Wednesday, June 30, 2010

ஒரு ஆதிவாசி அத்தியாயம்



ராக்கேஷ் ஒரு பேங்க்-கின் கிராமத்து பிராஞ்ச் அதிகாரி.

அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார்.

ராக்கேஷ் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான்.

"எதுக்காகப் பணம் வேணும்...?"

அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார்.

"கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்...!"

"அடமானமாய் என்ன தருவீங்க...?"

ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார்.

"அடமானம்னா என்ன..?".

"நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்...!"

ஆதிவாசி ஆள் சொன்னார்.

"கொஞ்சம் நிலம் இருக்கு... ரெண்டு குதிரை இருக்கு... எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்...!".

ராக்கேஷ் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தான்.

சில மாதங்கள் கழிந்தது.

அந்த ஆதிவாசி மீண்டும் பேங்கிற்கு வந்தார்.

தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்.

பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.

ராக்கேஷ் ஆச்சர்யத்துடன் கேட்டான்.

"கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா...?"

அந்த ஆதிவாசி உற்சாகமாய்ப் பதில் சொன்னார்.

"லாபம் இல்லாமலா...? அது கிடைச்சது நிறைய...!".

ராக்கேஷ் ஆர்வத்துடன் கேட்டான்.

"அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?".

"என்ன செய்யறது... பொட்டில போட்டு வச்சிருக்கேன்...!".

ராக்கேஷ் யோசித்தான்.

'இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக் கிடைச்சுட்டான்...!' என்று நினைத்தபடியே,"ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே...?" என்றான்.

ஆதிவாசி கேட்டார்.

"டெபாசிட்னா என்ன...?".

ராக்கேஷ் விளக்கமாய்ப் பதில் சொன்னான்.

"நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு... அதில உங்க பணத்தை போட்டு வச்சா... உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்...!".

கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆதிவாசி நபர் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.

"அடமானமாய் என்ன தருவீங்க...?".
.
.
.

Tuesday, June 29, 2010

தில்லுதுரயும் வாட்ச்மேனும்



தில்லுதுர அன்று ஒரு மீட்டிங் அட்டெண்ட் பண்ண வேண்டியிருந்ததால் அவசர அவசரமாக சென்று கொண்டிருந்தார்.

வாட்ச் வேறு நின்றுவிட்டதால் நேரம் என்ன என்பது அவருக்குத் தெரியவில்லை.

கொஞ்சம் லேட்டாகிவிட்டதோ என்று வேறு தோன்றிக் கொண்டிருந்தது.

வழியில் ஒரு மனநல மருத்துவமனையைக் கடக்கும்போது அதன் வாட்ச்மேன கேட்டில் ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.

தில்லுதுர அவரைக் கூப்பிட்டார்.

"வாட்ச்மேன்... கொஞ்சம் டைம் என்னனு சொல்ல முடியுமா...?".

வாட்ச்மேன் திரும்பி தில்லுதுரயைப் பார்த்து, "ஒரு நிமிஷம்..." என்றவர் தனது பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டு ஒரு சிறு குச்சியை எடுத்தார்.

அதை மேலும் கீழும் ஒருமுறை பார்த்துவிட்டு பிறகு அதைத் தரையில் நட்டு, ஆசாரிகள் உபயோகப்படுத்தும் ஒரு கருவியை எடுத்து அந்தக் குச்சி நேராய்த்தான் நிற்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டார்.

பிறகு ஒரு காம்பாஸை எடுத்து வடக்குத் திசையை குறித்துவிட்டு, ஒரு ஸ்கேலை எடுத்து அந்தக் குச்சியின் நிழலை அளந்தார்.

பிறகு, எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொண்டு, தன்னுடைய ஐட்டங்களை எல்லாம் மறுபடி பாக்கெட்டில் வைத்துவிட்டு ஒரு கால்குலேட்டரை எடுத்தார்.

கொஞ்சநேரம் ரொம்ப சீரியஸாய் சில கணக்குகளைப் போட்டுப் பார்த்துவிட்டு, அவர் தில்லுதுர பக்கம் திரும்பினார்.

"நேரமானதுக்கு மன்னிக்கணும் சார்... இப்ப நேரம் சரியாய் அட்ஜஸ்ட் ஆறு நாற்பது. மேலும் இன்றைய தேதி ஜூன் 29,வருஷம் 2010...".

அந்த மனிதன் தனக்கு பெரிதாய் உதவவில்லை என்றாலும்... தில்லுதுர அவனது வேலையில் அசந்து போய் தனது வாட்ச்சை அட்ஜஸ்ட் செய்தபடியே கேட்டார்.

"நீங்க டைம் சொன்னவிதம் உண்மையிலேயே ஆச்சர்யப்படத்தக்கதாய் இருக்கிறது. இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் மேகங்கள் மூடிய நாட்களிலும் இரவுகளிலும் இந்தக் குச்சியை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்... எப்படி நேரம் பார்ப்பீர்கள்...?".

தில்லுதுர இப்படிக் கேட்டதும், அந்த வாட்ச்மேன் தனது வலது கை மணிக்கட்டை காட்டியவாறே சொன்னார்.

"இந்த வாட்ச்ல பாத்துக்குவேன்...!".
.
.
.

Monday, June 28, 2010

டைம் மெஷின்







அன்று நான் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்தேன்.

பாலக்காடு செல்லும் பஸ் வர இன்னும் அரை மணியாகும் என்றதால் கிடைத்த சீட்டில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தேன்.

எதிரே ஒரு வெயிட் பார்க்கும் மெஷினில் சில குழந்தைகள் தங்களது எடையைப் பார்த்து விளையாடிக் கொண்டிருந்தன.

எனக்கும் எனது எடையைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருந்தது.

போய் ஏறி மெஷினில் சக்கரம் எல்லாம் சுற்றி நின்றபின் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டேன்.

டர்ரென்று கார்ட் வந்து விழுத்தது.

நாற்பத்தியெட்டு கிலோ.

அதுபோக, எடை காட்டும் மெஷினில் விழும் கார்டில் எப்போதும் எனக்கு இன்னொரு ஆவல் உண்டு.

அது, பின்னால் சொல்லும் ஜோசியம்.

திருப்பிப் பார்த்தேன். அதில்...

"நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள்..."

'சரியாய்ச் சொல்கிறதே... நான் ஒரு ஆசிரியை என்பதும் கேரளா செல்லப்போகிறேன் என்பதும் மெஷினுக்கு எப்படித் தெரியும்..?'

குழப்பம் அதிகமாக இன்னொரு தடவை சரியாகக் காட்டுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள மறுபடி மெஷினில் ஏறினேன்.

இப்போது கார்டைப் பார்க்க அதில், "நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள். இப்போது உங்கள் கணவரைச் சந்திக்கப் போகிறீர்கள்..."

நானாவது... என் கணவரைப் பார்க்கப் போவதாவது...!

'அவர் இப்போது அவருடைய அலுவலகத்தில் இருப்பார்...' என்று எண்ணிக்கொண்டே வந்து உட்கார்ந்திருப்பேன்.

பின்னால் அவர் குரல் கேட்டது.

"ஹேய் பத்மினி... இன்னும் பஸ் கிடைக்கலையா... ஒரு அர்ஜன்ட் வேலை - கோவை போகணும். சாயங்காலம் பாக்கலாம்..." என்றபடி அவர் கோயமுத்தூர் செல்லும் பஸ்சில் ஏறி கைகாடியவாறே சென்றார்.

எனக்கு ஆச்சர்யம் அதிகமாகியது.

'இது எப்படி நடக்கும்...?'.

யோசித்து யோசித்து தலை வலிக்கும் போலிருந்தது.

சரி இன்னொரு தடவை பார்த்து விடலாம்.

மீண்டும் மெஷினில் ஏறி இன்னொரு ஒரு ரூபாயைப் போட்டேன்.

இப்போது, 'நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கணவரைச் சந்தித்துவிட்டீர்கள்... இப்போது கடவுள் உங்கள் அருகில் வரப் போகிறார்...!'

நான் முடிவே செய்துவிட்டேன்.

'கடவுளாவது பக்கத்தில் வருவதாவது... அதுவும் இத்தனை பேர் இருக்கும் பஸ் ஸ்டாண்டில்...?'

யோசித்து முடித்திருப்பேன். முருகன் வேடம் போட்ட ஒரு சிறுவன், "அக்கா...!" என்று என்னெதிரே கை நீட்டி நின்றான்.

எனக்கோ தலையே வெடித்துவிடும் போலாகிவிட்டது.

எப்படி.?

எப்படி..?

எப்படி...?

மெஷினையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்... என்னால் நம்பவே முடியவில்லை.

'இது எப்படி நடக்கும்...?'

'சரி... இதெல்லாம் யதேச்சையாய் நடக்கிறதா... இலலை, உண்மையிலேயே மெஷினுக்கு ஏதாவது சக்தி இருக்கிறதா என்று பார்த்துவிடலாம்.'

கடைசியாய் ஒருமுறை மெஷினில் ஏறி ஒரு ரூபாய் நாணயத்தை மறுபடி போட்டேன்.

அதில், ''நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கணவரைச் சந்தித்துவிட்டீர்கள்... கடவுளைச் சந்தித்துவிட்டீர்கள் ...இப்போது உங்கள் பஸ்ஸைத் தவறவிட்டு விட்டீர்கள்!" என்றிருந்தது.

"அய்யய்யோ...!' என்று நிமிர்கையில்...

அந்தப் பாலக்காடு பஸ் பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறி என் கண்ணை விட்டு மறைந்து கொண்டிருந்தது.
.
.
.

Wednesday, June 23, 2010

மனநல மருத்துவமனை - பயணக் கட்டுரை




விடுமுறை முடிந்து புதிய வகுப்புக்கு வந்த மாணவர்களை 'விடுமுறைக்கு எங்கே போனீர்கள்...?' என்ற தலைப்பில் ஒரு பயணக் கட்டுரை எழுதச் சொன்னபோது டேனி என்னும் ஒரு சிறுவன் எழுதிய கட்டுரை இது.


"நான் பெரும்பாலும் விடுமுறைக்கு என் தாத்தா பாட்டி வீட்டுக்குத்தான் போவேன்.

செங்கல்லும் ஓடும் உள்ள அந்த கிராமத்து வீடு...

முழுவதும் அன்பால் நிறைந்தது.

ஆனால், இப்போது தாத்தாவும் பாட்டியும் அங்கே இல்லை.

அவர்கள் வயதானதால் சற்று ஞாபகம் குறைந்து அதற்காக கோவையில் உள்ள ஒரு ஹோமுக்குப் போய்விட்டார்கள்.

அந்த ஹோமில், அவர்களைப் போலவே நிறைய மக்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் அங்கே சின்னச் சின்ன அறைகளில் வாழ்கிறார்கள்.

அவர்கள் பெரிய மூன்று சக்கர வாகனங்களை உபயோகிக்க அங்கே பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அங்கே அவர்களுடைய பெயரை ஒரு அட்டையில் எழுதி அவர்களுடைய கழுத்தில் மாட்டிவிட்டிருக்கிறார்கள்.

இல்லாவிட்டால், அவர்கள் யார் என்பது அவர்களுக்கே ஞாபகம் இருக்காது.

அவர்கள் அங்கே நிறைய கேம்ஸ் விளையாடுகிறார்கள்; எக்ஸர்சைஸ் செய்கிறார்கள்.

ஆனால், அதை அவர்கள் சரியாய்ச் செய்வதில்லை.

அந்த ஹோமில் ஒரு ஸ்விம்மிங் பூல் இருக்கிறது.

அதில், அவர்கள் எல்லோரும் குதித்துக் குதித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

எனக்கென்னவோ அவர்கள் நீச்சலையும் மறந்துவிட்டிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

நீங்கள் அந்த ஹோமுக்குப் போனால் அங்கே கேட்டின் முன்னே ஒரு சின்ன கூண்டில் ஒரு பெரியவரைப் பார்க்கலாம்.

அவரைத் தாண்டி இவர்களில் ஒருவர்கூட வெளியே போகவோ வரவோ முடியாது.

அவரும் இங்கே முன்பு இப்படி வந்தவர்தான்.

இப்போது சற்று பரவாயில்லை ஆகி ஹோமிலேயே வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.

என் பாட்டி மிக அற்புதமாய் பாயாசம் வைப்பார்கள்.

அதை அவரும் இப்போது மறந்திருப்பார் நினைக்கிறேன்.

அங்கே யாரும் சமைப்பதில்லை, சாப்பிடுகிறார்கள்... அவ்வளவுதான்.

அவர்கள் எல்லோரும், எல்லா நாளும் ஒரே மாதிரி, ஒரே சாப்பாட்டைத்தான் சாப்பிடுகிறார்கள்.

முன்பெல்லாம் என் பாட்டி அடிக்கடி சொல்வாள்.

'வாழ்நாள் பூராவும் உன் தாத்தா உழைத்தார். இப்போது இப்ப்டி ஆகிவிட்டது...' என்று.

இப்போது பாட்டிக்கும் அதேபோல் ஞாபகமறதி வந்துவிட்டது.

நான், என் தாத்தா பாட்டி இருவரும் இங்கே என் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனால், கேட்டிலிருக்கும் அந்தப் பெரியவர் விடமாட்டார் என்றே நம்புகிறேன்.

நான் பெரியவனாகி ஒருவேளை எனக்கும் இதேபோல் ஆகலாம்.

அப்போது, நான் அந்த ஹோமுக்கே போக விரும்புகிறேன்.

அதிலும், அந்த கேட்டிருக்கும் பெரியவரைப் போல் ஆகவே விரும்புகிறேன்.

ஆனால்,

நான் அவ்வாறு கேட்டில் இருந்தால்...

 ஹோமில் இருக்கும் முதியவர்களை... அவர்களுடைய பேரன் பேத்திகளைப் பார்க்கக் கண்டிப்பாய் அனுமதிப்பேன் என்பது மட்டும் உறுதி...!".
.
.
.

Monday, June 21, 2010

டிக்காலா




ஷஹானாவின் கணவன் ஒரு வீட்டுக் கோழி.

எந்நேரமும் டிவி.. டிவி.. டிவிதான்...!

ஒரு வேலைக்குப் போகலாம்... என்னவாவது சம்பாதிக்கலாம்னு எதுவும் கிடையாது.

வீட்டை விட்டே வெளியே வராதவன் எங்கே வேலைக்குப் போறது... சம்பாதிக்கறது...?

ஷஹானா சொல்லிப் பார்த்தாள்.

சண்டை போட்டுப் பார்த்தாள்.

திட்டிக்கூடப் பார்த்துவிட்டாள்.

அவன் எதுக்கும் அசையறதா இல்ல.

கூட வேலை பாக்கற பொண்ணு சொன்னானு ஒரு மனோதத்துவ டாக்டரப் பாக்கப்போனா பொண்ணு.

டாக்டர் எல்லாக் கதையையும் கேட்டுட்டு, "அவரோட கவனத்த திருப்பற மாதிரி ஏதாவது பண்ணுங்க... ஏதாவது புதுசா பெட் அனிமல்ஸ்...கொஞ்சம் மாற்றம் வரும்... !" என்றார்.

ஷஹானா யோசிச்சுக்கிட்டே போகும்போது வழியில அந்தக் கடையப் பாத்தா.

அது வீட்டுல வளக்கற மிருகம் பறவை விக்கிற கடை.

டாக்டர் சொன்ன ஐடியாவை புடிச்சுக்கலாம்னு ஷஹானா நேரா அந்தக் கடைக்குள்ள புகுந்துட்டா.

கடைல எப்பவும் போல நாய், புறா, கிளி, முயல் எல்லாம் விக்கறதுக்குன்னு இருந்தது.

ஷஹானாவுக்கு இதையெல்லாம் தவிர வேற ஏதாவது புதுசா இருந்தா பரவாயில்லைனு தோணுச்சு.

அதைக் கடைக்காரர்கிட்ட கேட்கவும் செஞ்சா.

கடைக்காரர் சொன்னாரு, "அதோ அந்த ரூம்ல நீங்க கேட்ட மாதிரி புதுசா ஒரு பறவை இருக்கு... வேணும்னா வந்து பாருங்க..."

ஷஹானாவுக்கு அந்தப் பறவையப் பாத்தவுடனே பயந்து போயிட்டா.

கர்ண கொடூரமா... கழுகைவிட பெரியதாய் மூக்கும் முடி முளச்ச கால்களும் பெரிய பெரிய நகங்களும் முட்டை முட்டையாக் கண்ணும்...

ஷஹானா கேட்டா.

"என்ன பறவைங்க இது...?"

கடைக்காரர் பதில் சொன்னாரு.

"இந்தப் பறவை பேரு டிக்காலா. மிகப் பெரிய டெஸ்ட்ராயர்...!'

"இது அப்படி எதை அழிக்கும்...?'

"காட்டறேன் பாருங்க..." என்ற கடைக்காரர் அந்தப் பறவையை பார்த்துச் சொன்னாரு,"டிக்காலா டேபிள்...!"

டிக்காலா உட்கார்ந்த இடத்திலிருந்து சொய்ங்கென்று ரெக்கை ரெண்டயும் விரிச்சுக்கிட்டுப் அந்த டேபிள் மேல பாய்ஞ்சது.

ஒரு பத்து செகண்ட்டுதான் இருக்கும்.

அந்தக் காலால டேபிளப் பிராண்டி மூக்கால கொத்தி கொஞ்ச நேரத்துல அந்த டேபிள் கீழ சுக்கல் சுக்கலாக் கிடந்தது.

கடைக்காரர் அப்பவும் விடல.

"டிக்காலா கப்போர்ட்...!"

அந்தப் பறவை அப்படியே கப்போர்டப் பார்த்துப் பறந்துச்சு.

இன்னொரு பத்து செகண்ட்தான் இருக்கும்

கப்போர்டக் காணோம்.

இந்தப் பறவைய வாங்கிட்டுப் போனா கணவனிடம் கொஞ்சமாவது மாற்றம் வரும்னு தோணுச்சு.

ஷஹானா முடிவு செஞ்சா.

'இது... இதுதான் கரெக்ட்டு'னு டிக்காலவ வாங்கிக்கிட்டு வேகவேகமா வீட்டுக்கு வந்தா.

வீட்டுக்கு வந்தா புருஷன் எப்பவும் போல டிவியே கதின்னு கெடக்கறான்.

ஷஹானா ஆசை ஆசையா பக்கத்துல போனா.

"என்னங்க.. என்னங்க...?"

அவனோ டிவியை விட்டுக் கண்ணை எடுக்காமக் கேட்டான்.

"என்ன...?"

"இங்க பாருங்களேன்... உங்களுக்காக ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன்...!"

அவன் திரும்பிப் பார்க்காமலே எரிச்சலுடன் கேட்டான்.

"என்னடி அது...?"

ஷஹானா ஆவலோட அந்தப் பறவை பேரச் சொன்னா.

"டிக்காலா...!".

டிவி பார்ப்பதைக் கெடுக்கிறாளேன்னு கடுப்பில் அவன் பதில் சொன்னான்.

"ம்ம்... டிக்காலா மயிரு...!".
.
.
.

Wednesday, June 16, 2010

டேனியின் அம்மா




டேனி தன் அப்பாவிடம் 'திருமணம் என்றால் என்ன...' என்பது பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

எவ்வளவோ சொல்லியும் அவனுக்குப் புரியாமல் போகவே... அவனது அப்பா என்னை எங்கள் திருமண ஆல்பத்தை எடுத்து வரச் சொன்னார்.

சமையலறையில் வேலையை முடித்துவிட்டுப் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த நான் கைகளைத் துடைத்துக் கொண்டு போய் நாற்காலியை எடுத்து, பீரோவின் அருகில் தள்ளி...

பீரோவின் மேலே இருந்த அந்தப் பெரிய திருமண ஆல்பத்தை எடுத்துக் கொண்டு அவரிடம் கொடுத்துவிட்டுத் திரும்பவும் சமையலறைக்குள் திரும்பவும் நுழைந்து விட்டேன்.

வெளியே அப்பா மகன் இருவரின் குரல்களும் கேட்டுக் கொண்டே இருந்தது.

அவர் ஏதோ சொல்லிக்கொண்டே வர... அவனது சந்தேகங்களும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

நான் சாப்பிடத் தேவையானவற்றை மேசையில் எடுத்து வைக்கும்போது அவர் ஒருவழியாய் அவனுக்குத் திருமணம் என்ரால் என்ன என்பதை வெற்றிகரமாய்ப் புரியவைத்துவிட்டு அலுப்புடன் ஆல்பத்தை மூடி வைத்துக் கொண்டிருந்தார்.

டேனியும் ஒருவாறு புரிந்த முகபாவத்துடனே எழும்போது, அவனுக்கே உரிய குழந்தைத்தனத்துடன் அப்பாவிடம் கேட்டான்.

"அப்ப இப்படித்தான்... அம்மா நம்ம வீட்டுக்கு வேலை செய்ய வந்தாங்களாப்பா...?".
.
.
.

கிளியும் காக்கையும்






நகரத்தின் ஒரு மரத்தில் வாழ்ந்து வந்தன ஒரு கிளியும் காக்கையும்.

கிளிக்கு எப்போதும் காக்கையைக் கண்டால் இளப்பம்.

'பார்... இந்தக் காக்கை எவ்வளவு கருப்பாய் இருக்கிறது. இதனுடன் இந்த மரத்தில் சேர்ந்து வாழ்வதை நினைக்கவே அசிங்கமாக இருக்கிறதே...!" என்று கிளி எப்போதும் மனதுக்குள் எண்ணிக்கொண்டே இருக்கும்.

சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அந்தக் கிளி காக்கையை இன்ஸல்ட் வேறு பண்ணிக்கொண்டே இருக்கும்.

காக்கை இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளவே கண்டுகொள்ளாது.

ஒருநாள்... நகரத்துச் சிறுவர்கள் இருவர் கிளியைக் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

அவர்கள் வீட்டில் கிளியை வைத்து... நாக்கில் பூண்டையெல்லாம் தேய்த்து மனிதர்கள் போல பேச ட்ரெய்னிங் எல்லாம் கொடுத்தார்கள்.

இதற்கெல்லாம் அப்புறம் ஒருநாள்....

அந்த வீட்டின் விசேஷத்தன்று படையலைப் படைத்துச் சாப்பிடக் காக்கையை "கா..கா..."வென அழைத்தனர்.

சாப்பிட வந்த காக்கை கிளியைப் பார்த்துச் சொன்னது.

"கிளியே... அழகால் கர்வம் கொள்ளக் கூடாது. பார்... உன் அழகே இப்போது உனக்கு எதிரியாய் மாறிவிட்டது. மேலும் பார்... உன்னை அவர்கள் போலப் பேசவைக்க உன்னை இந்த மனிதர்கள் எப்படி எல்லாம் துன்புறுத்துகிறார்கள்..? ஆனால், என்னை அழைக்கவோ பார்... அவர்களே என்னைப் போலத்தானே குரல் கொடுக்கிறார்கள்...!".
.
.
.

Tuesday, June 15, 2010

தில்லுதுர அட் கம்ப்யூட்டர்


தில்லுதுர படிச்சு முடிச்சு எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு சாப்ட்வேர் கோர்ஸ் வேற படிச்சாரு.

அதப் படிச்சுட்டு நானும் ஒரு சாப்ட்வேர் ஆளுன்னு ஒரு கம்பெனில வேலைக்கு வேற சேர்ந்தாச்சு.

ஒரு நாள் அவர் கம்பெனில பாஸ்வேர்ட் ஆடிட் ஒண்ணு நடந்துச்சு.

எல்லோரும் அவரவர் பாஸ்வேர்ட் என்னனு கம்பெனிக்குச் சொல்லணும்.

எல்லோர்கிட்டயும் பாஸ்வேர்ட் கேட்டுக்கிட்டே வந்தவங்க தில்லுதுரகிட்ட அவர் பாஸ்வேர்டை கேட்டதும் அப்படியே ஷாக்காயிட்டாங்க.

அந்த டீம் கேப்டன் கேட்டார்.

"எங்கே... உங்க பாஸ்வேர்டை இன்னொரு தடவை சொல்லுங்க...?".

தில்லுதுர அசராமல் சொன்னார்.

"கமல்ஹாசன்ரஜினிகாந்த்விஜய்ரித்தீஷ்டெல்லிசூர்யாஅஜித்தனுஷ்சிம்பு".

அவர் கேட்டார்.

"எதுக்காக இவ்வளவு பெரிய பாஸ்வேர்ட்...? எனக்கு ஒண்ணும் புரியல...!".

தில்லுதுர அதற்கு சீரியஸாய் இப்படி பதில் சொன்னார்.

"கம்ப்யூட்டர்லதான் புது பாஸ்வேர்ட் ஜெனெரேட் பண்ணறப்ப பாஸ்வேர்ட் எட்டு கேரக்டருக்கு குறையாமல் இருக்கணும்... அதுக்கு இடையில ஒரு கேப்பிடலாவது இருக்கணும்னு போட்டிருந்ததே...!" என்றார்.
.
.
.

Monday, June 14, 2010

கால் பந்து ஸ்பெஷல்




ஒரு மருத்துவக் கல்லூரியின் இறுதியாண்டு மனோதத்துவ வகுப்பு நடந்து கொண்டிருந்தது.

ஆசிரியர் வகுப்பு மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.

"நீங்கள் இப்போது நன்றாகத் தேறிவிட்டீர்கள். நான் இப்போது சில கடினமான வியாதியஸ்தர்களின் செயல்பாடுகளைக் கூறுகிறேன். நீங்கள் அந்த வியாதிக்குரியவர் யார் என்று கூற வேண்டும். தயாரா...?".

மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர்.

"தயார்...!".

ஆசிரியர் தொடர்ந்தார்.

"நான் சொல்லும் இந்தப் பேஷன்ட் நல்ல உடை அணிந்திருப்பார். நாகரீகமாய் இருப்பார்.உட்கார்ந்திருப்பவர் வேகமாக எழுந்து கை கால்களை உதைத்தபடி நடப்பார்.வாயை சுற்றிக் கைகளைக் குவித்து திடீரெனக் கத்துவார்.கைகளை மேலே உயர்த்தி ப்ரார்த்தனை செய்வது போல அலறுவார்.வேகமாய் வந்து அமைதியாய் தலையைப் பிடித்துக் கொண்டு குனிந்து அமர்ந்து கொள்வார். பிறகு மெதுவாய்த் தலையை உயர்த்தி கண்கள் மட்டும் தெரியும்படி பார்ப்பார். சமயத்தில் அழக்கூடச் செய்வார்..."

சொல்லிக் கொண்டே வந்த அந்த ஆசிரியர் சொல்லுவதை நிறுத்திவிட்டுக் கேட்டார்.

"எனி கெஸ்...?".

எல்லா மாணவர்களும் விழிக்க... ஒரு மாணவன் மட்டும் கையைத் தூக்கினான்.

ஆசிரியர் ஆச்சர்யத்துடன் கேட்டார்.

ஏனென்றால், அப்படியொரு வியாதியஸ்தரை அவரே பார்த்ததில்லை.

"உன்னால் நான் சொன்ன வியாதிக்குரிய அந்த வியாதியஸ்தர் யார் எனச் சொல்ல முடியுமா...?"

"முடியும்...".

ஆசிரியர் சந்தேகத்துடனே கேட்டார்.

"அப்படியானால் சொல்லு... யார் அவர்...?".

அந்த மாணவன் உறுதியான குரலில் பதில் சொன்னான்.

"அந்த வியாதியஸ்தர் நீஙகள் சொன்ன அடையாளப்படிப் பார்த்தால்... அநேகமாய் அவர் ஒரு 'ஃபுட் பால் கோச்' ஆக இருக்கலாம்...!".
.
.
.

Saturday, June 12, 2010

தில்லுதுர அட் பார்ட்டி





தில்லுதுர ஒரு பந்தா பேர்வழி.

அவருடைய அலட்டல்கள் மிகுந்த ருசிகரமானவை.

அவர் ஒருமுறை ஒரு வைர மோதிரம் வாங்கியிருந்தார்.

அடுத்தநாள் அலுவலகத்தில் பார்ட்டி வேறு.

அத்தனை நபர்களும் வந்தே தீருவார்கள்.

தில்லுதுரைக்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் வாய்க்குமா என்ன...?

அவர்தான் பார்ட்டிக்கு முதலில் வந்தார்.

வருகின்ற எல்லோரிடமும் தானே வலிய வலிய சென்று பேசினார்.

வைர மோதிரம் கண்களில் பட கைகளை ஆட்டி ஆட்டி நீட்டி நீட்டிப் பேசிப் பார்த்தார்.

அவருடைய கஷ்டகாலமோ என்னவோ ஒரு பயலும் அவரது வைர மோதிரத்தைக் கவனிக்கவில்லை.

இன்றைக்கு பார்ட்டி முடிவதற்குள் ஒருத்தனாவது அதைக் கவனிக்கவில்லை என்றால் அவருக்குத் தூக்கம் வராது.

என்ன செய்யலாம்..?

தில்லுதுர சரியான சான்ஸுக்குக் காத்திருந்தார்.

பார்ட்டியோ தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

பார்ட்டியின் இடையில் ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் ஒரு விநாடி சட்டென அமைதியான போது தில்லுதுரயின் குரல் சப்தமாய் எதிரொலித்தது.

"சே... என்ன ஒரு புழுக்கம்..? என்ன ஒரு வியர்வை..? இந்த வைர மோதிரத்த கழற்றி வச்சாத்தான் சரியா இருக்கும்...!"
.
.
.

Thursday, June 10, 2010

நன்றி...! நன்றி...!! நன்றி...!!!



இது எனது நூறாவது பதிவு.

கொஞ்சம் வேகமாகவே நூறை நெருங்கிவிட்டேன் என்றே நினைக்கிறேன்.

நான் இதை, இந்த நூறாவது பதிவை நன்றி சொல்லவே பயன்படுத்தப் போகிறேன்.

நான் இந்த சமயத்தில் சில நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டும் இருக்கிறேன்.



முதலில் என் நண்பன் பொன்.சுதா.

அகில இந்திய அளவில் பரிசு பெற்ற அற்புதமான இரு குறும்படஙளும் மூன்று கவிதைத் தொகுதிகளும் அவனது தற்போதைய சாதனை.

தமிழில் பெயர் சொல்லும் சில திரைப்படங்களே அவனது குறி.

அவன் தான் ஏதாவது எழுது என்று விடாமல் வற்புறுத்தி இந்த பிளாக்கை என்னை உட்காரவைத்து பெயர் சொல்லச் சொல்லி உருவாக்கிய பிரம்மா..!

அவனுக்கே இந்த சமயத்தில் முதல் நன்றி.

ஆனால் நான் இப்போது எழுதும் ஒவ்வொரு பதிவுக்குப் பின்னாலும் ஒரு பெரிய நண்பர்கள் கூட்டத்தின் உதவி இருக்கிறது.

அது என் மின் நகர் நண்பர்கள்.

ஒரு காலனியே கதை எழுதிக் கேட்டிருகிறீர்களா...?

அது எங்கள் காலனியில் நடந்தது.

அதில் முதலில் சரசுராம்.

திரைத்துறையில் கண்டிப்பாய் நல்ல படம் கொடுக்க முயற்சிக்கும் ஒரு வளரும் இயக்குனர்.

அவன் தான் படித்துக் கொண்டிருந்த எங்களை எழுத வைத்தவன்.

நான், சித்ரன், ஷாராஜ் எல்லோரும் எழுத ஆரம்பித்தது இவன் வீட்டிலிருந்துதான்.

'கீதம்' என்னும் இவன் நடத்திய கையெழுத்துப் பிரதியில் தான் நாங்கள் எழுத்துப் பயிற்சி எடுத்துக் கொண்டோம்.

அப்புறம் சித்ரன்.

இந்த பிளாக்கின் வடிவமைப்பு மற்றும் அவ்வப்போது சில முக்கிய ஆலோசனைகளும் அவனுடையது.

ஒரு அருமையான... என்னைப் பொறாமை கொள்ளவைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரன்.

கவிதை போலக் கதைகள் அடங்கிய ஒரு சிறுகதைத் தொகுப்புக்குச் சொந்தக்காரன்.

பின்னர், எனது நண்பர் சத்யராஜ்குமார்.

எங்களில் சீனியர் ரைட்டர்.

பிளாக்கிற்கு ஏற்ற வடிவம் எது என்பதை அவருடைய பிளாக்கில் எழுதும்போதுதான் கற்றுக் கொண்டேன்.

இந்த பிளாக்கை முதலில் எல்லா வடிவத்திலும் லேசாய் ஒரு சிந்தனையையோ, சிரிப்பையோ தூண்டும் சின்னச் சின்னக் கதைகள் எழுத முடிவு செய்தே 'மின்மினி தேசம்' என்று பெயர் முடிவு செய்தேன்.

பிறகு கொஞ்ச நாள் சந்தோசமாய் ஓடட்டுமே என்று குறுஞ்சிரிப்புக் கதைகளை போட ஆரம்பித்தேன்.

ஒன்றை இப்போது சொல்ல வேண்டும்.

இந்த பிளாக்கை ஆரம்பித்த நேரம், நான் பெரும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.

வீடு, அலுவலகம், உறவு என எல்லோரும் எனக்கு வாழ்க்கையைக் கற்றுகொடுக்க முயற்சிக்க... நான் பிரச்சினைகளைச் சந்திக்க ஆரம்பித்தேன்.

அப்போதெல்லாம்... எனக்கு ஆதரவாய் இருந்தது என் வாழ்க்கைத் துணையும் என் குழந்தையின் சிரிப்பும் எனது நண்பர்களும்தான்.

அதற்கப்புறம்... உதவியாய் இருந்தது மெல்லிய நகையோடும் இந்த வகை குறுஞ்சிரிப்புக் கதைகள்.

நான் உங்கள் வேலை, வாழ்க்கைப் பளுவால் கஷ்டப்படும் பாரத்தைக் குறைக்க எனது நண்பர்களை என்னால் உங்களுக்குத் தரமுடியாது.

எனவே, நான் படித்த கேட்ட இந்தக் கதைகளை உங்களுக்குத் தர முடிவு செய்தேன்.

இங்கே ஒரு நண்பர் சொன்னதுபோல... இது ஒரு இளைப்பாறுதல் தரும் இடமாக இருப்பதையே நான் மிக மிக விரும்புகிறேன்.

அதிகபட்சம் ஒரு 45 விநாடிகளுக்குள் உங்கள் முகத்தில் ஒரு புன்னகையோ... மனத்தில் ஒரு சிந்தனையையோ... மின்மினியின் ஒரு மினுக்கட்டான் மின்னலாய்த் தோன்ற வைக்கும் முயற்சிதான் இது.

இது பூராவும் எனது சொந்தக் கதைகள் கிடையாது.

பாட்டி சொல்லும் கதைகளைப் போல், இதுவும் ஆசிரியர் யாருமற்ற பழங்கதைகளே...!

ஆனால், இதில் வரும் ஒவ்வொரு கதையும் உங்களுக்குப் புதிதாய் இருக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் மெனக்கெடுகிறேன்.

ஒரு கதையை உங்களுக்குத் தரும்முன் குறைந்தது பத்துக் கதைகளைப் படித்து ரிஜெக்ட் செய்கிறேன்.

இதைப் படித்துக் கருத்துக்கூறும், கருத்துக் கூறாத அனைவருக்கும் என்றென்றும் எனது அன்புகள்.

யார் யாரெல்லாம் உங்களுக்கு முக்கியமான நண்பர்களோ, யார் யார் முகத்தில் எல்லாம் நீங்கள் புன்னகையைப் பார்க்க விரும்புகிறீர்களோ... அவர்களுக்கெல்லாம் இந்த இணைய முகவரியைக் கொடுங்கள்.

சந்தோசம் பரவட்டும்.

இதுபோக,

தனபால்பத்மனாபன், மருத்துவர்.பாலகிருட்டிணன், கனகராஜன், சோபா.சத்தீஷ் ஆகியோருக்கும் என் தம்பியாகவே கருதும் கார்த்தி என்னும் வேங்கடரத்தினத்திற்கும் என் ஊர் பொள்ளாச்சிக்கும் வேலைக்கு நடுவில் பதிவு போட இணைய இணைப்புக் கொடுத்துச் சம்பளமும் கொடுக்கும் எனது கம்பெனிக்கும் எனது உளமார்ந்த நன்றிகள் பல.

மேலும்...இதில் உள்ள சில கதைகளை நமது பிளாக்கின் பெயரோடு வெளியிட்ட 'புதிய தலைமுறை' பத்திரிக்கை மற்றும் அதன் ஆசிரியர் மாலன் அவர்களுக்கும் எமது நன்றி.

மகிழ்ச்சி பரவட்டும்...!


Wednesday, June 9, 2010

சின்னச்செருப்பு சின்னச்சாமி



சின்னச்செருப்பு சின்னச்சாமி என்பது அவன் பெயர்.

அவன் ரொம்ப காலமாய் தன் காலுக்கு பத்தாத செருப்பைப் போட்டுக் கொண்டே அலைவான்.

செருப்பு சின்னதாய் இருப்பதால் அது அவன் கால்களைக் கடித்துக் கொண்டே இருக்கும்.

கால்கள் புண்ணாகி வீங்கி அவனைக் கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்கும்.

அதைப் பற்றி அவன் கவலைப் பட்டதேயில்லை.

காலங்கள் உருண்டோடின.

அவனுக்குத் திருமணமாகி மகனும் பிறந்தான்.

அவன் மாறவேயில்லை.

பையன் வளர்ந்து படிப்பை முடித்து வேலைக்கும் போக ஆரம்பித்துவிட்டான்.

அவனுக்கும் ஒரே ஆசைதானிருந்தது.

அது... தன் அப்பாவுக்கு சரியான அளவில் ஒரு செருப்பு வாங்கிக் கொடுக்கவேண்டும் என்பதுதான்.

அவன் தன்னுடைய முதல் சம்பளத்திலேயே சின்னச்சாமிக்கு ஒரு ஜோடி புதுச் செருப்பைச் சரியான அளவில் வாங்கி வந்தான்.

சின்னச்சாமியோ அதைப்போட ஒரேயடியாய் மறுத்துவிட்டான்.

“எனக்கு இந்தச் செருப்பு வேண்டாம் மகனே… என்னுடைய அளவு குறைந்த செருப்புகள் கொடுக்கும் நிம்மதியை இந்தச் சரியான செருப்பால் தரவே முடியாது…!”.

மகன் குழப்பத்துடன் கேட்டான்.

“அது எப்படி அப்பா… சரியான அளவுச் செருப்புகளை விட கால்களைக் கடித்து துன்புறுத்தும் அந்த அளவு குறைந்த செருப்புகள் எப்படி உங்களுக்கு நிம்மதியைக் கொடுக்க முடியும்…?”.

சின்னச்செருப்பு சின்னச்சாமி ஒரு மெல்லிய புன்முறுவலோடு பதில் சொன்னான்.

“மகனே… எனது செருப்புகள் காலைக் கடிகின்றன என்பது உண்மைதான். அதனால் என் கால்கள் புண்ணாகினறன என்பதும் உண்மைதான். ஆனால், வீட்டுக்கு வந்து செருப்பைக் கழட்டிவிட்டதும் ‘அப்பாடா…!’ என்றொரு நிம்மதி தோன்றுமே… அதை நீ கொடுக்கும் இந்தப் புதுச் செருப்புகள் தரவே முடியாது அல்லவா…?”.

சின்னச்சாமியின் மகன் விக்கித்து நின்றான்.
.
.
.

Tuesday, June 8, 2010

சிங்கத்துக்கு சவால்

காட்டில் ஒரு நரி தாகத்துடன் தண்ணீருக்காக அலைந்தது.

நல்ல கோடை.

கத்திரி வெயில் வேறு.

எங்குமே தண்ணீர் கிடைக்கவில்லை.

அலைந்து அலைந்து கடைசியில் அது ஒரு தண்ணீர்ச் சுனையைக் கண்டது.

வேகமாய் அந்த நரி ஒடிப் போய் தண்ணீரைக் குடித்து தாகம் தீர்ந்ததும் அது தன் முகத்தை அந்தத் தண்ணீரில் கண்டது.

'ஆஹா... நான் தான் எவ்வளவு அழகாய் இருக்கிறேன். இந்தக் காட்டு மிருகங்கள் என்னை விட்டுவிட்டு கண்ட சிங்கத்தை எல்லாம் ராஜாவாய்க் கொண்டாடி அலைகின்றனவே....!' என்று எண்ணியபடி ஒரு பெருங் குரல் எடுத்துக் கத்தியது.

"காட்டு மிருகங்களே கேளுங்கள்... இனி நான் தான் இந்தக் காட்டுக்கு ராஜா...!".

நரியின் குரல் ஓய்வதற்குள்ளேயே மறுபக்கத்திலிருந்து ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது.

"யாரடா அது...? என்ன சொன்னாய்...?"

சிங்கத்தின் குரல் கேட்டதும் நரி மெல்லிய குரலில், "அண்ணா... தண்ணி கொஞ்சம் அதிகமாயிட்டதால உளறிட்டேன்...!  மன்னிச்சுக்கங்க அண்ணா...!" என்று சொல்லிவிட்டு ஓடியே போய்விட்டது.
.
.
.

நரமாமிசம் சாப்பிடுபவன் வீட்டு விருந்து



அது நரமாமிசம் சாப்பிடுபவர்கள் வசிக்கும் காடு.

அதில் ஒருவன் நரேன்.

அதன் தலைவர் அன்று அவன் வீட்டுக்கு விருந்துக்கு வருவதாய் இருந்தது.

மதியம் தலைவர் வந்தார்.

வீட்டினுள்ளே குழம்பு கொதிக்கும் வாசம் தூள் கிளப்பியது.

அவர் மிக சந்தோசமாய் சொன்னார்.

"தம்பி... உன் மனைவி இன்றொரு அற்புதமான விருந்தளிக்கப் போகிறாளென்றே நம்புகிறேன்...!".

நரேன் சோகமாய் பதில் சொன்னான்.

"அதில் ஒன்றும் சந்தேகமில்லை... ஆனால், இனி அவள் இல்லாமல் எப்படி வாழப் போகிறேன் என்றுதான் தெரியவில்லை...!".
.
.
.

Monday, June 7, 2010

பர்ச்சேஸ் ஆபிஸர்




நான் கோவையில் ஒரு கம்பெனியில் பர்ச்சேஸ் ஆபிஸராய் இருந்தபோது நடந்தது இது.


நான் ஒரு கம்பெனிக்கு பர்ச்சேஸ் ஆர்டர் போட வேண்டி இருந்தது.

அது ஒரு சின்ன எலக்ட்ரானிக் ஐட்டம்.

டிபார்ட்மென்டில் ஐட்டம் நெம்பர் 699 என்று கொடுத்திருந்தார்கள்.

நானும் அப்படித்தான் போட்டு அனுப்பியிருந்தேன்.

ஆனால், ஒரு வாரம் கழித்து மெட்டீரியல் வந்தபோது பார்த்தால், அவர்கள் தவறுதலாய் ஐட்டம் நெம்பர் 669-ஐ அனுப்பியிருந்தார்கள்.

பெட்டியில் சரியாய் 699 என்றிருந்தாலும் உள்ளே பொருளில் 669 என்று இருந்தது.


பார்க்க எண்கள் இரண்டும் ஒரே போலிருந்ததால் இந்தத் தவறு நடந்திருக்கக்கூடும்.

எனவே, நான் அவர்கள் தவறைச் சுட்டிக்காட்டி, இந்தக் காலதாமதத்தால் என் கம்பெனிக்கு ஏற்படும் நஷ்டம் குறித்து விளக்கமாய் ஒரு கடிதம் எழுதி, அதில் இனி பொருளை அனுப்பும் போது கவனமாய் பார்த்து அனுப்புமாறு அவர்களைப் பணித்திருந்தேன்.

ஒரு வாரம் போயிருக்கும்.

மீண்டும் அதே பொருளை எனக்கு அந்தக் கம்பெனியிலிருந்து அனுப்பியிருந்தார்கள்.

கூடவே ஒரே ஒரு வரியில் ஒரு கடிதம்.

அதில் இவ்வாறு எழுதியிருந்தது.

"தயவுசெய்து ஐட்டம் நெம்பரைத் தலைகீழாய்ப் பார்க்கவும்...!".
.
.
.

போஸ்ட் ஆபீஸிலிருந்து சொர்க்கம் வரை



ஆன்மீகச் சொற்பொழிவாளர் ஒருவர் அந்த ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒருவாரம் உரையாற்ற வந்திருந்தார்.
அன்று அவருக்கு ஊருக்குப் பணம் அனுப்பவேண்டிய ஒரு கட்டாயம்.
ஊரில் தபால் நிலையம் எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் அலைந்து கொண்டிருந்த அவர் எதிரில் வந்த ஒரு சிறுவனை நிறுத்தினார்.
“தம்பி… உன் பேர் என்ன…?”.
அவன் பதில் சொன்னான்.
“டேனி…”.
“நீ இந்த ஊரை சேர்ந்தவனா…?”.
“ஆமாம்…”.
“இங்கே தபால் நிலையம் எங்கே இருக்கிறதென்பது தெரியுமா…?”.
அச்சிறுவன் தெளிவாய்க் கூறினான்.
“நேராய்ப் போய்... மூன்றாவது வலதில் திரும்பி, அடுத்த இரண்டாவது இடதில் திரும்பினால்... இடது பக்கம் நாலாவது கட்டிடம்தான் போஸ்ட் ஆபிஸ்…!”.
“நன்றி தம்பி…” என்ற அந்தப் பெரியவர் மீண்டும் அவனை அழைத்து, “தம்பி… இன்று மாலை மாரியம்மன் கோவிலுக்கு வாயேன். சொர்க்கதிற்கு போவது எப்படி என்ற தலைப்பில் பேசுகிறேன்… உனக்கும் உபயோகமாய் இருக்கும்…!”.
“இல்லை ஐயா… நான் வரவில்லை…!”.
பெரியவர் கேட்டார்.
“ஏன் தம்பி… உனக்கு கடவுள்மீது நம்பிக்கை இல்லையா…?”.
டேனி அமைதியாய்ப் பதிலளித்தான்.
“இல்லை ஐயா… எனக்கு உங்கள்மேல்தான் நம்பிக்கை இல்லை. இதோ இங்கே இருக்கிற இந்தப் போஸ்ட் ஆபிஸுக்கே உங்களுக்கு வழி தெரியவில்லை… நீங்கள் எப்படி எனக்கு சொர்க்கதிற்கு வழி காட்டப் போகிறீர்கள்…?”.
.
.
.

Sunday, June 6, 2010

வாழும் வகை



கடலில் ஒரு பெரிய மீன் சிறிய மீனைச் சந்தித்த போது, அது அந்தச் சிறிய மீனை உண்ண வாயை மிகப் பெரிதாய்ப் பிளந்தபடி வந்தது.

சிறிய மீனோ தனது உயிர் போகப் போவதை நினைத்துப் பதறி பெரிய மீனிடம் கேட்டது.

"ஐயோ...நான் சின்னவனாய் இருப்பதால்தானே என்னை விழுங்கப் பார்க்கிறாய்.! இது நியாயமா... நீயே சொல்...!".

பெரிய மீன் நின்று நிதானமாய்ச் சொன்னது.

"நியாயமில்லைதான்... அப்படியானால் நீ என்னை விழுங்கு...!".
.
.
.

Saturday, June 5, 2010

டேனியும் நாய்க்குட்டியும்



பூமியின் காவல் தேவதை அன்று அதிசயமாய் பூலோகம் வந்திருந்தாள்.

வந்தவள் மக்களை அழைத்துச் சொன்ன செய்தியோ மகா அதிர்ச்சி அளிப்பதாய் இருந்தது.

"மானிடர்களே... இப்பூலோகம் இன்னும் சில மணிகளில் அழியப் போகிறது. உங்களில் ஏழு உயிர்களை இப்போது என்னால் காப்பற்ற முடியும். அந்த ஏழு உயிர்களும் தனக்குப் பிடித்த ஒரு பொருளைத் தன்னுடன் எடுத்துவர அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. உங்களில் யார் அந்த எழுவர் என்பதை முடிவு செய்து சற்று நேரத்தில் அனுப்பி வையுங்கள்...!"

அடுத்த முக்கால் மணி நேரத்தில் முதலாய் ஒரு தமிழ்ப் புலவர் வந்தார்.

தேவதை அவனைக் கேட்டாள்.

"யார் நீ...?".

"புலவன்...!".

"உன்னுடன் என்ன கொண்டுவரப் போகிறாய்...?".

"புத்தகங்கள் அடங்கிய ஒரு பை....!".

"சரி வா...!".

தேவதை அவனைத் தனது சிறகுகளில் அவனை ஏற்றிக் கொண்டாள்.

பிறகு... ஒரு அரசியல்வாதி தனது செலவங்கள் அடங்கிய பெட்டியுடன் வந்தான்.

அதன் பின்னால் ஒரு குடிகாரன் தனது மினி பாருடன் வந்தான்.

ஒரு உலக அழகி தனது ஒப்பனை சாதனங்களுடன் வந்தாள்.

ஒரு வியாதிக்காரன் தனது மருந்து பாட்டில்களுடன் வந்தான்.

ஒரு பக்திமான் தனது பிரியமான ஸ்வாமி படத்துடன் வந்தான்.

கடைசியாய் வந்தது ஒரு சிறுவன்.

தேவதை கேட்டாள்.

"யார் நீ...?".

சிறுவன் பதில் சொன்னான்.

"நான் டேனி...!".

"உன்னுடன் என்ன கொண்டு வந்திருக்கிறாய்...?".

"எனது செல்ல நாய்க்குட்டி பப்பி...!".

தேவதை நெற்றியைச் சுருக்கினாள்.

"தம்பி... என்னுடன் ஏழு உயிர்களை அழைத்துச் செல்லவே அனுமதி இருக்கிறது. எனவே, உன்னுடன் எடுத்துச் செல்ல வேறு ஏதாவது உயிரற்ற பொருளை எடுத்து வா...போ...!".

டேனி ஒரு கணம் யோசித்தான்.

"தேவதையே... உன்னால் ஏழு உயிர்களை அழைத்துச் செல்ல முடியுமானால்...இதோ என்னுடைய பப்பியை அழைத்துச் செல். நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்...!".

தேவதையின் கண்கள் ஒரு கணம் ஒளிர்ந்து மறைந்தது.
சற்று நேரம் கழித்து தேவதை கிளம்பும்போது அவள் சிறகில் டேனியும் பப்பியும் மட்டுமே இருந்தார்கள்.
.
.
.

Wednesday, June 2, 2010

டைட்டானிக்




டைட்டானிக் கப்பல் மூழ்கி பத்துப் பதினைந்து நிமிடம் இருக்கும்.

ஜேக்கும் ரோஸும் ஒரு வழியாய் தப்பிப் பிழைத்து, ரோஸ் ஒரு கட்டையில் ஏறி அமர்ந்திருக்கும் கடைசி நிமிடம்.

நட்சத்திரங்கள் மின்னும் இரவில், தண்ணீர் இன்னும் உறைந்து, கடல் மீன்கள் இரை தேடி அலைந்து கொண்டிருக்கின்றன.

அங்கும் இங்கும் எங்கும் மனித உடல்கள் மிதந்து கொண்டிருக்கின்றது.

ஜேக் சொன்னான்.

"இந்தப் பயணம் இப்படி, இவ்வளவு சோகமாய் முடியும் என்று நினைக்கவில்லை நான்...!".

ரோஸும் அதை ஒப்புக்கொண்டாள்.

"ஆமாம்... நான் கூட இப்படி முடியும் என்று நினைக்கவில்லை...!".

ஜேக் பரிதாபமாய்ச் சொன்னான்.

"உன்னுடையதைவிட என்னுடைய சோகம் பெரியது ரோஸ்...!".

ரோஸுக்கு குழப்பம்.

ஒரே கப்பலில் பயணித்து, ஒரே மாதிரி மூழ்கி, ஒரே மாதிரிப் பிழைத்திருக்கிறோம். இதில் இவனுக்கு மட்டும் என்ன அதிகமான சோகம்...?

குழப்பத்துடனே ரோஸ் கேட்டாள்.

"எப்படி...?".

ஜேக் இன்னும் பரிதாபமாய்ச் சொன்னான்.

"நான் ரிடர்ன் டிக்கட் வேறு வாங்கி வைத்திருக்கிறேன்...!".
.
.
.

Tuesday, June 1, 2010

ஊய்... ஊய்...!


ராக்கேஷுக்கு எதிர்பாராத ஒரு ஆக்ஸிடண்ட்டில் ஒரு கை போய்விட்டது.

அவனுக்கு அதனால் நிறையப் பிரச்சினைகள்.

நினைத்தபடி கார் ஓட்டமுடியவில்லை.

கிடார் வாசிக்க முடியவில்லை.

தண்ணி அடிக்கும் போது கிளாஸைக் கீழே வைக்காமல் ஊறுகாயை எடுத்து ஒரு ஓட்டு ஓட்ட முடியவில்லை.

ராக்கேஷால் எதைச் சகித்துக் கொண்டாலும் இந்தக் கடைசிக் காரணத்தை மட்டும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

எனவே, அவன் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தான்.

அதைச் செயல்படுத்த முடிவு செய்து ஏழாவது மாடி ஜன்னலில் ஏறி குதிக்க எத்தனிக்கும் போது தான் அதைப் பார்த்தான்.

கீழே ஒருவன் இரண்டு கைகளும் இல்லாமல் சந்தோஷமாய் குதித்துக் குதித்து ஓடிக் கொண்டிருந்தான்.

ராக்கேஷுக்கு ஒரு கணத்தில் மனது மாறிப்போனது.

'அட... இரண்டு கைகளும் இல்லாதவனே இவ்வளவு குஷியாய் இருக்கும் போது நாம் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்...?'

இதை நினைத்ததும் ஜன்னலிலிருந்து கீழே இறங்கிய ராக்கேஷ், தன் உயிரை சரியான சமயத்தில் காப்பாற்றிய அந்த மனிதனை சந்தித்து நன்றி சொல்ல வேகமாய்க் மாடியிலிருந்து இறங்கி ஓடினான்.

கீழே வந்து பார்த்தால், அவன் குதித்துக் குதித்து ஓடியதோடு அல்லாமல் "ஊய்... ஊய்...!" என்று சப்தம் எழுப்பியவாறு உற்சாகமாய் ஓடிக் கொண்டிருந்தான்.

ராக்கேஷுக்கோ ஆச்சர்யம் உச்சத்திற்கே போய்விட்டது.

'எப்படி ஒரு மனிதனால் இரண்டு கைகளும் இல்லாமல் இவ்வளவு உற்சாகமாய் இருக்கமுடிகிறது...?'

ராக்கேஷ் அவனை மறித்து அதைக் கேட்டும் விட்டான்.

அவனோ ராக்கேஷிடம் எரிச்சலுடன் பதில் சொன்னான்.

"யாருப்பா சந்தோஷமா இருக்கேன்னு சொன்னது...? நானே உட்கார்ற இடத்துல அரிக்குதுனு சொறிஞ்சுவிட ட்ரை பண்ணிட்டுருக்கேன்... நீ வேற கடுப்பக் கிளப்பிக்கிட்டு...!" என்றவன் திரும்பவும், "ஊய்... ஊய்...!" என்று சப்தம் எழுப்பியபடி வேகமாய் ஓட ஆரம்பித்தான்.
.
.
.