுபோச்சுங் ஸாமீயோவ்..!".
.
.
.


Tuesday, May 18, 2010

காவியாவின் கணவன்



காவியா இன்று இதற்கொரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்று முடிவு செய்தாள்.

கல்யாணம் ஆன ஒரு மாதத்திற்குள்ளாகவே இப்படி ஒரு பிரச்னை வரும் என அவள் நினைக்கவில்லை.

அதுவும் கேவலம் ஒரு ஒண்ணரை ரூபாய் முட்டையால்.

கல்யாணம் ஆன போதே மாமியார் சொல்லியிருந்தாள்.

"அவனுக்கு சாப்பாட்ல டெய்லி ஒரு முட்டை சேத்துக்கணும். அதுவும் ஆம்லெட் இல்லாட்டி அவிச்ச முட்டையாத்தான் இருக்கணும்...."

ஆனால், இவள் கணவனோ முட்டையிலேயே ஆயிரம் குறை கண்டுபிடிப்பவனாய் இருந்தான்.

முட்டையை அவித்து வைத்தால் ஆம்லெட் போட்டிருக்கலாம் என்பான்.  ஆம்லெட் போட்டிருந்தாலோ அவித்திருக்கலாமே என்பான்.

இதுவே தினசரி தொடர காவியாவின் மனதுக்குள் முட்டையால் ஒரு பெரும் புயல் வீச ஆரம்பித்தது.

ஒரு மாதம்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் இன்று பொறுமை இழந்துவிட்டாள்.

கணவன் சாப்பிட வந்ததும் காலையிலேயே முடிவு செய்தபடி ஒரு முட்டையை அவித்தும் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டும் வைத்துவிட்டு கணவன் என சொல்கிறான் என்று பார்க்கக் காத்திருந்தாள்.

அவனோ என்றுமில்லாத ஆச்சர்யமாய் வாயே திறக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

தாங்க முடியாமல் காவியாவே,"என்னங்க முட்டையை அவிச்சும் வச்சிருக்கேன், ஆம்லெட் போட்டும் வச்சிருக்கேன்.. நீங்க அதைப்பத்தி ஒண்ணுமே சொல்லலியே...!" என்று வாயைத் திறந்து கேட்டும் விட்டாள்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவன் நிமிர்ந்து கோபமாய் சொன்னான்.

"என்னத்த சொல்றது.? உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியப் போறதில்ல...!"

காவியா குழம்பிப் போனாள்,"இதுல என்னங்க தப்பு...?"

கணவன் தனது கோபம் குறையாமலே பதில் சொன்னான்.

"என்ன தப்பா...? அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!'

காவியா இப்போது மயக்கம் போடாமலிருக்க ட்ரை பண்ணிக்கொண்டிருக்கிறாள்.
.
.