Showing posts with label புன்னகை. Show all posts
Showing posts with label புன்னகை. Show all posts

Wednesday, December 1, 2010

அவ்வளவுக்கவ்வளவு

துறவியிடம் அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

"ஸ்வாமி... நானும் கடவுளும் ஒன்றிணைவது என்பது எப்போது நடக்கும்..? எனக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் தூரம் எவ்வளவு..? "

துறவி சொன்னார்.

"நீ கடவுளுடன் இணைவதை எவ்வளவுக்கெவ்வளவு கடினம் என்று நினைக்கிறாயோ... அவ்வளவுக்கவ்வளவு உனக்கும் கடவுளுக்கும் தூரம் அதிகமாகும்..?".

அவன் தொடர்ந்து கேட்டான்.

"ஸ்வாமி... நான் அந்த தூரத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும்..?"

"நீ அந்த இடைப்பட்ட தூரத்தை இல்லை என்று கருதுவாயானால், அது இல்லாமல் போய்விடும்...".

அவன் குழப்பத்துடன் மீண்டும் கேட்டான்.

"அவ்வாறு கருதினால், நானும் கடவுளும் ஒன்று என்றாகிவிட முடியுமா..?".

துறவி சிரித்தபடி சொன்னார்.

"அப்போதும்கூட நீயும் கடவுளும் ஒன்றல்ல... அதே சமயம் வெவ்வேறும் அல்ல...!".

அவன் மேலும் குழம்பியவனாய்க் கேட்டான்.

"அதெப்படி ஸ்வாமி முடியும்...?".

துறவி தனது புன்னகை மாறாமல் பதில் சொன்னார்.

"அது அப்படித்தான். எப்படியென்றால், இதோ நீ பார்க்கும் கடலும் அதன் அலையும், சூரியனும் அதன் கதிரும், ஒரு பாடகனும் அவனது பாடலும் ஒன்றல்ல... அதே சமயம் வெவ்வேறும் அல்ல...!".
.
.
.

Tuesday, August 17, 2010

எல்லாமே இலவசம்

துறவி ஒருவர் தன்னுடைய சிஷ்யர்களுக்கு பொறுமையைப் பற்றிக் கற்றுக் கொடுக்க ஒரு புதுமையான ஏற்பாடு செய்திருந்தார்.

அவருடைய சிஷ்யர்கள் யாரும் ஒரு வருடத்திற்கு ஊரைவிட்டு வெளியே செல்லக் கூடாது.

அது மட்டுமல்ல... அவருடைய சிஷ்யர்களை யாரும் நிந்தித்தாலோ அடித்தாலோ கோபப் படக்கூடாது.

மேலும், நிந்தித்தவர்களுக்கு அந்த சிஷ்யர்கள் பரிசுப் பணமும் தர வெண்டும்.

அதுவும் இந்த ஊரில் மட்டும்தான்.

சிஷ்யர்கள் ஊருக்குள் வரும்போது அந்த குருவுக்காக அவர்களை வணங்குபவர்கள் எப்படி இருந்தார்களோ அதேபோல் திட்டுபவர்களும் இருந்தார்கள்.

சிஷ்யர்கள் எப்படி வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்களோ அதேபோல் திட்டுபவர்களையும் பொறுத்துக் கொண்டதோடு அவர்களுக்கு குருவின் சொல்படி பரிசுப் பணமும் கொடுத்து வந்தார்கள்.

இப்படியே இந்த ஊரில் ஒரு வருடம் கழிந்தது.

சிஷ்யர்கள் இப்போது பக்கத்து ஊர்களுக்கும் செல்ல ஆரம்பித்தார்கள்.

அங்கேயும் இவர்களிடம் வாழ்த்துப் பெற வந்தவர்களும் இருந்தார்கள்... திட்ட வந்தவர்களும் இருந்தார்கள்.

ஆனால், வந்தவர்கள் எவ்வளவு திட்டினாலும் அவர்கள் அதைச் சந்தோசமாய் ஏற்றுக் கொண்டு சிரித்தபடியே இருப்பதைப் பார்த்தவர்கள், 'இவர்களுக்குத்தான் எவ்வளவு ஞானம்...?' என்று வியந்து போனார்கள்.

இதை பார்த்துக் கொண்டே இருந்த ஒருவர், ஒருநாள் தாங்க முடியாமல் ஒரு சிஷ்யரிடம் கேட்டார்.

"எப்படி உங்களால் இத்தனை திட்டுக்களையும் கோபம் இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடிகிறது...?".

அதற்கு அந்த சிஷ்யர், அவரிடம் புன்னகை மாறாமல் சொன்னார்.

"முன்பெல்லாம் நாங்கள் இதற்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தோம்... இப்போதெல்லாம் இது எங்களுக்கு இலவசமாகவே கிடைக்கிறது...."

ஞானம் பெறுவது எவ்வளவு சுலபம் பாருங்கள்...?
.
.
.