Showing posts with label செருப்பு. Show all posts
Showing posts with label செருப்பு. Show all posts

Monday, October 4, 2010

தலையில் நின்ற செருப்பு

செனகா என்பவர் பித்தாகரசின் சீடர்.

அவர் தனது செருப்புகள் தேய்ந்து போனதால், செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் ஒரு ஜோடி செருப்புக்காக அளவு கொடுத்திருந்தார்.

செனகா அதைப் பெற்றுக்கொள்ளச் சென்ற அன்று, கையில் பணம் இல்லாததால்... அடுத்த வாரம் கூலிப்பணம் தருவதாகச் சொல்லி, கடனாக அந்த ஜோடிச் செருப்பைப் பெற்றுக் சென்றார்.

ஒரு வாரம் கழிந்தது.

செனகா அந்தப் பாக்கிப் பணத்தைக் கொடுக்கச் சென்றபோது, அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி இறந்து போயிருந்தார்.

தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக் கொண்டே சப்தமில்லாமல் திரும்பிவிட்டார் செனகா.

அடுத்த ஒரு வாரமும் நத்தையாய் நகர்ந்தது.

ஒவ்வொரு நாளும் குற்ற உணர்வில், உள்ளுக்குள்ளேயே குறுகிக் கொண்டிருந்தார் செனகா.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர்...

ஒருநாள் பொறுக்க முடியாமல், அந்த செருப்புக் கடைக்குப் போய், ஆவேசமாகப் பணத்தை வீசிவிட்டுக் கத்தினார்.

"தொலைந்து போ! ஊருக்கெல்லாம் செத்துப் போன நீ, எனக்கு மட்டும் ஒரு வாரமாய் உயிரோடிருந்தாய்...!".
.
.
.

Wednesday, June 9, 2010

சின்னச்செருப்பு சின்னச்சாமி



சின்னச்செருப்பு சின்னச்சாமி என்பது அவன் பெயர்.

அவன் ரொம்ப காலமாய் தன் காலுக்கு பத்தாத செருப்பைப் போட்டுக் கொண்டே அலைவான்.

செருப்பு சின்னதாய் இருப்பதால் அது அவன் கால்களைக் கடித்துக் கொண்டே இருக்கும்.

கால்கள் புண்ணாகி வீங்கி அவனைக் கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்கும்.

அதைப் பற்றி அவன் கவலைப் பட்டதேயில்லை.

காலங்கள் உருண்டோடின.

அவனுக்குத் திருமணமாகி மகனும் பிறந்தான்.

அவன் மாறவேயில்லை.

பையன் வளர்ந்து படிப்பை முடித்து வேலைக்கும் போக ஆரம்பித்துவிட்டான்.

அவனுக்கும் ஒரே ஆசைதானிருந்தது.

அது... தன் அப்பாவுக்கு சரியான அளவில் ஒரு செருப்பு வாங்கிக் கொடுக்கவேண்டும் என்பதுதான்.

அவன் தன்னுடைய முதல் சம்பளத்திலேயே சின்னச்சாமிக்கு ஒரு ஜோடி புதுச் செருப்பைச் சரியான அளவில் வாங்கி வந்தான்.

சின்னச்சாமியோ அதைப்போட ஒரேயடியாய் மறுத்துவிட்டான்.

“எனக்கு இந்தச் செருப்பு வேண்டாம் மகனே… என்னுடைய அளவு குறைந்த செருப்புகள் கொடுக்கும் நிம்மதியை இந்தச் சரியான செருப்பால் தரவே முடியாது…!”.

மகன் குழப்பத்துடன் கேட்டான்.

“அது எப்படி அப்பா… சரியான அளவுச் செருப்புகளை விட கால்களைக் கடித்து துன்புறுத்தும் அந்த அளவு குறைந்த செருப்புகள் எப்படி உங்களுக்கு நிம்மதியைக் கொடுக்க முடியும்…?”.

சின்னச்செருப்பு சின்னச்சாமி ஒரு மெல்லிய புன்முறுவலோடு பதில் சொன்னான்.

“மகனே… எனது செருப்புகள் காலைக் கடிகின்றன என்பது உண்மைதான். அதனால் என் கால்கள் புண்ணாகினறன என்பதும் உண்மைதான். ஆனால், வீட்டுக்கு வந்து செருப்பைக் கழட்டிவிட்டதும் ‘அப்பாடா…!’ என்றொரு நிம்மதி தோன்றுமே… அதை நீ கொடுக்கும் இந்தப் புதுச் செருப்புகள் தரவே முடியாது அல்லவா…?”.

சின்னச்சாமியின் மகன் விக்கித்து நின்றான்.
.
.
.