Wednesday, June 9, 2010

சின்னச்செருப்பு சின்னச்சாமி



சின்னச்செருப்பு சின்னச்சாமி என்பது அவன் பெயர்.

அவன் ரொம்ப காலமாய் தன் காலுக்கு பத்தாத செருப்பைப் போட்டுக் கொண்டே அலைவான்.

செருப்பு சின்னதாய் இருப்பதால் அது அவன் கால்களைக் கடித்துக் கொண்டே இருக்கும்.

கால்கள் புண்ணாகி வீங்கி அவனைக் கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்கும்.

அதைப் பற்றி அவன் கவலைப் பட்டதேயில்லை.

காலங்கள் உருண்டோடின.

அவனுக்குத் திருமணமாகி மகனும் பிறந்தான்.

அவன் மாறவேயில்லை.

பையன் வளர்ந்து படிப்பை முடித்து வேலைக்கும் போக ஆரம்பித்துவிட்டான்.

அவனுக்கும் ஒரே ஆசைதானிருந்தது.

அது... தன் அப்பாவுக்கு சரியான அளவில் ஒரு செருப்பு வாங்கிக் கொடுக்கவேண்டும் என்பதுதான்.

அவன் தன்னுடைய முதல் சம்பளத்திலேயே சின்னச்சாமிக்கு ஒரு ஜோடி புதுச் செருப்பைச் சரியான அளவில் வாங்கி வந்தான்.

சின்னச்சாமியோ அதைப்போட ஒரேயடியாய் மறுத்துவிட்டான்.

“எனக்கு இந்தச் செருப்பு வேண்டாம் மகனே… என்னுடைய அளவு குறைந்த செருப்புகள் கொடுக்கும் நிம்மதியை இந்தச் சரியான செருப்பால் தரவே முடியாது…!”.

மகன் குழப்பத்துடன் கேட்டான்.

“அது எப்படி அப்பா… சரியான அளவுச் செருப்புகளை விட கால்களைக் கடித்து துன்புறுத்தும் அந்த அளவு குறைந்த செருப்புகள் எப்படி உங்களுக்கு நிம்மதியைக் கொடுக்க முடியும்…?”.

சின்னச்செருப்பு சின்னச்சாமி ஒரு மெல்லிய புன்முறுவலோடு பதில் சொன்னான்.

“மகனே… எனது செருப்புகள் காலைக் கடிகின்றன என்பது உண்மைதான். அதனால் என் கால்கள் புண்ணாகினறன என்பதும் உண்மைதான். ஆனால், வீட்டுக்கு வந்து செருப்பைக் கழட்டிவிட்டதும் ‘அப்பாடா…!’ என்றொரு நிம்மதி தோன்றுமே… அதை நீ கொடுக்கும் இந்தப் புதுச் செருப்புகள் தரவே முடியாது அல்லவா…?”.

சின்னச்சாமியின் மகன் விக்கித்து நின்றான்.
.
.
.

4 comments:

http://rkguru.blogspot.com/ said...

முன்னேற்றம் வாழ்க...

உங்களுக்கு ஒட்டு போட்டாச்சு என் பதிவு தமிளிஷ்யில் வெளியாகி உள்ளது. எனக்கும் ஒரு ஒட்டு போடுங்க...
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html

எல் கே said...

:)) vithyasamaana sinthanai

க.பாலாசி said...

நல்லாருக்குங்க சின்னசாமி கதை...

ரகு said...

அப்பா நீ நிஜமாவே லூசுதானான்னு மகன் கேக்கலையா?

Post a Comment