Tuesday, April 26, 2011

தில்லுதுரயின் பி.ஏ.



தில்லுதுரயின் உயிருக்குயிரான நண்பரும் தனது அந்தரங்க காரியதரிசியுமான டேவிட், அன்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே இறந்து போனார்.

தில்லுதுர தனது கம்பெனி சம்பந்தமான முடிவுகளாகட்டும் தொடங்கி அடுத்த நாள் மீட்டிங்கிற்கு என்ன உடை உடுத்துவது வரை டேவிட்டின் அட்வைஸ் இல்லாமல் செய்ய மாட்டார்.

எனவே, டேவிட்டின் இடத்துக்கு வருவதற்கு, அலுவலகத்தில் அடுத்த தகுதியுள்ளவர்களிடையே ஒரு பெரும் போட்டி சத்தமில்லாமல் நடந்து கொண்டிருந்தது.

இந்தப் போட்டி பற்றித் தெரிந்தபோது, தில்லுதுர மனது உடைந்து போனார்.

நண்பன் இறந்த சோகத்தைவிட இது பெரியதாய் இருந்தது தில்லுதுரக்கு.

"ஒரு மனிதனைப் புதைக்கும் வரை காத்திருக்கும் நாகரீகம் கூடவா இல்லை நம் மனிதரிடம்..!" என்று தில்லுதுர மனம் வெதும்பிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

மாலையில் கல்லறையில் புதைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.

நண்பனைப் புதைப்பதற்காக, தோண்டிக் கொண்டிருக்கும் குழியை சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தில்லுதுரயிடம், ஆர்வமாய் வந்த ஒரு வேலையாள் கூப்பிட்டார்,"சார்...!".

ஒன்றுமே பேசாமல் வெறுமையாய் திரும்பிய தில்லுதுரயிடம் அவர் கேட்டார்.

"சா.. சார்..! எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தீங்கன்னா நான் டேவிட்டோட இடத்துல சர்வ் பண்ண ஆசைப்படறேன் சார்..!".

லேசான கடுப்புடன் திரும்பிய தில்லுதுர அவரிடம் சொன்னார்.

"கண்டிப்பா தர்றேன்..!" என்றவர் தொடர்ந்து சொன்னார்.

"ஆனா நீங்க கொஞ்சம் அவசரப் படறீங்கனு நெனைக்கிறேன். இவரு இந்தக் குழியைத் தோண்ட இன்னும் அரை மணி ஆகும். அதுவரை நீங்க வெயிட் பண்ணியே தீரணும்..!". என்றார்.



Friday, April 22, 2011

தில்லுதுர இன் ஆஸ்த்திரேலியா




ம்பெனி தான் வாங்கியிருந்த நிலங்களில் நவீன விவ்சாயம் பற்றி கற்று வருவதற்காக தில்லுதுரயை ஆஸ்த்திரேலியா அனுப்ப முடிவு செய்தது.

போவதற்கு முன்னரே எல்லோரும், 'ஆஸ்த்திரேலியர்கள் அடுத்த நாட்டவரை மதிப்பதில் சற்று கம்மியானவர்கள். அதனால், அவர்கள் எப்போது எது பற்றிப் பேசினாலும் அதைவிட பெரியதாய் நம் நாட்டில் இருப்பதைப்போல் பேசிவிடு. அப்போதுதான் உன்னை மதிப்பார்கள்..!' என்று ஏற்றிவிட, தில்லுதுர அதே மனதுடன் அங்கே வந்திறங்கினார்.

முதல்நாள் விவசாய நிலத்துக்கு தில்லுதுரயைக் கூட்டிப்போன ஆஸ்த்திரேலியர் அவரிடம் உழுவதற்கு உதவும் உயர்ரக காளை மாடுகளை காட்டினார்.

மாடுகளைப் பற்றி அவர் சொல்ல ஆரம்பித்ததும் தில்லுதுர கேட்டார்.

"என்ன மாடுகள் இவ்ளோ சின்னதா இருக்கு.? எங்க ஊரு மாடுக எவ்வளவு பெருசா இருக்கும் தெரியுமா..? இதைப்போல ரெண்டு மடங்கு சைஸ் இருக்கும்..!".

இந்தியாவைப் பற்றி முழுவதும் தெரிந்த அந்த ஆஸ்த்திரேலியர் கடுப்புடன் தில்லுதுரயை பார்த்துவிட்டு, ஒன்றும் பேசாமல் அடுத்த ஏரியாவுக்கு கூட்டிச் சென்றார்.

அங்கே வயல்வெளிகளில் பயணிக்க உதவும் குதிரைகளை காட்டினார்.

குதிரைகள் ஒவ்வொன்றும் அரேபியப் போர்க்குதிரைகள் போல மினிமினுவென்று உயர உயரமாய் நின்று கொண்டிருக்க, தில்லுதுர அசராமல் அவரிடம் கேட்டார்.

"என்ன குதிரை எல்லாம் இவ்ளோ சோப்ளாங்கியா இருக்கு.? எங்க ஊரு குதிரைகள் எல்லாம் என்ன சைஸ்ல இருக்கும் தெரியுமா.? இது மாதிரி ரெண்டு மடங்கு சைஸ்ல இருக்கும்..!".

கடுப்பாகிப் போன அந்த ஆஸ்த்திரேலியர், "அப்படியா..?" என்று மட்டும் கேட்டுவிட்டு அடுத்த வயலுக்கு கூட்டிப் போனார்.

போகும் வழியில், திறந்த வெளிகளில் ஓடிச் செல்லும் கங்காருக்களைப் பார்த்த தில்லுதுர அந்த ஆஸ்த்திரேலியரிடம் கேட்டார்.

"இது என்னது பாஸ் புதுசா இருக்கு..?".

கொஞ்சம்கூட எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் திரும்பிய அந்த ஆஸ்த்திரேலியர் ,தில்லுதுரயிடம் கேட்டார்.

"ஏம்பா... இந்தியால நீ வெட்டுக்கிளியை பார்த்ததே இல்லியா..?".

Thursday, April 21, 2011

ஓவியர் தில்லுதுர

தில்லுதுர வாழ்க்கையில் ஒரு படைப்பாளியாய் மாற முயற்சித்துக் கொண்டிருந்த காலம் அது.

பிசினஸ், பேங்க், லோன், அக்கவுண்ட் என வாழ்க்கை இப்படியே மெஷின்போல போய்விடுமோ என்று பயந்துபோய் விட்டார் அவர்.

'கிரியேட்டிவாய் யாராவது ஒரு ஐடியா சொல்லுங்களேன்..' என்று கேட்டபோது, அவர் நண்பர் ராஜாதான் ஓவியம் கற்றுக்கொள்ளும் யோசனையைச் சொன்னார்.

தில்லுதுரக்கும் அந்த ஐடியா பிடித்துப் போக, உடனே அதைச் செயல்படுத்த ஆரம்பித்தார்.

ஓரிரு மாதங்கள் தபால் மூலம், அப்புறம் லோக்கலில் ஒரு ஆசிரியரிடம் என்று ஒவியக்கலையை கொலை செய்யத் தொடங்கினார்.

மேலும் ரெண்டு மாதம் போயிருக்கும்.

தில்லுதுர வேக வேகமாய் ஓவியராய் வளர்ந்து கொண்டிருந்தார்.

நாய் படம் போட்டால் காக்காய் போலிருந்தது.

மயில் படம் போட்டால் மாரடோனா படம் போலிருந்தது.

தில்லுதுர கடைசியாய் ஓவியத்தில் தன்னுடைய ஏரியாவைக் கண்டே பிடித்துவிட்டார்.

அது... இனி நமக்கு மாடர்ன் ஆர்ட் தான் பெஸ்ட் என்பதே..!

முதன்முதலாய் ஒரு மிகப் பெரிய கேன்வாஸ் வாங்கி, எல்லா நேரமும் அதில் ஆயில் பெயின்டால் தீட்டிக் கொண்டே இருந்தார்.

அவருடைய 'தாட்'டுகள் அதில் ஏற ஏற... அந்த் ட்ராயிங் யாருக்கும் புரியாததாய் அற்புதமாய் வடிவம் பெற ஆரம்பித்தது.

அந்த ஓவியத்தை விடக் கொடுமை அவருடைய ஓவியம் குறித்த பேச்சுக்கள் தான்.

பிக்காஸோ,பிதாகரஸ்,வான்கா,டேலி போன்றோர் குறித்து அடிக்கும் லெக்சரர்கள் இருக்கிறதே, அனுபவித்தர்களால்தான் சொல்ல முடியும்.

எல்லாக் கொடுமையையும் தாண்டி, கடைசியாய் ஒரு ஆறு மாதத்தில் தில்லுதுர அந்த ஓவியத்தை வரைந்து முடித்தே விட்டார்.

அந்த ஓவியம் ஒன்றும் சாதாரண ஓவியம் இல்லையே..!

அதனால், அந்த ஓவியம் குறித்து அலுவலகத்தில் ஒரு அறிமுக விழா நடத்த முடிவு செய்து தேதியும் குறித்தாகிவிட்டது.

அறிமுக விழாவில், அந்த ஓவியமும் அதில் உள்ள தத்துவங்களும், சமகால ஓவியங்களில் அது எவ்வாறு சிறந்தது என்று ஒரு பேருரையும் நிகழ்த்தினார்.

எல்லா மொக்கைகளும் முடிந்த பிறகு ஏதவது ஒரு பொதுத் தொண்டு நிறுவனத்திற்கு அதை வழங்க முடிவு செய்து, எந்த நிறுவனதுக்கு வழங்கலாம் என்று சிறந்த ஐடியா தருபவருக்குப் பரிசும் அறிவித்தார்.

வந்த முடிவுகள் எவ்வளவோ இருந்தாலும், பரிசு பெற்ற ஐடியா ஒன்று இருந்தாலும்... ரிஜெக்ட் செய்யப்பட்ட ஒரு ஐடியாவையே சிறந்தது என்று அவர் நண்பர்கள் எல்லோரும் இன்றுவரை பேசி வருகிறார்கள்.

அது...

"இந்த ஓவியத்தை நீங்கள் கண்பார்வையற்றோர் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கலாம்..!" என்பதே.
.
.
.

ஷகிலாவின் லாக்கெட்



ஷகிலாவின் பரந்த மார்பில் எடுப்பாய் கிடந்த சங்கிலியையும் அதனுடன் இணைந்த அந்த அழகிய லாக்கெட்டையும் பார்த்த கமலா ஆர்வம் தாங்காமல் லேசாய் பொறாமையுடன் கேட்டாள்.

"இது என்னடி புதுசா லாக்கெட்..? எதுவும் ஞாபகச் சின்னமா..? லாக்கெட் உள்ள எதுவும் இருக்கா என்ன..?".

ஷகிலா புன்னகையுடன் திரும்பியவள் சொன்னாள்.

"ஆமாடி... என் கணவரோட தலைமுடியைத்தான் வச்சிருக்கேன்..!".

லேசாய்க் குழப்பத்துடன் கமலா கேட்டாள்.

"ஏண்டி... உன் ஹஸ்பண்ட் உயிரோட தான இருக்கார். அதுக்குள்ள இது எதுக்கு..?".

ஷகிலா சிரித்தபடி சொன்னாள்.

"அவருக்கென்ன குத்துக்கல்லாட்டம் நல்லாத்தான் இருக்காரு. ஆனா, தலையிலதான் ஒரு முடியும் இல்லியே..!".
.
.
.

Saturday, April 9, 2011

ஆஸ்ப்ரின்



ஜேக்கப் ஒரு கெமிக்கல் சைன்டிஸ்ட்.

எந்நேரமும் ஆராய்ச்சி, ஆராய்ச்சி, ஆராய்ச்சிதான் அவருக்கு.

எந்திரன் விஞ்ஞானி ரஜினி போல் எப்போதும் லேப்பிலேயே வாழும் ஆள் அவர்.

நிறைய அவார்டெல்லாம் வாங்கியிருக்கிறார் அந்தத் கெமிக்கல் துறையில்.

அன்றும் அப்படித்தான்... உடம்பில் ஏதோ அசௌகரியமாய் உணர்ந்த அவர், மெல்ல பக்கத்திலிருந்த மெடிக்கல் ஷாப்பை நோக்கி நடந்து போய் அங்கிருந்த ஃபார்மசிஸ்ட்டிடம் யோசனையுடன் கேட்டார்.

"தம்பி... உங்ககிட்ட இந்த அசிட்டிலலிசிலிக் ஆசிட் இருக்கா..?".

ஒரு விநாடி குழப்பமாய் அவரைப் பார்த்த ஃபார்மசிஸ்ட், திருமப அவரிடம் கேட்டார்.

"நீங்க ஆஸ்ப்ரினையா கேக்கறீங்க..?".

சற்றே யோசித்த ஜேக்கப் புன்னகைத்தபடி சொன்னார்.

"கரெக்டா சொன்ன... எனக்கு அந்த வார்த்தையே ஞாபகம் வர மாட்டேங்குது..!".
.
.
.

Thursday, April 7, 2011

அசிங்கமான மனைவி






தில்லுதுர வாழ்க்கையில் கடினமாகப் போராடிக் கொண்டிருந்த நேரம்.

எங்கு தேடினாலும் வேலை கிடைக்கவில்லை.

வேலை இல்லாததால் வருமானம் இன்றிப்போக, திருமணமும் தள்ளிக்கொண்டே போனது.

அவருக்கு உறவில் யாரும் பெண் கொடுக்கவும் தயாராயில்லை.

திருமண வயது தாண்டிக் கொண்டிருந்தது பற்றிய கவலையில் சுற்றிக் கொண்டிருக்கும்போது தான் தில்லுதுர ஒரு தினசரியில் அந்த விளம்பரத்தைப் பார்த்தார்.

ஒரு நல்ல பணக்காரப் பெண்ணுக்கு ஏற்ற வரன் கேட்டு வந்திருந்தது அந்த விளம்பரம்.

போய்ப் பார்த்தால், அந்தப் பெண்ணோ பார்க்கச் சகிக்க முடியாத அவலட்சணமாயிருந்தாள்.

'எவ்வளவு கோடி கொடுத்தாலும் வேண்டாம்..' என்று பெண்பார்க்க வந்தவன் எல்லாம் தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறான்.

வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டுமே...

'ஒகே..' சொன்னது தில்லுதுர மட்டும்தான்.

மஹாராஜா போல் தில்லுதுரயை யாரும் வேண்டாம் என்பார்களா என்ன..?

அந்தக் கோடீஸ்வரியும் தில்லுதுரயை செலெக்ட் செய்து விட்டாள்.

திருமணம் எல்லோரும் ஆச்சர்யப் படும்படி இனிதே முடிந்தது.

'பணத்துக்காக இப்படி ஒரு பெண்ணைக் கட்டுவானா ஒருவன்..?' என்ற நண்பர்களின் கேலிப் பார்வைகளை தில்லுதுர கண்டுகொள்ளவேயில்லை.

அதுதான் அப்படியென்றால், திருமணம் முடிந்து எங்கே சென்றாலும் அந்த அவலட்சண மனைவியையும் கையோடு உடன் அழைத்தபடியே சுற்றிக் கொண்டிருந்தான்.

மனைவி இல்லாமல் தில்லுதுரயை வெளியில் பார்ப்பது அபூர்வமாய் இருந்தது.

நண்பர்களுக்கோ இதுதான் ஆச்சர்யமான ஆச்சர்யமாய் இருந்தது.

ஒருநாள் ஒருவன் அதை தில்லுதுரயிடம் கேட்டும் விட்டான்.

"நன்பா... நீ பணத்திற்காகத்தான் அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டாயென்பது தெரியும். ஆனால், இந்த அளவுக்கு எங்கே போனாலும் அவளையும் கூடவே கூட்டிக் கொண்டு சுற்றுவதுதான் ஏன் என்று புரியவில்லை..!".

அவன் கேட்டு முடித்ததும் தில்லுதுர சோகமாய்ச் சொன்னான்.

"என் மனைவி கிட்ட ஒரு பழக்கம் இருக்கு. நான் அவளை விட்டு எப்பப் பிரிஞ்சு போனாலும் அவ எனக்கு ஒரு முத்தம் கொடுப்பா. பதிலுக்கு நான் அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்கணும். அது எப்படி முடியும் சொல்லு. அதனால, அதிலிருந்து தப்பிக்கத்தான் இப்படி அவளையும் கூடக் கூப்பிட்டுக்கிட்டே சுத்தறேன்..!".
.
.
.

Friday, April 1, 2011

டேனியும் தில்லுதுரயும்




அன்று அலுவலகத்திலிருந்து மாலை அபார்ட்மென்ட்டுக்கு வந்த தில்லுதுர, தனது நாயை பார்த்ததும் அரண்டுவிட்டார்.

பக்கத்து வீட்டு சுட்டிப்பையன் டேனி பாசமாய் வளர்த்து வந்த கிளிக்குஞ்சை வாயில் கவ்வியபடி நின்றிருந்தது நாய்.

கிளியின் உடலை கவ்வியதோடு விடாமல், மண்ணில் போட்டு புரட்டி எடுத்து வந்திருந்தது நாய்.

பார்த்ததுமே தில்லுதுரக்கு தெரிந்துவிட்டது... கிளி கண்டிப்பாய் இறந்திருந்தது.

'நம்ம நாய் கிளிய கொன்னுடுச்சுனு தெரிஞ்சா இந்த டேனிப்பய நம்ம சும்மா விடமாட்டானே..!'

வேக வேகமாய் வெளியே வந்து பார்த்த தில்லுதுர கொஞ்சம்போல நிம்மதியடைந்தார்.

டேனியின் வீட்டில் எல்லோரும் எங்கேயோ போயிருந்தார்கள்.

யோசித்த தில்லுதுர நாயின் வாயிலிருந்த கிளியைப் பறித்து, பாத்ரூமுக்கு கொண்டு போய் ஷாம்பூ போட்டுக் கழுவி, ஹேர் ட்ரையரை எடுத்து அதன் ரெக்கை எல்லாம் காயவைத்து, வேகவேகமாய் ஃப்ளாட்டின் வாசலில் இருந்த, அதனுடைய கூண்டுக்குள்ளேயே திரும்பப் போட்டுவிட்டு வந்துவிட்டார்.

இனி யாராவது பார்த்தாலும், அது இயற்கையாய் அதனுடைய கூண்டிலேயே இறந்ததாய்த்தானே நினைப்பார்கள்.

தெளிவாய் செய்துவிட்டாலும், குற்ற உணர்ச்சியில் டேனியையோ, அவன் வீட்டு ஆட்களையோ ரெண்டு மூணு நாட்கள் பார்க்காமலேயே சுற்றிக் கொண்டிருந்தார் தில்லுதுர.

ஆனால், சனிக்கிழமை மாலை காரை கொண்டு நிறுத்தியபோதே வாசலில் விளையாடிக் கொண்டிருந்த டேனி, தில்லுதுரயைப் பார்த்து ஓடி வந்தான்.

"அங்கிள்... உங்களுக்கு தெரியுமா.? என்னோட கிளி ஸ்நூஃபி செத்துப்போச்சு..!".

பாசமாய் சொல்லும் டேனியின் முகத்தை பார்க்க முடியாமல் தில்லுதுர, வருத்ததுடன் சொன்னார்.

"அப்படியாடா... பாவம் ஸ்நூஃபி. என்னாச்சு..?".

தில்லுதுர கேட்டதும் டேனி கண்களை விரித்துக் கொண்டு ஆச்சர்யமாய் சொன்னான்.

"அங்கிள்... அது ஒரு நாள் கூண்டுக்குள்ளயே செத்துக் கிடந்தது அங்கிள். எனக்கு பயங்கரமா அழுகை அழுகையா வந்துச்சு. அப்பறம், அதை நானும் அப்பாவும் அதை எடுத்துட்டு போயி ஃப்ளாட்டுக்கு பின்னாடி தோட்டத்துல பொதச்சுட்டோம். அதுக்கு அப்பறம், அப்பா என்னையும் அம்மாவையும் சாப்பிட வெளிய கூட்டிட்டு போயிட்டாரு. திரும்பி வந்து பார்த்தா யாரோ ஸ்நூஃபிய பொதச்ச எடத்துலருந்து எடுத்து குளிப்பாட்டி, திரும்ப அதோட கூண்டுலயே கொண்டு வந்து போட்டிருந்தாங்க அங்கிள். ஸோ ஃபன்னி..!" என்றான் டேனி.
.
.
.