Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Wednesday, September 18, 2013

நாளைக்கு மழ வருமுங் ஸாமீயோவ்…


டைரக்டர் முனிரத்தினத்தின் புதிய பட ஷூட்டிங் அந்த அடர்ந்த கானகத்தின் உள்ளே நடந்து கொண்டிருந்தது.

படத்தின் ஒரு காட்சிக்காக குடிசைகள் போட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த ஒரு ஆதிவாசி,"குடிசை போடாதீங்க ஸாமீ... நாளைக்குப் புயல் வருமுங்க..!" என்று சொல்லிவிட்டுப் போனார்.

எதற்கும் பார்ப்போமே என்று முனிரத்னம் வேலையை நிறுத்திவிட்டுப் பார்க்க…

சொன்னது போலவே, மறுநாள்  கடும்புயல் அடித்து... அது போட்டிருந்த ஒன்றிரண்டு குடிசையையும் அடித்து துவம்சம் செய்துவிட்டுப் போனது.

இன்னும் சில நாட்கள் போயிருக்கும்.

ஆற்றங்கரையோரம் கோயில் ஒன்று செட் போட்டுக் கொண்டிருக்கும்போது அந்தப்பக்கமாய் வந்த அதே ஆதிவாசி,"நாளைக்கு பெருமழை இருக்கு ஸாமீயோவ்...! ஆத்துல வெள்ளம் வந்தாலும் வருமுங்க.." என்று சொல்லிவிட்டுப் போனார்.

சொன்னதுபோல், மறுநாள் மழை கொளுத்த ஆரம்பித்தது.

 மூன்று நாளும் விடாது பெய்து, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
'ஆதிவாசிகள் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள் என்பது தெரியும். அதற்காக இப்படியா..?' டைரக்டர் முனிரத்தினம் மிரண்டு விட்டார்.

அவர் தன்னுடைய உதவியாளர்களை கூப்பிட்டு "இந்த மனுசனை புடிச்சு வச்சிக்கங்கப்பா. நம்ம ஷூட்டிங் முடியற வரைக்கும் நமக்கு யூஸ்ஃபுல்லா இருப்பான்...!".

டைரக்டர் சொன்னபடி, அந்த ஆதிவாசியும் மிகச்சரியாக காலநிலைகளைக் கணித்துச் சொல்ல… இவர்கள் அந்த ஆதிவாசி சொன்னதற்கேற்ப ப்ளான் செய்து ஷூட்டிங்கை விறுவிறுவென நடந்து கொண்டிருந்தார்கள்.

அன்று மேக்சிமம் ஸ்டாரின் கால்ஷீட். காட்சியோ உச்சபட்ச வெயில் வேண்டிய காட்சி. நாளைய சீதோஷ்ணம் எப்படியிருக்கும் எனத் தெரிந்துகொள்ள, டைரக்டர் அந்த ஆதிவாசியை அழைத்துக் கேட்டார்.

"நாளைக்கு கிளைமேட் எப்படியிருக்கும்..?".

டைரக்டர் கேட்டதும் அந்த ஆதிவாசி தன் தோள்களைக் குலுக்கியவாறே சொன்னார்.

"தெரியாதுங் ஸாமீ..!".

ஆதிவாசியின் பதிலால் ஆச்சர்யமாகிப்போன டைரக்டர் முனிரத்தினம் கேட்டார்.

"தெரியாதா... ஏன் தெரியாது..?".

கேட்ட டைரக்டரின் முகத்தைப் பார்த்து அப்பிராணியாய் அந்த ஆதிவாசி சொன்னார்.

"நேத்து ரேடியோப் பொட்டி கீழவிழுந்து ஒடஞ்சுபோச்சுங் ஸாமீயோவ்..!".
.
.
.


Friday, December 10, 2010

மழையின் காரணமாக பள்ளி விடுமுறை

மழையின் காரணமாக விடுமுறை என்பதால், இரண்டாம் வகுப்புப் படிக்கும் என் மகன் டேனியை ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு திரும்ப அழைத்து வந்து கொண்டிருந்தேன்.

எதிர்பாராத விடுமுறை என்பதால் மிகுந்த சந்தோஷத்துடன் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தவன், அந்த டெலிபோன் கம்பங்களைப் பார்த்ததும் திடீரென என்னிடம் திரும்பிக் கேட்டான்.

"ஏம்மா... அந்த வயர்ல எல்லாம் கரண்ட் போகுதாம்மா..?".

நான் தமிழ் படித்தவள்.. கல்லூரியில் விரிவுரையாளர்.

எனக்கு அது டெலிபோன் சம்பந்தமான கம்பங்கள் என்று தெரியுமேயொழிய, அதில் கரண்ட் போகுதா... இல்லை, வெறும் சிக்னல்கள் மட்டும் போகுதா என்பது தெரியாது என்பதால் சொன்னேன்.

"எனக்கு சரியாத் தெரியலையேடா...!".

டேனி ஒன்றும் சொல்லாமல், அவனது சாலையோர விளையாட்டுகளில் கவனம் ஆனான்.

கொஞ்ச நேரம்தான்... இப்போது ஒரு சரியான மின்னலைத் தொடர்ந்து இடி இடிக்க அடுத்த கேள்வியைக் கேட்டான்.

"ஏம்மா... இந்த மின்னல், இடி எல்லாம் எப்படிம்மா வருது..?".

உண்மையில் எனக்கு சந்தேகமாக இருந்ததால் அவனிடம் சொன்னேன்.

"எனக்குத் தெரியலையேடா...!".

அடுத்து "ஓணான்ல கேர்ள்ஸ்னு எப்படிம்மா தெரிஞ்சுக்கறது..?" போல அவனது சந்தேகங்கள் எல்லாம் விதவிதமாய், வீடு வந்து சேரும்வரை வந்து கொண்டே இருந்தாலும், நான் சொன்ன பதில் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

"எனக்குத் தெரியலையேடா...!".

'எப்படித்தான் இவனுக்கு இத்தனை சந்தேகங்கள் வருது... தெரியலையே?' என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறக்கையில் அவன் கேட்டான்.

"ஏம்மா... நான் ரொம்ப கேள்வி கேட்டு உன்னைத் தொந்தரவு பண்ணறேனா..?".

டேனி கேட்டதும் சந்தோஷமாய்,"இல்லைடா கண்ணா...!" என்று சொன்னவள் தொடர்ந்து சொன்னேன்.

"நீ நிறைய கேள்விகள் கேட்டாத்தான், நிறையா கத்துக்க முடியும்...!".
.
.
.