Thursday, October 21, 2010

தந்திரன்

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.

அன்று மாலை சினிமாப் பார்க்க கணவர், குழந்தையோடு கோவையின் அந்தத் தியேட்டருக்குப் போயிருந்தோம்.

டிவி, ரேடியோக்களின் விடாத விளம்பரங்களும், உடன் பணிபுரிவோரின் விடாத விசாரிப்புகளும் அந்தத் திரைபடத்தைப் பார்க்காததை ஒரு கௌரவப் பிரச்சினையாகவே மாற்றியிருந்தன.

நல்ல கூட்டம்... கிராமத்து மக்கள், நகரத்து மக்கள் என மக்கள் கூட்டம் அலைமோதியது.

என் கணவர் ஏற்கனவே டிக்கெட் ரிசர்வ் செய்திருந்ததால், நாங்கள் தொந்தரவின்றி தியேட்டருக்குள் நுழைந்துவிட்டோம்.

நடுவே நுழையும் பாதையும், இரண்டு பக்கமும் சீட் நம்பர் தேடி உட்காருவதும் போல சிஸ்டம்.

எங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்ததோ, நுழைந்ததும் வலது பக்கம் வழிக்குப் பக்கத்திலேயே முதல் மூன்று சீட்டுகள்.

அதற்கப்புறம், எங்களைப்போலவே ஒரு குடும்பமும் அதையடுத்து ஒரு கிராமத்துக் குடும்பமும் அப்புறம், ஒன்றிரண்டு இளைஞர்களும் என எங்கள் வரிசை நிரம்பியிருந்தது.

அதுவும், அந்த கிராமத்துக் குடும்பம் மொத்தமும் அந்த நடிகரின் தீவிரமான ரசிகர்கள் என அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து தெரிந்தது.

அவர்கள் தங்கள் நடிகரின் பெருமையை, தங்கள் குழந்தைகளுக்கு மிகப் பெருமையாய் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

படம் ஆரம்பித்ததும் தான் அவர்கள் பேச்சுச் சப்தம் ஓய்ந்தது.

படம் போட்டு ஒரு மணி நேரம் இருக்கும்... இன்டர்வலுக்குச் சற்று முன்பாகவே அவரது ஒரு குழந்தை டாய்லெட் போக அவசரப் படுத்திக் கொண்டிருந்தது.

அவர்கள் கணவன் மனைவி இருவரும், 'கொஞ்சம் பொறுத்துக்க..' என்று சொல்லியபடி உற்சாகமாய்ப் படம் பார்த்துக் கொண்டேயிருக்க, ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தை ஓவென்று அழவே ஆரம்பித்து விட்டது.

கடைசியாய், அந்தக் கிராமத்து மனிதர் எரிச்சலுடன், குழந்தையை அந்த அரையிருட்டில் அழைத்துக் கொண்டு, வரிசையில் நடுவிலிருந்து கடுப்புடன் ஒவ்வொருவராகத் தாண்டிக் கொண்டு வந்தார்.

வந்தவர், கடைசியாய் உட்கார்ந்திருந்த என் கணவரைத் தாண்டும்போது, காலை நறுக்கென்று ஒரு மிதி மிதித்துவிட்டு... ஒரு சாரியோ மன்னிப்போ எதுவும் கேட்காமல் வேகவேகமாய் குழந்தையை அழைத்துக்கொண்டு டாய்லெட்டை நோக்கிப் போனார்.

ஏற்கனவே, செருப்பைக் கழற்றி விட்டுவிட்டு வெறும் காலில் உட்கார்ந்திருந்த என் கணவர், வலி தாங்காமல் அவரைத் ஏதோ திட்ட வாயெடுத்தார்.

நான் இடைமறித்து,"விடுங்க ஏதோ படம் பாக்கற இன்ட்ரஸ்ட்ல போறாரு..."என்றதும் அமைதியாகி விட்டார்.

ஒரு ஐந்து நிமிடத்தில் குழந்தையை அழைத்துக் கொண்டு திரும்ப வந்து அந்த அரையிருட்டில் கண்கள் பழகும்வரை நின்றவர்... மெல்ல தட்டுத் தடுமாறி வரிசையைத் தேடிக் கொண்டே வந்து, என் கணவர் அருகில் வந்ததும் லேசான யோசனையுடன் கேட்டார்.

"சார்... போகும்போது உங்க காலையா நான் மிதிச்சுட்டேன்..?".

அந்த கிராமத்து ஆள் கேட்டதும் என் கணவரும் ஏதோ சாரி சொல்லப் போகிறானோ என்ற உணர்வில்,"ஆமாம், என் காலைத்தான் மிதிச்சீங்க..!" என்றார்.

கிட்டத்தட்ட அந்த கிராமத்து ஆள் சாரி சொன்னால் 'பரவாயில்லை' என்று சொல்லக்கூட என் கணவர் தயாரான அந்த விநாடியில் தான் அந்த ஆள் தனது குழந்தையைப் பார்த்துச் சொன்னார்.

"டேய் ராசு, இந்த வரிசைதாண்டா... யோசிக்காம உள்ளே போ..!".
.
.

6 comments:

Balamurugan Balakrishnan said...

nice one...

RAVI said...

அட நல்ல ஐடியாவா இருக்கே.
கிராமமா கொக்கா ?
:-))))

க. தங்கமணி பிரபு said...

ஏன் அவர் ஒரு பக்கா நகரத்துவாசியாக இருக்கக்கூடாது? அவங்க தியேட்டர்ல பேசிகிட்டிருக்கறத வச்சு சொல்றீங்களா? பாபா காம்ப்ளக்ஸ் பக்கத்துல டாடாபாத்லயே எனக்கு தெரிஞ்ச மில்லு முதலாளிக, மில்லுல வேலை செய்யறவங்க SAP படிச்சவங்கன்னு எத்தனை பேரு முரட்டு கொங்குத்தமிழ் பேசுபவர்கள் இருக்கிறாங்க தெரியுங்களா!

தியேட்டர்ல , பஸ்ஸுல நடக்கத்தெரியாம காலை மிதிக்கறது, நடிகரை பயங்கரமா ரசிக்கறதெல்லாம் நகரத்துலதாங்க ரெம்ப சாஸ்தி! என்ன..... இந்த கேன வேலையெல்லாம் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி மூஞ்சிய வச்சுக்குவாங்க! அப்புறம் இன்னொன்னு, பெருநகரங்கள்ல நல்ல point healsல ஒரு மிதி மிதிச்சுட்டு "Oh Sorry" ன்னு அவங்க சொல்றத நாம வாங்குனமா இல்லையான்னு கண்டுக்காம நகரும் யுவதிகள் நாகரீக நகரவாசிகளா?

எப்படி உங்க அனுபவத்துக்கு கிராமம்ங்கற பிராண்ட் பண்றீங்க! ஒருவகைல பார்த்தா கோவையே கொஞ்சம் பெரிய கிராமம்தான்! ஆக காலை மிதிச்சவங்களும் நீங்கல்லாம் ஒரே ஊர்தான்! அப்படின்னா நீங்களும் அவங்களும் ஒன்னா?

உங்க தனிப்பட்ட அனுபவத்த பொதுமைப்படுத்தி, கிராமத்தைப் பற்றிய தவறான கருத்த பதிவாக்கறது ரெம்ப ரெம்ப கிராமத்தனமில்லீங்களா?

சினிமா வெறில காலை மிதிச்சான், கண்டுக்காம போனான்! இதான மேட்டரு! இதுக்கு எதுக்கு கிராமம் நகரம்னு உங்களுக்குள்ள எப்பவோ நடந்த நிகழ்ச்சில வெளிப்படுத்தமுடியாத உள்ள ஓரத்துல பதுங்கியிருக்கற கோவத்த நாசுக்கா இங்க ஒரு கால் மிதி சம்பவத்துக்கு வர்ணமடிகறீங்க?

ஒரு பக்கா சென்னைவாசியா என் கண்டனங்களை இங்க பதிவு செஞ்சுக்கறேன்!(இந்தூருக்கு வாங்க! எவ்வளவு அடிச்சாலும் வெளியூர்காரன/கிராமத்துக்காரன் தாங்கறான்டான்னு, என்ன அடி அடிக்கறாங்க தெரியுமா?)

Aba said...

என்ன ஒரு அறிவு...

பத்மினி said...

@ க. தங்கமணி பிரபு: அது பொதுவான ஒரு க்ளிஷே. நான் யாரையும் பர்டிக்குலரா ஹர்ட் பண்ணல. அதுக்காக ரொம்ப வருத்தபட வேண்டாம்னு நெனைக்கிறேன். அப்புறம் ரஜினி ஃபெனைக் கிண்டல் பண்ணினேன்னு நாளைக்கு ஒரு க்ரூப் கிளம்பும். இப்படியே போனா காமெடிய எஞ்சாய் பண்ணமுடியாது. இதுல நான் கமல் கட்சி. "கதை சொன்னா அனுபவிக்கணும்...ஆராயக்கூடாது...! "

க. தங்கமணி பிரபு said...

அது கமல் கட்சி இல்லைங்க! பம்மல் உவே சம்பந்தம்னு ப்ளாக்கெல்லாம் எழுதத்தெரியாத படிப்பறிவில்லாத அவரே தன்னை பற்றி சொல்லிக்கற ஒரு படிப்பறிவில்லாத தற்குறியோட சுயவிளக்கம் மற்றும் பொதுவிளக்கம்! நிச்சயமா நீங்க அப்படி இல்லன்னு நான் கண்டிப்பா நம்பறேன்!

மற்றபடி இந்த கிளிஷே பிரயோகம், ரஜினி ரசிகர் குரூப் பற்றிய முன்னெச்சரிக்கையெல்லாம் நீங்க குறிப்பிட்ட அந்த தியேட்டர்ல வந்த ரசிகர் உங்க கணவர் காலை மிதிச்சிட்டு செஞ்சமாதிரியே நல்ல தமாஷா இருக்குங்க! வாழ்த்துக்கள்!(உங்களுடைய சமீபத்திய பதிவெல்லாம் படிச்சேங்க, நல்ல தமாஷா இருக்கு! குறீப்பா அந்த சர்தார்ஜி ஜோக்கின் தமிழ் வெர்ஷன் சூப்பர்)

Post a Comment