Friday, December 24, 2010

கிறிஸ்துவும் மூன்று மரங்களும்

ஒருகாலத்தில், மலை ஒன்றின் மீது மூன்று இளம் மரங்கள் நின்றன.

அவை, எதிர்காலத்தில் தாங்கள் வளர்ந்து பெரியவை ஆனதும், தாங்கள் அடைய விரும்பும் நிலை பற்றி கனவு கண்டுகொண்டிருந்தன.
முதலாவது மரம், “நான் உலகின் விலையுயர்ந்த பொக்கிஷத்தைச் சுமக்கவிரும்புகிறேன்.. ” என்றது.

இரண்டாவது மரம், “நான் மாபெரும் சமுத்திரங்களைக் கடக்கப் போகின்றேன். பேரரசர்களையெல்லாம் தாங்கிச் செல்வேன். உலகிலேயே அதிபலம் பொருந்திய மரக்கலமாக நான் இருப்பேன்,” என்றது.

மூன்றாவது மரமோ, “நான் இம்மலை உச்சியை விட்டுப் போகப்போவதே இல்லை. நான் மிகவும் உயரமாக வளர விரும்புகிறேன். அப்போது, என்னைப் பார்க்கும் மக்கள், சுவர்க்கத்திற்கு உயரே தங்கள் கண்களை உயர்த்தி கடவுளைப் பற்றி நினைப்பார்கள். உலகிலேயே மிக உயர்ந்த மரமாக நானே இருப்பேன்,” என்றது.

வருடங்கள் பல சென்றன.  அந்த சிறிய மரங்களும் உயரமாக வளர்ந்தன. ஒரு நாள், மூன்று விறகுவெட்டிகள் அந்த மலை மீது ஏறினர்.

அவர்கள் ஆளுக்கொரு மரத்தை வெட்டிச் சாய்த்து, தங்கள் வண்டியில் மரங்களை நகரத்துக்குள் எடுத்துச் சென்றனர்
தன்னை விறகுவெட்டி தச்சு வேலை செய்யுமிடத்திற்குத் தன்னை கொண்டு வந்தபோது மிகவும் களிப்படைந்தது. ஆனால், அந்த தச்சன் அதை மிருகங்களுக்கு தீனிவைக்கும் கொட்டில் தொட்டியாக அதை வடிவமைத்தான்.

ஒரு காலத்தில் மிகவும் அழகு வாய்ந்த அந்த மரம், பொன்னால் இழைக்கப்படவில்லை, பொக்கிஷங்களையும் தாங்கி நிற்கவில்லை. அது மரத்தூள்களால் தூசுபடிந்தும் பசியோடிருக்கும் பண்ணை மிருகங்களுக்குத் தீனி தாங்கி நின்றது.

இரண்டாவது மரம், தன்னை விறகுவெட்டி ஒரு கப்பல் கட்டுமிடத்திற்குக் கொண்டு சென்றவுடன் மிகுந்த உற்சாகமடைந்தது. ஆனால், அது நினைத்தற்கு  மாறாக, ஒரு சிறிய மீன்பிடி படகாக செய்யப்பட்டது. சமுத்திரத்தில் செல்ல முடியாத அளவிற்கு அது வலிமையற்றதாக இருந்தது. ஏன், ஒரு சிறிய ஆற்றில் கூட அதனால் பயணம் செய்ய முடியாமல், ஒரு சிறிய ஏரிக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

மூன்றாவது மரமோ, தன்னை வெறும் கட்டைகளாக வெட்டி மரக்கொட்டில் ஒன்றில் போட்டு வைத்தபோது, தான் விரும்பியது நடக்காமல் மனம் வருந்திக் கிடந்தது..

பல நாட்களும் இரவுகளும் கடந்தன. அந்த மூன்று மரங்களும் தாங்கள் கண்டு வந்த கனவுகளையெல்லாம் மறந்து விட்டிருந்தன.
ஆனால் ஒரிரவு ஒரு இளம் பெண், தான் அப்போதுதான் ஈன்றெடுத்த தனது குழந்தையை அத்தொட்டிலில் இட்டபோது அந்த முதல் மரத்தின் மீது நட்சத்திர ஒளிவெள்ளம் பாய்ந்தது.

“அவனுக்கு ஒரு தொட்டில் என்னால் செய்ய முடிந்தால்...,” என அப்பெண்ணின் கணவன் முணுமுணுத்தான்.

அந்த இளம் தாய், அவனது கைகளைப் பிடித்து புன்னகைத்தாள். அந்த மரத்தொட்டிலின் மீது விண்மீன்களின் ஒளி பாய்ந்துகொண்டிருந்தது. “இந்த மரத்தொட்டில் மிகவும் அழகாக இருக்கின்றது,” என்றாள்.

அப்போது அந்த மரம், தான் உலகிலேயே அதி உயரிய பொக்கிஷத்தைத்  தாங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தது.

இன்னும் சில நாள் கழித்து,  ஒரு சாயங்காலம், மிகவும் களைப்படைந்த ஒரு வழிப்போக்கனும் அவனது நண்பர்களும் அந்த சிறிய படகில் செல்லும்போது, இடியும் மின்னலும் கொண்ட புயல் ஆரம்பித்தது.
அந்த சிறிய மரம் நடுங்கியது. .

களைப்படைந்த அந்த வழிப்போக்கன் எழுந்து உட்கார்ந்தான். பிறகு எழுந்து நின்று, தனது கைகளை நீட்டி, “அமைதி,” எனக் கூறியதும், புயல் ஆரம்பித்த வேகத்திலேயே ஓய்ந்தது.

அந்தப் படகு அப்போது, சுவர்க்கத்திற்கும் பூவுலகிற்கும் அரசராக விளங்கியவரைத் தான் சுமந்துசெல்வதை உணர்ந்தது.

ஒரு வெள்ளிக் கிழமை காலை வேளை, தன்னைப் போட்டு, மறந்துவிட்டிருந்த இடத்திலிருந்து தான் அகற்றப்பட்டபோது மூன்றாவது மரம் திடுக்கிட்டது.
மிகவும் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டிருந்த ஒரு கூட்டத்தின் நடுவே தான் தூக்கிச் செல்லப்பட்ட போது அந்த மரம் படபடத்தது. ஒரு மனிதனின் கரங்களை தன் மீது வைத்து ஆணியால் அடித்தபோது அந்த மரம் நடுநடுங்கியது.

ஆனால், ஞாயிறின் காலையில், சூரியன் உதித்தபோது உலகமே களிப்புணர்வால் தனக்குக் கீழே அதிர்ந்தபோது, இறைவனின் அன்பு யாவற்றையும் மாற்றிவிட்டது என அம்மரம் உணர்ந்தது. அது அந்த மரத்தை உறுதிப்படுத்தியது.

அந்த மூன்றாவது மரத்தைப் பற்றி மக்கள் நினைத்த போதெல்லாம், கடவுளின் ஞாபகம் தான் அவர்களுக்கு வந்தது. உலகிலேயே உயர்ந்த மரமாக இருப்பதை விட, அது அதிசிறப்பான ஒன்றாக இருந்தது.
.
.
.
இளமையில் உங்கள் எண்ணம் எதுவோ, அதை அடைய பொறுமையுடன் காத்திருந்தால்...

அது கிடைக்காமல் போகாது என்பதற்கு இந்த மூன்று மரங்கள், மக்களுக்கு உலகம் உள்ள வரையும் சாட்சியாய் இருந்தது.

5 comments:

அனு said...

சரியான நேரத்தில் வந்த அழகான பதிவு.. ரொம்ப நல்லா இருக்குதுங்க.. :)

கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!

Anonymous said...

very good. marai u s a.

Unknown said...

very nice message.... :)

yeskha said...

சூப்பருங்கோவ.

நடராஜன் said...

Heart warming

Post a Comment