Tuesday, October 19, 2010

சுந்து என்கிற சுந்தரன்

அது ஒரு சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே.

ஒரு சிறுவனைக் குழந்தைகள் உட்காரும் இடத்தில் வைத்து ட்ராலியைத் தள்ளியபடி பொருட்களை எடுத்து வண்டியின் உள்ளே போட்டுக் கொண்டிருந்தார் அவனுடைய அப்பா.

அந்த வண்டி ஒரு ஸ்வீட் ரேக்கின் அருகே வரும் போது அந்தச் சிறுவன்,"அப்பா சாக்லேட்..." என்றான்.

"ம்ஹூம்..!" என்றவாறு அப்பா ட்ராலியைத் தள்ள...

"எனக்கு அந்த சாக்லேட் வேணும்... வேணும்...!" என்று பெருங்குரல் எடுத்துக் கத்த ஆரம்பித்தான் சிறுவன்.

கோபமாய் திரும்பிய அவன் அப்பா, ஒரு விநாடியில் தன்னைக் கன்ட்ரோல் செய்து கொண்டு கனிவாய்ச் சொன்னார்.

"நோ சுந்தர் நோ... இன்னும் ரெண்டு மூணு ரேக்தான்... முடிஞ்சது... வெயிட் பண்ணு..!" என்று சொல்லிக் கொண்டே ட்ராலியை அந்த இடத்தை விட்டு வேகமாய்த் தள்ளிக் கொண்டு அடுத்த வரிசைக்குப் போனார்.

சற்று நேரம்தான்.

ட்ராலி ஐஸ்க்ரீம் இருக்கும் பக்கம் போனதும் பையன் அடுத்த அட்டாக்கை ஆரம்பித்தான்.

"அப்பா ஐஸ்க்ரீம்...!".

அப்பா இப்போதும், "ம்ம்ஹூம்..!" என்றபடி ட்ராலியைத் தள்ள...

"ஐஸ்க்ரீம் வேணும்...!" என்று பையன் பிடிவாதமாய்க் கத்த ஆரம்பித்தான்.

"ஏற்கனவே சளிப் பிடிச்சிருக்கு.. இப்ப ஐஸ்க்ரீம் வேண்டாம்..!"என்றபடி ட்ராலியை அடுத்த வரிசைக்குத் திருப்பினார்.

பையன் இப்போது அதிக சப்தமாய், "எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்...ஐஸ்க்ரீம் வேணும்..." என்று அழுக ஆரம்பித்தான்.

இன்னும் டென்ஷனான அப்பா பல்லைக் கடித்துக் கொண்டு தணிந்த குரலில் சொன்னார்.

"சுந்தர் இன்னும் பத்து நிமிஷம்தான்... இப்ப முடிஞ்சுடும்..!" என்றபடி ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வர வர பையனுடைய அழுகை கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைய ஆரம்பித்தது.

ட்ராலி பில் போடும் வரிசையில் நிற்கும்போது பையன் 'சிக்லெட்' கேட்க ஆரம்பித்திருந்தான்.

அப்போதும் அவனுடைய அப்பா, அந்தச் சிறுவனை ஆறுதல் படுத்தும் தொனியில் மெதுவான குரலில் சொன்னார்.

"நோ சுந்தர்.. இன்னும் ரெண்டு மூணு நிமிஷத்தில வெளியே போயிடுவோம். அதுக்கப்புறம் அஞ்சு நிமிஷத்தில வீட்டுக்கு போயிடுவோம். வீட்டுக்குப் போனதும் நல்ல ஒரு டிபன், அப்புறம் சூடா ஒரு கப் காப்பி... எதுவாயிருந்தாலும் அப்புறம்தான்.!".

அப்பா சொல்லிய பிறகும் விடாமல் 'சிக்லெட்' கேட்டுக் கொண்டே இருந்தான் சிறுவன்.

பில் போட்டு முடித்து காரை நெருங்கும்போது இதையெல்லாம் பார்த்துக் கொண்டே வந்த ஸ்ரீராம் அந்த அப்பாவை நெருங்கிச் சொன்னார்.

"ஹலோ.. நானும் முழுக்க உங்களை கவனிச்சுட்டே இருந்தேன். இந்தக் குட்டிப் பையன் சுந்தரை அழகா ஹேண்டில் பண்ணினீங்க... நல்ல பொறுமை உங்களுக்கு.. சூப்பர்..!".

கேட்டுக் கொண்டிருந்த அந்த அப்பா சொன்னார்.

"ஹையோ சார்... நீங்க வேற, நாந்தான் சுந்தர். இன்னேரம் நான் என்னைத்தான் கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருந்தேன். இதோ என்னை டென்ஷன் பண்ணிட்டே இருக்கானே என் பையன்.. இவன் பேரு டேனி...!".
.
.
.

7 comments:

SRK said...

Good one.

சென்ஷி said...

அய்யய்யோ :))

Radhakrishnan said...

ஹா ஹா!

Unknown said...

அருமையான கதை

RAVI said...

ம்ம்ம்ம்...
டாய் ரவி கம்முனு இரு.

Ganesh Gopalasubramanian said...

@Ravi lol ;)

Satish said...

good one. i like the twist.

Post a Comment