Thursday, July 15, 2010

அன்பே சிவம்

வாரப் பத்திரிக்கை ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டம் அது.
'நிகழ்காலத்தில் ஏழ்மை' என்ற தலைப்பில் பொதுமக்கள் பேச மேடை அமைத்திருந்தது அந்தப் பத்திரிக்கை.
கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் ஏழ்மை பற்றி உருக்கமாய் ஏகப்பட்ட செய்திகளைப் பகிர்ந்து கொண்டாலும் அங்கு வந்திருந்த ஒரு பெரியவர் சொன்ன உண்மைக் கதை எல்லோர் கண்ணிலும் கண்ணீரை வரவைத்துவிட்டது.
அவர் சொன்னது...
"எங்கள் ஊரில் நல்லசிவம் என்றொருவர் இருக்கிறார்.
அவருக்குக் காச நோய்.
அவர் மனைவிக்கோ புற்றுநோய்.
அவருக்கு எட்டு குழந்தைகள்.
அதில் முதல் குழந்தை ஊனம்...மூன்றாவது குழந்தை குருடு...
நான்காவது குழந்தைக்கோ மனவளர்ச்சியில்லை.
நல்லசிவம் தன் குடும்பத்தின் மருத்துவச் செலவுக்காக கடன் வாங்கி, கடன் வாங்கி... அதைக் கட்ட முடியாமல் ஒரு கட்டத்தில் குடும்பத்துடன் கொத்தடிமையாக வேலை செய்ய ஆரம்பித்தார்.
இருபது வருடங்களுக்கு மேலாயிற்று.
இன்னும் கடன் அடையவில்லை.
இதில் இரண்டு பெண்களின் திருமணம் வேறு.
நல்லசிவம் நன்றாக மாட்டிக் கொண்டார்.
கடன் கழுத்தை நெரித்தது.
வட்டியோ தலைமீது ஏறிப் பேயாட்டம் போட்டது.
இப்போது அவர்கள் வீட்டு வாடகை கட்டமுடியாமல் விழி பிதுங்கிக் கிடக்கிறார்கள்.
நீங்கள் எல்லோரும் கொஞ்சம் பண உதவி செய்தால் அவர்கள் தப்பிக்க கொஞ்சம் வழி இருக்கிறது...!"
பெரியவர் மேலும் சொல்லச் சொல்ல கூட்டம் கண்களைக் கசக்கி கொள்ள ஆரம்பித்தது.
அப்போது, தாங்கமுடியாத துன்பத்தோடு ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார்.
"அய்யா... ஒரு பாவப்பட்ட குடும்பத்தின் மீது இவ்வளவு அக்கறையும் பரிவும் கொண்டு பேசுகிறீர்களே நீங்கள் யார்...?".
அந்தப் பெரியவர் கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்தபடி அமைதியாய் நிதானமாய்ச் சொன்னார்.
"அய்யா... நான் அந்த ஊரின் ஜமீன்தார். அந்த நல்லசிவம் குடும்பம் என்னிடம்தான் வேலை செய்கிறது...!".

2 comments:

Unknown said...

கொல்லணுமய்யா இவனுகளை...!

"தாரிஸன் " said...

haio.......haio....

Post a Comment