Showing posts with label வார்த்தை. Show all posts
Showing posts with label வார்த்தை. Show all posts

Monday, February 21, 2011

ஒரு வார்த்தைக்கு என்ன எடை..?

பாரசீகக் கவிஞரும் ஞானியுமான ஷாஅதி ஏதோ ஒரு விஷயமாக அந்தப் பயில்வானைப் பார்க்க அந்த ஊருக்கு வந்திருந்தார்.

பயில்வானோ ஒரு அற்புதமான பயில்வான்.

எவ்வளவு எடை வேண்டுமானாலும் தூக்குவார்... நாட்டில் அவருடன் எடை தூக்கும் போட்டியில் அவரை யாரும் வென்றதும் கிடையாது.

எப்போதும் அவருடன் போட்டியிட்டு எவரும் இதுவரை ஜெயித்ததும் கிடையாது.

ஷாஅதி அவரைப் பார்க்க வந்தபோது பயில்வான் மிகுந்த கோபத்துடன் இருந்தார்.

வீட்டின் உள்ளே, கோபமாய் அவர் குரலும் பாத்திரங்கள் விழுந்து உடைவதுமாய் சப்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தது.

ஷாஅதி என்ன விஷயமென்று பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தார்.

அவர் சொன்னார்.

"பக்கத்து ஊரில் யாரோ பயில்வானை கேவலமாய்ப் பேசி விட்டார்களாம். அதைக் கேள்விப்பட்டு பயில்வான் பயங்கர கோபமாகிவிட்டார். அப்போதிருந்து இப்படித்தான் வீட்டுக்குள் சப்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறது..!".

அதைக் கேட்ட ஷாஅதி அந்தப் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொன்னார்.
 
"எவ்வளவோ பயங்கரமான எடைகளைத் தூக்கிய இந்த பயில்வானால், கேவலம் யாரோ சொல்லிய ஓரிரு வார்த்தைகளின் கனத்தைத் தாங்க முடியவில்லையா...? ஐயோ பாவம்..!" என்றாராம்.
.
.
.

Monday, July 5, 2010

கடவுளின் குழந்தை

டேனியை சமீபத்தில் தான் அந்த நர்சரிப் பள்ளியில் சேர்த்திருந்தேன்.

பள்ளியில் ஒரு புது மாதிரியாய் மேக்னட்டில் ஆங்கில எழுத்துகளைப் ப்ரிண்ட் பண்ணி, டேபிள் போர்டுகளில் ஒட்டவைத்து விளையாடியபடியே வார்த்தைகளை கற்றுக்கொள்ள சொல்லிக் கொடுக்கிறார்கள்.

டேனியும் இப்போது வித விதமாய் வார்த்தைகளை வடிவமைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான்.

வீட்டிற்கு வந்ததும் சி ஏ டி...கேட், டி ஓ ஜி...டாக், டி ஏ டி..டேட்,எம் ஓ எம்..மாம் - போன்ற ஆங்கில வார்த்தைகளை ஃபிரிட்ஜ்-ல் ஒட்டி விளையாடுவான்.

என்னிடமும் தவறாமல், "பாத்தியா...நான் என்ன ஒட்டிருக்கேன்னு...?" என்று மழலை மாறாமல் கேட்பான்.

அன்றும் அப்படித்தான்...

அவசரமாய் வெளியே கிளம்பிக் கொண்டிருந்த நேரம்.

நான் வேகவேகமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தபோது, அவன் உற்சாகமாய் அந்த மேக்னட் எழுத்துக்களை எடுத்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

நான் பார்த்ததும்,"அம்மா பாத்தியா...நான் என்ன ஒட்டிருக்கேன்னு...?"

நான் பார்த்தபோது, அவன் கையில் 'ஜி ஓ டி.. காட்' என வைத்திருந்தான்.

பரவாயில்லையே... இந்த நர்சரியில் நல்ல நல்ல வார்த்தைகளைச் சொல்லித் தருகிறார்களே என்று எண்ணியபடியே கிளம்பும் அவசரத்தில் அவனிடம், " சூப்பர் டேனி... ஓடிப்போய் ஃபிரிட்ஜ்-ல ஒட்டிவச்சுட்டு வா... சாயங்காலம் அப்பா வந்தா பாக்கட்டும்....!" என்றேன்.

டேனி உள்ளே போய் சற்று நேரத்தில் குரல் மட்டும் கேட்டது.

"அம்மா... இதுக்கப்புறம் 'ஜில்லா'க்கு என்ன ஸ்பெல்லிங் வரும்...?".
.
.
.

Friday, April 16, 2010

ஜில்லுனு ஒரு சாப்பாடு...



நாராயணன் ஒரு மேடைப் பேச்சாளர்.

அவர் இறந்ததும் சொர்க்கத்துக்குப் போனார்.

சித்திரகுப்தன் அவரை அழைத்து, "தம்பி... நீ ரொம்ப நல்லவன்.அதனால உனக்கு சொர்ர்க்கம் கிடச்சிருக்கு. ஆனாலும் உனக்கு இங்கே ஒரு தண்டனை இருக்கு. அதுக்கு ஒத்துக்கிட்டீனா இங்கேயே எவ்வளவு வருசம் வேணும்னாலும் இருக்கலாம். என்ன சொல்லற..?".

நாராயணன் கேட்டார்.

"சொர்க்கத்துல இருக்கறதுன்னா என்ன தண்டனைனாலும் சரி. என்ன தண்டனைனு மட்டும் சொல்லுங்க போதும்..!".

சித்திரகுப்தன் பதில் சொன்னார்.

" நீ பூலோகத்துலயே வேண்டிய அளவு பேசிட்டதால இங்கே இருக்கற வரைக்கும் என் அனுமதி இல்லாம ஒரு வார்த்தைகூட பேசக் கூடாது. நான் எப்ப எவ்வளவு பேசலாம்னு சொல்றனோ... அப்ப அவ்வளவு பேசலாம். இது பிடிக்கலைனா எப்ப வேணும்னாலும் கிளம்பலாம். என்ன சொல்ற...?"

பேச்சாளனை பேசக்கூடாது என்பது எவ்வளவு பெரிய கொடுமை.
 
ஆனாலும் நாராயணன் அதை சொர்க்கம் என்பதற்காக ஒத்துக் கொண்டார்.
 
அதன் பிறகு ஐந்து வருடங்கள்... நாராயணன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் சொர்க்கத்தில் வாழ்ந்தார்.
 
ஐந்தாவது வருட முடிவில் சித்திரகுப்தன் அவர் முன் தோன்றி, "தம்பி... நீ சொர்க்கத்திற்கு வந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. நீ இப்போது நாலு வார்த்தைகள் பேசலாம்...!".
 
நாராயணன் ரொம்ப யோசித்து, "மெத்தை கல்லைப் போல் இருக்கிறது...!" என்றார்.
 
அதற்கு சித்திரகுப்தன்,"உடனே, இதைச் சரி செய்யச் சொல்கிறேன்...!" என்று மறைந்தார்.
 
அதற்கு அப்புறம்  மீண்டும் ஐந்து வருடங்கள் ஓடி விட்டது.
 
திரும்ப சித்திரகுப்தன் வந்தார்.
 
"தம்பி... நீ சொர்க்கத்திற்கு வந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. நீ இப்போது மறுபடி நாலு வார்த்தைகள் பேசலாம்...!".
 
நாராயணன் முன்பைவிட ரொம்ப யோசித்து, "சாப்பாடு ரொம்ப ஜில்லுனு இருக்கு...!" என்றார்.
 
அதற்கு சித்திரகுப்தன்,"உடனே, இதைச் சரி செய்யச் சொல்கிறேன்...!' என்று மறைந்தார்.
 
இப்படியே நாராயணன் சொர்க்கத்திற்கு வந்து பதினைந்தாவது வருடமும் முடிந்துவிட்டது.

இதுவரை எட்டு வார்த்தைகள்தான் பேசியிருக்கிறார். என்ன கொடுமை இது..? இதற்கு நரகமே மேலாய் இருக்கும் போலிருக்கிறதே...!
 
நாராயணன் மிகவும் வெறுத்துப் போயிருந்தார்.
 
இந்தமுறை சித்திரகுப்தன் வந்து திரும்பவும் வந்து, "தம்பி... நீ சொர்க்கத்திற்கு வந்து பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டன. நீ இப்போது மீண்டும் நாலு வார்த்தைகள் பேசலாம்...!".
 
வெறுத்துப் போயிருந்த நாராயணனோ கோபமாய், "நான் சொர்க்கத்தை விட்டுக் கிளம்புகிறேன்...!" என்றார்.
 
அதற்கு சித்திரகுப்தன், "ஆமாம்...ஆமாம்...  அதுதான் நல்லது. நானும் வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்.. நீ  விடாமல் சொர்க்கத்தை பற்றிக் குறை கூறிக் கொண்டே இருக்கிறாய்... கிளம்பு கிளம்பு...!" என்றார்.
.
.
.